கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
சிவன், விஷ்ணு, உமை மூவரையும் சப்த மாதர்கள் துதித்தல்
====================
விருத்தம்
=========
வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி
சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி
நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி
சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி
.
விளக்கம்
=========
சிவபெருமான், மகாவிஷ்ணு உமாதேவி ஆகிய மூவரையும் வரவேற்று மகிழ்ந்த மாதர்கள் ஏழுபெரும் தம்முடைய தலை, வாய், இருசெவிகள், இருபுஜங்கள், இரு கைகள் ஆகிய எட்டு உறுப்புக்களையும் நிலத்தில் தோய்த்து, அம்மூவரின் திருப்பாதங்களுக்கும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டே எங்களுக்கு அருள்புரிவதற்காக எங்களைத் தேடிவந்த உங்கள் மூவரையும் துதிக்கின்றோம். தாய்த் தெய்வமான உமாதேவியின் கணவரே உம்மைத் துதிக்கின்றோம். மக்களை வாசனையால் மகிழ்விக்கும் சந்தனத்தைப் போன்றும், உலகத்தைத் தழைக்கச் செய்யும் மழை மேகத்தைக் கண்டதும் மகிழ்ச்சியால் ஆடுகின்ற மயிலைப் போன்றும் எங்கள் நலன்கருதி மகிழ்ச்சியோடு வந்த மாதாவே ! ஆறு முகத்தோனாகிய முருகப்பெருமானின் தாயே ! உம்மை துதிக்கின்றோம்.
.
யாதவர் குலத்து அரசனாகிய நந்தகோபனிடம் கண்ணனாக வளர்ந்த அரசே ! எங்கள் நாதனே ! நீதிமானே ! எங்கள் எண்ணத்தில் கண்ணானவா ! உம்மை நாங்கள் எங்கள் உயிர் மூச்சாக சுவாசிக்கும் சிவ சிவா என்னும் மகா மந்திரத்தால் துதிக்கிறோம்.
.
.
அகிலம்
=======
மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல
நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி
சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி
பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி
.
விளக்கம்
=========
குறோணி என்னும் கொடிய அரக்கனின் கொடுஞ் செயலில் சிக்கிவிடாதபடி எலகத்தை மீட்டுவதற்காக முதன்முதலில் தவமிருந்து ஈஸ்வரனால் மாதவன் என்ற போற்றுதலைப் பெற்ற தவப்பொருளே ! உம்மைத் துதிக்கின்றோம், வேதங்களாலும் நின் ஆதி அந்தத்தை அறிந்து உரைக்க முடியாத வல்லமை மிகுந்த நீதிமானே ! அணுவுக்கும் அணுவாகி அழியா உடலுடைய சித்தா ! உம்மைத் துதிக்கின்றோம்.
.
குளுமையின் வாழ்விடமாகிய உமாதேவியே ! நன்மைகளைத் தருகின்ற தெய்வீக அழகே ! உம்மைத் துதிக்கின்றோம். மாபெருந் தவத்தோனே ! அன்றொருநாள் அயோக வனத்தில் அக்கினி சொரூபமாய் நின்று எங்கள் ஏழுபேருக்கும் குளிர் அகற்றி குழந்தை பெறச்செய்த தோழனே ! உம்மைத் துதிக்கி்றோம்.
.
.
அகிலம்
========
மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி
தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே
காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற
தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி
.
விளக்கம்
=========
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளாகவும் இருந்து, அந்த மூவரும் தேடுகின்ற நிலையில், அடி முடி காண முடியாதபடி அனைத்தையும் கடந்துநின்ற பரப்பிரம்மமே ! உம்மைத் துதிக்கின்றோம். எப்போதும் விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களுக்குக் கூட எளிதில் கிட்டாத பாக்கியமே ! தெய்வீக அழகே ! அமிழ்த கங்கையையுடைய அயோக வனத்தில் எங்கள் ஏழு பேரின் கற்பை அழித்து அங்கேயே எங்களை கைவிட்டு மறைந்த அக்கினிச் சுவாலையே ! எங்களுக்கு குளிர்போக்கிய துணைவா ! எங்கள் கணவா ! தவப்பொருளே ! உம்மைத் துதிக்கின்றோம்.
.
.
அகிலம்
=======
மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா
காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல்
ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல்
வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே
.
விளக்கம்
=========
காளை வாகனாதிபதியாகிய மகாபரனே ! அர்த்தநாரீசுவரா உமக்குச் சேவை செய்து கொண்டிருந்த நாங்கள் ஏழு பெண்களும் கன்றை இழந்த பசுவைப்போல் கானகத்தில் ஊண் உறக்கமின்றி, கனவு கண்ட ஊமை தான் கண்டகனவுக் காட்சியை யாரிடமும் சொல்ல முடியாமல் திணறுவதைப் போன்று திணறிக் கொண்டிருந்தோம். எங்களுடைய மன உளைச்சலை உணர்ந்து நீங்கள் மனம் இரங்கி வந்ததினால் எங்கள் துயரமெல்லாம் தீர்ந்து விட்டது.
.
.
அகிலம்
========
தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல்
ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல்
சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு
வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே
.
விளக்கம்
=========
நாங்கள் இதுநாள்வரை அனுபவித்த துன்பங்கள் யாவையும் உங்களைக் கண்ட உடனே மறந்து விட்டோம். ஆகவே இனி எங்களை மீண்டும் கயிலைக்கு அழைக்காமல், நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஏழு பேரையும், அவர்களின் சந்ததியரையும் எவ்விதக் குறையும் இல்லாமல் தந்தருளுங்கள்.
அதற்குச் சான்றாகிய எங்கள் கணவர் மகாவிஷ்ணுவையும் எங்களுக்குத் தந்து, நாங்கள் இந்தப் பூலோகத்தில் ஒருமித்து வாழ்வதற்கான வரத்தினை அருளுங்கள் அழவில்லா வேத முதலோனே ! என்று ஏழு மாதர்களும் தம் கோரிக்கையை வாஞ்சையோடு வலியுறுத்தினர்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar


