உ.பி.யில் வீட்டில் தொழுகை நடத்தியவர்கள் மீது வழக்கு: மாவட்ட ஆட்சியர், எஸ்எஸ்பி பதில் அளிக்க நோட்டீஸ்
புதுடெல்லி: உத்தரபிரதேசம் பரேலியின் முகமதுகஞ்ச் கிராமத்தில் மசூதி இல்லாத நிலையில் ரேஷ்மா கான் என்பவரின் வீட்டில் கடந்த ஜனவரி 16-ம் தேதி கூட்டாக தொழுகை நடத்தப்பட்டது.
இதுகுறித்து ராஷ்டிரிய இந்து தளம், பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்து அமைப்புகள் பிஷாரத் கஞ்ச் காவல் நிலையத்தில் புகார் செய்தன. இதையடுத்து, தொழுகை நிறுத்தப்பட்டதுடன் 12 பேர் மீது பொது அமைதியை குலைத்ததாக வழக்குப் பதிவானது.
இந்நிலையில் வரும் பிப்ரவரி 19-ல் ரம்ஜான் மாத நோன்பு துவங்குகிறது. இந்த நாட்களில் தனது வீட்டில் கூட்டாக தொழுகை நடத்த அக்கிராமத்தைச் சேர்ந்த தாரீக் கான் என்பவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அத்துல் ஸ்ரீதரன், எஸ்.ஏ.சித்தார்த் நந்தன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது தாரீக் கானிடம் இதுபோல் ஒரு மனு அளிக்க வேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு தாரீக் கான் தனது கிராமத்தில் 12 பேர் மீது பதிவான வழக்கை சுட்டிக்காட்டினார்.
இதைக் கேட்டு வியப்படைந்த நீதிபதிகள், தனியார் வளாகத்தில் பிரார்த்தனை செய்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை என்ற முந்தைய ஒரு தீர்ப்பை நினைவுகூர்ந்தனர்.
ஒரு கிறிஸ்தவ குழு தொடர்புடைய வழக்கில் இத்தீர்ப்பு கடந்த ஜனவரி 27-ல் வெளியானது. எனவே, இந்த விதி முஸ்லிம்களின் தொழுகைக்கும் பொருந்தும் என்று நீதிபதிகள் கூறினர். மேலும் பரேலி கிராமத்தில் பதிவான வழக்கு நீதிமன்ற அவமதிப்புக்கு உரியது என முடிவு செய்தனர்.
இதையடுத்து பரேலி மாவட்ட ஆட்சியர் அவினாஷ் சிங், எஸ்எஸ்பி அனுராக் ஆர்யா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதில், ‘‘12 பேர் மீது வழக்குப் பதிவு செய்ததற்காக உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது?’’ என கேள்வி எழுப்பியுள்ளனர். இவ்வழக்கை மார்ச் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர். #👨மோடி அரசாங்கம்


