கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த திட்டங்கள் குறித்த 14 அப்டேட்டுகளை கொடுத்திருக்கும் தமிழ்நாடு அரசு, தகுதியானவர்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மற்றும் தகுதியான நபர்களுக்கு தெரியப்படுத்தவும்.
ரேஷன் கார்டு அப்டேட்
ரேஷன் கடைகளில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இனி ரேஷன் கடைகளுக்கு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே பணம் செலுத்திக் கொள்ளலாம்.
கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதியத் திட்டம்
கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூ. 1200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தற்போது 28,108 கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 60 வயதை நிரம்பியவர்கள் பயன்பெறலாம். பழைய ஓய்வூதியம் 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அதில் கூடுதலாக 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படுகிறது.
வணிகர்களுக்கு திருமண உதவி
தமிழ்நாடு வணிகர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வாரியம் வணிகர்களுக்கு திருமண உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம்
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 8000 ரூபாய் உதவித்தொகை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களைப் போல் தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.
இலங்கை அகதிகளுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள்
இலங்கை அகதிகளுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள் OAP, DAP, DWP, DDWP ஆகிய திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட தகுதிகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன. tnesevai.com -ல் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.
தாட்கோ அறிவிப்பு
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tahdco.com/ பதிவு செய்து பயிற்சி பெறலாம்.
இதேபோல், அமேசான் வலை சேவைகள் re/Start - AI Programmer பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான
செயற்கை நுண்ணறிவில் நிபுணத்துவம் பெற https://iei.tahdco.com/aws_reg.php என்ற பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஓய்வூதிய திட்டம் அப்டேட்
தமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 35,43,159 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர் என அரசு கூறியுள்ளது.
அன்பு கரங்கள் திட்டம்
தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அன்பு கரங்கள் திட்டம் மூலம் பெற்றோரை இழந்த 10,637 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு 18 வயது அடையும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்
தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 6650 கோடி ரூபாய் செலவு செய்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.5000/- வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதில், பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000, கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலிடம்
புதிய காற்றாலைகளை மீண்டும் புதுப்பித்தல் கொள்கையை செயல்படுத்துவதில், தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இதுவரை 27.67 மெகாவட் திறன் கொண்ட பழைய காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
திறன் மேம்பாட்டு பயிற்சி
படித்த இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகள் பெற்றிட உதவும் நான் முதல்வன் திட்டம். 48.65 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 1.17 இலட்சம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தூய்மை பணியாளர்களுக்கான திட்டம்
இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதியம்
தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாத ஓய்வூதியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. 50 வயதுக்கும் மேலானவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும் #📢பிப்ரவரி 13 முக்கிய தகவல் 🤗


