ShareChat
click to see wallet page
search
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.03.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======= என்றுமா கிருஷ்ணர் இப்படியே சொல்லிடவே அன்றந்தத் தேவன் அவரடியைத் தான்போற்றி அய்யாவே பூமிதனில் அவதரிபோ என்றீரே பொய்யா னகலியன் பூமிதனி லேபிறந்தால் பிறந்த வழியும் பிதிருமந் தக்குலமும் அறந்தழைக்கு மாலே அதுவுமென் னாற்கெதிதான் பெற்றுக்கொள் ளும்படியாய்ப் புத்தி கொடுத்தருளிப் பற்றுத லாகப் பலன்கொடுப்போ மென்றுசொல்லும் அல்லாம லென்னைவந்து ஆட்கொள்ளும் நாளதுதான் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமையா . விளக்கம் ======== மகாவிஷ்ணு இவ்வண்ணமாகச் சொன்னவுடன் சம்பூரணத் தேவன் மகாவிஷ்ணுவின் மலரடியை வணங்கியவாறு, அய்யா, என்னைப் பூலோகத்தில் பிறக்கப்போ என்று சொல்லுகிறீர்களே அந்த பூலோகம் இப்போது கலியர்களின் கபடமான பிடியில் அல்லவா சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. தர்மத்தின் பிறப்பிடமே, பொய்யான கலி உலவும் பூலோகத்தில் நான் போய்ப் பிறந்தால், நான் பிறந்த வழியும், அவ்வழியின் முன்னோரும், அக்குலமும் என் மூலமாக உயர்வு பெறும்படியாக அறிவைக் கொடுத்தருள்வதோடு, அவர்களோடு தாங்கள் எப்பொழுதும் இசைவோடு இருந்து நற்பலன் கொடுப்பேன் என்று தாங்கள் எனக்கு வாக்குறுதி தரவேண்டும். அதுமட்டுமின்றி தாங்கள் வந்து என்னை ஆட்கொள்ளும் நாளையும் விவரமாகச் சொல்லி அனுப்புங்களய்யா என்று வேண்டினான். . . அகிலம் ======== அப்பொழு தந்த ஆதிநா ராயணரும் செப்புகிறா ரந்தத் தேவன் தனக்குத்திடம் தெச்சணா பூமிதனில் தேசபர சோதனைக்கு நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக் கடையாளம் பூமியி லோர்திக்குப் பொருந்தி மிகவாழும் சாமிவே தமறந்து சுழல்வேத முண்டாகும் சாதி வரம்பு தப்பி நிலைமாறும் பாரிகட்கு மூப்புப் பார்மீதி லுண்டாகும் நீசக் குலங்கள் நெளுநெளெனப் பூமிதனில் தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் வானத் திடிகள் வருடவரு டந்தோறும் நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும் சீமை தென்சோழன் சீர்பயிரு மேவிவரும் இலைகள் கருகும் இருவேதம் பொய்யாகும் தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும் நச்சேத் திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும் பொய்ச்சேத் திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும் நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும் சிவ்வா லயங்கள் தேய்ந்து சுவரிடியும் கிணறு பாழாகும் கீழூற்றுப் பொய்யாகும் இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள் மனுக்கள் தங்களுக்கு மாகலச லுண்டாகும் . விளக்கம் ======== சம்பூரணத்தேவனின் அவ்வுரையைக் கேட்ட மகாவிஷ்ணு, சம்பூரணத்தேவனுக்கு நம்பிக்கையை ஊட்டும் வகையில், வைகுண்ட அவதார உதயம் ஏற்படும் காலகட்டத்தில் நிகழவிருக்கும் உலக நியதிகளைப் பற்றி எடுத்து உரைக்கிறார். . உலகத்தைப் பரிசோதிப்பதற்காக தெச்சணா பூமியில் நிச்சயமாக நான் அவதரிப்பேன். நான் அவதரிக்க இருக்கும் அந்தக் காலகட்டத்தை உணர்வதற்கான நிதர்சனமான அடையாளம் யாதெனில், உலகில் ஒரே ஒரு பகுதியில் மட்டுமே மக்களெல்லாம் மன ஒருமைப்பாட்டுடன் வாழ்வார்கள். . இறைவனைப் போற்றிப் புகழ்ந்து வழிபடுவதற்கு வகை செய்கின்ற வேதாகமக் கருத்துக்களைப் போதிக்கின்ற நிலையை மக்கள் மறந்து விடுவார்கள். ஆகவே, தெய்வ நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து, உலகில் கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறை மேலோங்கி வரும். . ஆண், பெண் ஆகிய இரு இனத்தாரும் அவரவருக்கான எல்லையை மீறுவர். ஆதனால் நிலை தடுமாற்றம் ஏற்படும். உலகில் இல்லத்தரசிகளின் அதிகாரம் மேலோங்கும். கெட்ட புத்தியுடைய கொடிய நிசர்கள் உலகெங்கும் கொடிப்படைபோல் படர்ந்து இருப்பார்கள். அவர்கள் ஒழுக்கத்திலும், பழக்க வழக்கத்திலும் மேன்மையுடையோரை எல்லாம் தொல்லைப்படுத்தி புண்படச் செய்து புறக்கணிப்பார்கள். . வருடா வருடந்தோறும் வானத்து இடிகள் வையகத்தில் விழும். அதனால் மலைகள் குமுறும், எனவே பூமி அதிரும். ஆகவே சூரியன் சற்று சாய்ந்தே வரும். . சோழ நாட்டின் தென்பகுதிகளிலெல்லாம் செழிப்பாக வளர்ந்த பயிர்களைக் கூட மண்ணோடு மண்ணாக நிரவ வேண்டிய நிலைமை ஏற்படும். தாவரங்களின் இலைகள் யாவும் கரிந்து போகும். ரிக், யசூர், சாம, அதர்வண ஆகிய நான்கு வேதங்களில் இரண்டு வேதங்கள் பொய்யாகிவிடும். ஜனத்தொகைப் பெருக்கத்தின் காரணமாக மக்கள் எங்கே போவது என்ன செய்வது என்றறிய இயலாமல் தடுமாற்றம் அடைவார்கள். . வானத்திலுள்ள நட்சத்திரங்கள் உதிர்ந்து பூமியில் விழும். வண்டி, வாகன அதிகரிப்பினால் நடந்து செல்லும் பயணங்கள் குறையும். அதனால் மிகத் தூரமான ஊர்கள் கூட சமீபமாகவே தோன்றும். பொய்யான பூசாரிகள் கோயில்களில் பெருக்கமாக இருப்பார்கள். . நவ்வா துலுக்கர் நாடுகளிலெல்லாம் போராட்டம் யுத்தம் போன்றவற்றால் பெருங்குழப்பம் ஏற்படும். வழிபாட்டு ஆலயங்களெல்லாம் பராமரிப்பாரற்றுப் பாழாகும். நிலத்தடி நீரற்றுக் கிணறுகளெல்லாம் மூடப்படும். பிள்ளைப் பேறு அதிகரிப்பால் மக்கள் மிக இன்னல்களுக்குள்ளாவார்கள். அதனால் மிகப்பெரிய குழப்பம் உண்டாகும். மதக் குரோதப் பகையினால் உலகில் துரோகச் செயல்கள் மிகுந்து நடைபெறும். . . தொடரும்... அய்யா உண்டு.
Ayya Vaikundar - DMuthu Prakash] 08 March 2026 7:44 pm DMuthu Prakash] 08 March 2026 7:44 pm - ShareChat