கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
உமயவள் மகாவிஷ்ணுவை கயிலைக்கு அழைத்தல்
=========================================================
முடியுமடி யில்லா முதலே முதற்பொருளே
அரிஹரிநா ராயணரே அண்ணரே அச்சுதரே
கரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே
இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால்
அலச்சல்செய் தெங்களையும் அகற்றிவைத்துப் போனீரோ
பாவிக் கலியனுட பழிசாபச் சூட்சியினால்
பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே
.
விளக்கம்
==========
தொடக்கமோ முடிவோ இல்லாத மூலாதாரமான முதற்பொருளே, அரி நாராயணரே, அண்ணரே, அச்சுதரே, கரியமாலே, கண்ணரே, கார்வண்ணரே, மிகவும் கேவலமான மகாபாதகனும், ஏமாற்றத்தை எதிர்கொள்ளவிருக்கும் கலியனுமாகிய நீசனின் வரவினால் எங்களுக்கு மனவுளைச்சல் ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் எங்களை விட்டுத் தாங்கள் அகன்று இருப்பது எதற்காக?
.
மகாபாதகனாகிய கலியனின் பழி சாபச் சாபச் சூழ்ச்சியினால், வண்டுகள் அமர்ந்து அருந்தவேண்டிய மலரமுதை, தவளைகள் அமர்ந்து உண்ணுவதைப் போன்று நாம் செய்ய வேண்டியவற்றை எல்லாம் அந்தக் கலிநீசன் செய்து கொண்டிருக்கிறானே.
.
.
அகிலம்
========
கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும்
சலிவாகி மேனி சடல மிகத்திமிர்த்து
இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறா ரீசுரரும்
உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும்
நின்னயமில் லாக்கலியன் நீசன் பிறந்ததினால்
என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும்
வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய்
நானும்பர மேசுரரும் நலநஷ்டமுந் தெரியோம்
பேசிப் பழக்கமிட்டுப் பெருத்தநா ளுண்டுமண்ணே
தோசிக் கலியனுட சூட்சியினால் நாங்கள்படும்
பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன
நாட்டைக் கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன்
அல்லாமல் நம்முடைய அருமைச்சான் றோர்கள்படும்
பொல்லாங்கை யெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும்
.
விளக்கம்
==========
அந்தப் பொல்லாக் கலியனின் ஏதுவினால் உம்முடைய மைத்துனர் கபாலீஸ்வரர் மிகவும் மனந்தளர்ந்து, உணர்வற்ற உடலோடு கண்களை வடியவராயத் தலைகவிழ்ந்து இருக்கிறார். அதனால் கயிலையே இருள் மூடியுள்ளது.
.
தங்களின் மைத்துனராகிய சிவபெருமானின் திருமேனியிலுள்ள இயல்பான சுவடுகளில் ஏதோ ஒருவித மாற்றம் தென்படுகிறது. நிலையாக நிச்சயிக்க முடியாத அந்த கபடமான கலிநீசன் பிறந்த நாள் முதலாய் ஈசர் என்னோடு பேசியதேயில்லை. அந்தக் கேடுகெட்ட மாநீசன் கயிலைக்கு என்று வந்தானோ அன்றிலிருந்து நானும் உம்முடைய மைத்துனரும் எந்த விதமான லாப நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளவும் முடியவில்லை. அதுபற்றி மனம் விட்டு உரையாடவும் வழியில்லை.
.
அண்ணா, தோசம் நிறைந்த அந்தக் கலியனுடைய சூழ்ச்சியினால் நாங்களெல்லாம் அனுபவிக்கும் இன்னல்களை ஏறிட்டுப் பாராமல் எங்களை எளக்காரம் செய்கிறீர்களே அது ஏன்?, நன்றிகெட்ட அந்தக் கலிநீசன் இந்த உலகத்தையே உருப்படாமல் ஆக்கிவிட்டான். அதுமட்டுமின்றி, நம்முடைய அருமைக்குப் பாத்திரமான சான்றோர்களையெல்லாம் சஞ்சலத்தில் ஆழ்த்திவிட்டான். அந்தச் சான்றோர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் அவலங்களையெல்லாம் தாங்கள் அகற்றி வைக்க வேண்டாமா? எழுந்தருளுங்கள் அண்ணா…
.
.
அகிலம்
=======
வரமீறியக் கலியன் மாய்கையி னேதுவினால்
பிரமன் பிறப்புப் பிசகித் தலைமாறி
முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில் லாப்பிறவி
பிண்டப் பிறவி பேருறுப் பில்லாப்பிறவி
தலையுடம் பில்லாத சடலப் பிறவியைப்போல்
நிலைதவறி வேதா நினைவுதடு மாறினனே
.
விளக்கம்
=========
பிறப்பு விதிகளை மீறிய கலியின் மாய்கையினால், படைப்பு கர்த்தனாகிய பிரம்மன் கூட நிலை தவறி தடுமாற்றம் அடைந்துவிட்டார். எனவேதான், இயற்கைக்கு மாறாக கலியன் தலைமாறிப் பிறந்திருக்கிறான். அந்த கலியன் பிறக்கும்போது அவனுக்குத் தலையோ, முகமோ, கண்களோ ஏனைய உறுப்புகளோ இல்லாத முண்டமாகவே தோற்றமளித்தான். சிவபெருமானும் அந்நேரம் ஒரே நினைவில் இல்லாததால்தான் அவனுக்கு உயிர் கொடுக்கும்போது, பாவக் குணங்களைக் கொண்ட உயிராக அவனுக்குக் கொடுத்திருக்கக் கூடும்.
.
.
அகிலம்
=======
சீவன் கொடுக்கும் சிவனுக் கிருநினைவாய்ப்
பாவக் குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும்
படியளக்க நீரும் பண்புற் றிருக்காமல்
குடிகேடு மாச்சே குடிக்கக் கிடையாமல்
இத்தனை யுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே
அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே
எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே
சங்கடங்க ளெல்லாம் தான்சொல்லக் கூடாது
.
விளக்கம்
=========
ஆனால் உணவு முதலான அனைத்தையும் அருளுகின்ற தாங்களும் அவனுக்கு எக்குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் கொடுத்தமையால்தான் இந்த உலகத்திற்கு இத்தனை கேடுகளும் ஏற்பட்டுள்ளது.
.
அந்த பாதகனாகிய கலியனால் அனைவரின் நிலையும் ஆட்டங் கண்டுவிட்டது. ஆகவே, தாகம் ஏற்பட்டால் தண்ணீரைக் கூட நிம்மதியாகக் குடிக்க முடியவில்லை. இத்தனை இன்னல்களும் கலியின் காரணமாக ஏற்பட்டதேயாகும்.
.
ஆனால் என் அண்ணராகிய தாங்கள் எல்லாம் அறிந்தும் ஏதும் அறியாதவராய் எங்கள்மீது பகை கொண்டவர்போல் இருக்கிறீர்களே அதற்கு காரணம் என்ன?
.
அச்சுதரே இத்தனை நாளும் நாங்கள் அனுபவித்த துன்பங்களை எவ்வளவு என்று எடுத்துச் சொல்ல எவராலும் முடியாது.
.
.
அகிலம்
=======
கயிலை சிவனார் காணாம லும்மையுந்தான்
அகிலமதைப் பாராமல் அயர்ந்திருக்கி றாரெனவே
ஆனதா லென்னுடைய அண்ணரே அங்கேகி
மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குச் சொல்வாரும்
என்றுமையா ளிப்படியே இன்பமாய்ச் சொல்லிடவே
.
விளக்கம்
=========
கைலாச நாதராகிய சிவபெருமான் உம்மைக் காணாத காரணத்தால் இந்த உலகத்தை உற்றுக்கூடப் பாராமல் ஓய்வாகவே இருக்கிறார். ஆகவே. என்னுடைய அண்ணராகிய தாங்கள் கயிலைக்கு வாருங்கள். மானமுள்ள புத்திமதிகளை உங்கள் மைத்துனருக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணுவின் முன்னிலையில் அம்மை உமையவள் மறுகித் தவித்தாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚


