மனம் அன்பால் நிறைந்திருப்பது;
எல்லோரையும் அன்பாக நடத்துவது. தெரிந்தவர், தெரியாதவர் என அனைவரையும் மதி்த்து நடப்பது.
இந்த மாதிரி ஒரு அன்பான பயணத்தில், யாராலாவது நாம் ஏமாற்றப் படலாம், பாதிக்கப் படலாம், அப்படியான நேரங்களில் நம் பயணம் தொடர வேண்டி, அவர்களுக்கு புரிய வைக்க முயற்சிக்கலாம், முடியவில்லை எனில் விலகி முன்னோக்கிப் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒருவரிடம் மட்டுமே தேங்கிப் போகும் அன்பு, அன்பாக இல்லாமல் நாளடைவில் வியாபாரமாகிப் போகிறது! நம் சக்தியை தாண்டி நம் அன்பை அவருக்கு உணர வைக்க உடலாலும், பணத்தாலும், நேரத்தாலும் பல முயற்சிகள் எடுக்கிறோம். அவை ஒரு நாள் அலட்சிப் படுத்தப்படும் போதோ, இல்லை நம் அன்பிற்கு ஈடாக அவர்களிடம் நாம் அன்பை, புரிதலை எதிர்பார்க்கும் பொழுதோ, அங்கு அன்பு மறைந்து வியாபாரமாகிறது!
வழியில் ஒரு தெரு நாய் வற்றிய வயிறுடன் நம் பின்னே வருகிறது. மனதில் அன்பிருந்தால், அதன் பசியின் வலி நமக்குப் புரியும். அருகில் இருக்கும் கடையில் புரையோ, பிஸ்கட்டோ வாங்கிப் போட்டு அது அவசரவசரமாக சாப்பிடுவதைப் பார்க்க ஒரு திருப்தி மனதினில் தோன்றும். தினமும் அவ்வழி நாம் செல்பவராக இருந்தால் தினம் தினம் கூட நம் வசதிப்படி ஒரு பிஸ்கட் பாக்கெட்டை வாங்கி, 5 நிமிடம் செலவழித்து அதற்குப் போட்டு, அது உண்பதைப் பார்த்து திருப்தியுடன் அகலலாம். (மனதில் கொள்ள வேண்டியது அகலலாம்).
நமக்கு நாயின் மேல் பிரத்யேக அன்பிருக்கலாம். அதற்காக பார்க்கும் தெரு நாயெல்லாம் வீட்டிற்குக் கூட்டி வந்து வைத்து மூன்று வேளை உணவளித்தல் நம்மால் இயலும் காரியமா? அப்படியே இன்று இயன்றாலும், என்றென்றும் இயலுமா? அப்படி இயலாமல் போகும் நேரம் அவற்றை வெளியில் துரத்த முடியுமா? துரத்தினால் அவற்றை நாம் முதலில் கூட்டி வந்த்தற்கே அர்த்தமில்லாமல் போய்விடும். துரத்தி விட்டாலோ, நாமும் வாழாமல், கண் முன்னே அவையும் கஷ்டப்படுவதைக் காணும் சித்திரவதை தான் அனுபவிக்க வேண்டும்.
இல்லை, அந்த ஒரு நாயை மட்டும் நாம் அழைத்து வந்து, வீட்டில் வைத்து நாம் பார்த்துக் கொள்கிறதென முடிவெடுத்தால், மற்ற நாய்கள் நம் அன்பிற்கு உகந்தவையில்லையா? பாரபட்சம் பார்ப்பது உண்மையான அன்பாகுமா? அப்பொழுது அந்த ஒரு நாயுடன் சுருங்கி விட்ட நம் அன்பு என்னவெல்லாம் நம்மை செய்யும் தெரியுமா? ஏதோ ஒரு வேகத்தில் அது நம்மைப் பார்த்து குரைத்து விட்டால் நமக்கு அதற்கு மேல் கோபம் வரும். தெருவில் அனாதையாக சோற்றுக்கு வழியின்றி நின்றிருந்த உன்னை அழைத்து வந்து சீராட்டி வளர்க்கும் என்னை பார்த்தே குரைக்கிறாயா என நாமும் பதிலுக்கு குரைப்போம். இல்லாவிட்டாலும் அதன் பிரிவு, மரணத்தினாலோ, இல்லை வேறெந்த காரணத்தினாலோ நிகழ்கையில் தாங்க இயலாது தவிப்போம். இழப்பை ஈடு செய்ய வேறு நாயின் துணை தேடுவோம். இல்லையெனில் இனி நாய்கள் மீது அன்பே வைக்கலாகாது என முடிவெடுப்போம். சிந்தித்துப் பார்த்தால் இதுவும் நமக்கும் நாய்க்குமான ஒரு வியாபார ஒப்பந்தமாகத் தான் ஆக்கி வைத்திருக்கிறோம் என்பது புரியும்.
