கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே
மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே
தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே
கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே
ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித்
தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும்
பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும்
கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும்
சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும்
பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில்
சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது
தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார்
அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும்
இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு
இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும்
.
விளக்கம்
=========
உலகத்தைப் பெற்ற முதற்பொருளே ! சகல சந்தோசங்களுமாய் இருப்பவரே ! ஒவ்வொரு உடலிலும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆதாரங்களிலும் அமர்ந்து இயக்குவோனே ! அண்ட பிண்டம் அனைத்தையும் தாங்கியிருக்கின்ற தூணாகவும் அவற்றைக் கடந்தும் இருப்போனே ! பரவெளியாகிய சகஸ்ரார தலத்தில் தங்கியிருந்து ஆட்சிபுரியும் அரசே ! சிவபெருமானே ! எங்களுடைய இன்னல்கள் யாவையும் அகற்றி, நாங்கள் மண்ணுலகில் வாழ்வதற்கு வகையான வரத்தினைத் தந்தருளுங்கள்.
.
அங்கே நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும் அவர்களின் பிற்கிளைப் பிதுர்வழியினரையும் ஒட்டுமொத்தமாகத் தற்காத்துத் தந்து, அன்று அயோக வனத்தில் வைத்து எங்களை, இந்த நிலைக்கு ஆளாக்கிய மாகாவிஷ்ணுவையும் எங்களோடு சேர்ந்து இருக்கவும், அவருக்கு நாங்கள் அன்றாடம் பணிவிடைகள் செய்து பரவசமடையவும் தாங்கள் எங்களுக்கு வரம் தந்தருள வேண்டும் என்று சிவடிபருமானிடம் ஏழு மாதர்களும் வேண்டினர்.
.
அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், தம் அருகிலிருக்கும் மகாவிஷ்ணுவைப் பார்த்து, நாராயணரே, இந்த ஏழு மாதர்களும் கேட்கும் வரங்களைக் கவனித்து, உணர்ந்து மனமுவந்து கொடுத்தருளும் என்றார்.
.
.
அகிலம்
=======
சப்த மாதர்களிடம் மகாவிஷ்ணு உரையாடல்
==============================================
சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும்
கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே
நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய்
மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே
தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி
ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து
வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே
இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம்
இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன்
இரந்து திரியும் ஈசருக் கல்லாது
பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர்
அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி
இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ
வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம்
கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார்
.
விளக்கம்
========
சிவபெருமான் சொன்ன விதத்தை உணர்ந்த மகாவிஷ்ணு மகாதேவா ! இந்த மாதர்கள் மிகச் சாமர்த்தியமாக வரம் கேட்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே உமது துணையோடு நான் வரம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த ஏழு மாதர்களையும் பார்த்து. கபடமற்ற மாதர்களே ! பெண் இனத்தின் ஆளுமையே ! கிளியைப் போன்று பேசுகின்ற கன்னிகளே ! நீங்கள் நாள்தோறும் அயோக வனத்து அமிழ்தகங்கையில் நீராடிவிட்டு, சிவபெருமான் மீது நீங்கள் வைத்திருந்த பக்தியின் வலிமையால் தண்ணீரைத் திரட்டி எடுத்துச்சென்று சிவபெருமானின் திருமுடியில் அபிஷேகம் செய்து கரங்குவித்து வணங்கி வந்த உங்களிடம் நான் வந்து இன்று நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற இந்தத் தண்ணீரை நாள்தோறும் சிவபெருமானின் திருமுடியில் இடுவதுபோல் என் தலையில் இடுங்கள் என்றேன். அதற்கு நீங்கள் இந்தத் தண்ணீரை வழக்கம்போல் சிவபெருமானின் திருமுடியில் தான் இடுவோமே அல்லாமல் பரந்த புவி ஆளும் மகாவிஷ்ணுவுக்கும் இந்த தண்ணீரை இடமாட்டோம் என்று தீர்க்கமாகச் சொன்னீர்கள்.
.
உங்களுடைய ஒரே நிலைப்பாடான அந்த உறுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தபடியால் விண்ணுலகத்தோரை மணணுலகில் பிறப்பிக்க உங்களைப் பயன்படுத்தலாம் என்று உறுதி பூண்டு, அதையும் தான் பார்ப்போம் என்று அதட்டினேன். அதன்படியே இத்தனையும் நடந்தேறிவிட்டது என்று அன்று நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களையும் வரிசை தவறாமல் விதம் விதமாக மகாவிஷ்ணு விவரித்தார். அதனால் ஏழு மாதர்களும் வெட்கம் தாழாது கண்களைக் கரங்களால் மூடித் தலைகுனிந்து நின்றனர்.
.
.
அகிலம்
=======
அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார்
ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும்
நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி
வானத் தமிர்த மதுபா லமுதருந்தி
வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார்
ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான்
பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன்
அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார்
துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி
அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத்
தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும்
வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து
ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள்
சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள்
அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க
அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம்
.
விளக்கம்
=========
நாணத்தால் தலைகுனிந்து நின்ற அந்த ஏழு மாதர்களிடமும் மகாவிஷ்ணு மீண்டும் சொல்லுகிறார். வரைந்து வைத்த சித்திரத்திற்கு ஒப்பான அழகையுடைய மாதர்களே ! நான் சொல்லுவதை இன்னும் கேளுங்கள். நீங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளும் இந்தப் பூலோகத்தில் பெருக்கமாகியுள்ளனர்.
அவர்கள் விண்ணகத்தோர் அருந்துகின்ற அமிர்தத்தை பனைமரத்தின் பால் அமுதாக அருந்தி, கோட்டையும் கொத்தளமும் அமைத்து மன்னர்களாகச் சிலகாலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைச் சோழ நாட்டு அரசன் கொன்று பழியேற்றான். எஞ்சிய மக்களின் பிதுரிலுள்ள சிலர் பிற்காலத்தில் திருவாங்கூர் மன்னனுக்கு மெய்க்காப்பாளர்களாகப் பணிபுரிந்தனர்.
.
அவர்களும் பொறாமையாளர்களின் சூழ்ச்சியால் அந்த மன்னனின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த மன்னனின் சாபத்தைச் சட்டமாக்கி அடுத்தடுத்து வந்த மன்னர்கள் செயல்பட்டதால், சான்றோர்கள் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தனர். அப்படித் துன்பங்களை அனுபவித்த சான்றோர்கள் கேடான கலிக்குள்ளாகி மனவலியால் முகவாட்டமாகி, கலிநீசர்களின் அடிமைகளாக அவன் இட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் கேடு கெட்ட கலியர்கள் கேவலமான வார்த்தைகளால் வசைமாரி பொழிந்து அடித்து உதைப்பதால் யாருமற்ற அனாதைகளைப் போல் சான்றோர்கள் அலைகின்றனர்.
.
யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது? எங்கே போவது? என்று புரியாத நிலையில் சான்றோர்கள் திக்கற்றுத் திகைக்கிறார்கள். அவர்களுடைய தகப்பனாக நான் இருக்க, தாயாக நீங்கள் இருக்க அவர்களை அப்பன் அம்மை இல்லாதோர் என்று நீசர்கள் அடிக்கிறார்கள்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்