தெருவில் பல நாய்கள் மட்டுமல்ல, ஆடுகள், மாடுகள், பறவைகள், பூனைகள், ஏன் மனிதர்கள் கூட உணவில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். நம் மனதில் அன்பிருந்தால் கண்ணில் மற்றவர் படும் கஷ்டம் தென்படுகையில், அந்த நிமிடம் நம்மால் என்ன செய்ய இயலுமோ, அதை செய்து விட்டு கடக்கலாம், இல்லை மேலும் எதுவும் ஆக்கபூர்வமாக எதாவது வழி வகை செய்யலாம்.
கடக்கும் அத்தனையும் / அனைவரையும் நாம் ஒருவர் தாங்கவும் முடியாது, அப்படி அதில் ஒன்றை மட்டும் தாங்க முயல்கையில் இயற்கை அதற்கு அளித்திருக்கும் தானாக வாழும் உந்துதலையும் நாம் கொன்று, நம் மனதில் இருக்கும் அன்பும் குறுகி நாளாவட்டத்தில் அது இருவருக்குமே கெடுதலையே செய்யும்.
அன்பென்பது கால ஓட்டத்தில் கடக்கும் ஒவ்வொரு உயிரின் மீதும் அன்பை செலுத்திக் கொண்டுப் பயணம் தடைபடாமல் போகுமிடமெல்லாம் அன்பை விதைத்துக் கொண்டே செல்வது தான். அது மட்டுமே இந்த உலகம் அன்பால் நிறைய வழிவகுக்கும்.
அன்பாகவே வாழ்வதற்கும், ஒரு சிலரின் மேல் மட்டும் செலுத்தும் அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிவோம். இயற்கை சீற்றங்களின் போது களத்தில் இறங்கி பல இன்னல்களைப் பொருட்படுத்தாமல் பலர் வேலை செய்கின்றனர். அது தான் இயற்கையாக இருக்கும் அன்பு. நாளை நாம் காப்பாற்றியவர்கள் நம்மிடம் நன்றியோடு இருக்க வேண்டும் என்றோ, நமக்கு பிரதி உபகாரம் செய்வார்களா என்றோ இம்மியளவு சிந்தனை கூட இல்லாமல், அந்த இக்கட்டிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவது மட்டுமே குறிக்கோளாக செய்கையில் தன் எந்த இன்னல்களையும் பொருட்படுத்துவதில்லை!
ஆனால் சில தனி மனிதர்களை மட்டும் தேர்ந்தெடுத்து நாம் அன்பு செலுத்துகையில் ஆவது என்ன? நம் கவனம், ஆசை, பாசம், பந்தம் என அத்தனையும் அவர்கள் மேல் வைத்து, அதற்காக இரவு பகலாக அன்பைப் பொழிகிறேன் என நம் வாழ்வு, செயல் அனைத்தையும் அவர்களுடன் சுருக்கி, அதனால் நம் மீதே கழிவிரக்கம் கொண்டு, அவர்களிடமிருந்து நன்றி, அன்பு,, அரவணைப்பு என எதிர்பார்த்து, ஏமாறும் நேரம் அன்பே மாயை என வேதாந்தம் பேசி, தன் அன்பை புரியாதவர்கள், தன் மீது யாருக்கும் அன்பில்லை என மருகி.
அன்பின் பாதையில், கடப்பவர்கள் அனைவருமே அன்பிற்குரியவர்கள் தான். சில நாய்கள் வாலாட்டும், சில நாய்கள் குரைக்கும், சில நாய்கள் கண்டு கொள்ளாமல் போகும். வாலாட்டும் நாயை தடவிக் கொடுத்து பிஸ்கட் போடலாம், குரைக்கும் நாயிடம் தள்ளி போட்டு விட்டுச் செல்லலாம், கண்டு கொள்ளாத நாய்களுக்கு நாம் போடுவதைப் போடுவோம், உண்பதும் உண்ணாததும் அதன் விருப்பம் எனக் கடக்கலாம்.
எந்த உயிரும், அதன் தேவையும், அதன் உணர்வுகளும், அதன் செயலும் நம் கட்டுப்பாட்டில் இல்லை! இயற்கையாக, அன்பாக செய்ய வேண்டியதை செய்து கொண்டு, கிடைக்கும் அன்பை அழகாக ஏற்று, கடி படாமல் நம்மைக் காத்துக் கொண்டு பயணம் தடைபடாமல், தேங்கி நிற்காமல் போய்க் கொண்டே இருத்தல் நலம். 😊😊😊 #உற்சாக பானம் #பொழுது போக்கு #👪 cute family members 👪 #உற்சாக பானம்# #கதை சொள்ளரோம்


