ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: பிப்ரவரி 21 : முதல் வாசகம் பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 58: 9b-14 ஆண்டவர் கூறுவது: உன்னிடையே இருக்கும் நுகத்தை அகற்றிவிட்டு, சுட்டிக்காட்டிக் குற்றஞ்சாட்டுவதையும் பொல்லாதன பேசுவதையும் நிறுத்திவிட்டு, பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்; இருண்ட உன் நிலை நண்பகல் போல் ஆகும். ஆண்டவர் தொடர்ந்து உன்னை வழிநடத்துவார்; வறண்ட சூழலில் உனக்கு நிறைவளிப்பார்; உன் எலும்புகளை வலிமையாக்குவார்; நீயும் நீர் பாய்ந்த தோட்டம்போலும், ஒருபோதும் வற்றாத நீரூற்றுபோலும் இருப்பாய். உன் மக்கள் பண்டை நாளிலிருந்து பாழடைந்து கிடப்பவற்றைக் கட்டியெழுப்புவர்; தலைமுறை தலைமுறையாக உள்ள அடித்தளங்களின் மேல் கட்டியெழுப்புவாய்; தகர்ந்த மதிலைத் திரும்பக் கட்டுபவன் என்றும் குடியிருப்பதற்குத் தெருக்களைச் சீர்படுத்துபவன் என்றும் பெயர் பெறுவாய். ஓய்வுநாளின் முறைமைகளினின்று விலகிச் செல்லாது, என் புனித நாளில் உன் விருப்பம் போல் செய்யாதிருந்து, ஓய்வுநாள் ‘மகிழ்ச்சியின் நாள்’ என்றும் ‘ஆண்டவரின் மேன்மைமிகு புனித நாள்’ எனவும் சொல்லி அதற்கு மதிப்புத் தந்து, உன் சொந்த வழிகளில் செல்லவோ உன் சொந்த ஆதாயத்தை நாடவோ வெற்றுப் பேச்சுகளைப் பேசவோ செய்யாதிருந்தால், அப்பொழுது, ஆண்டவருக்கு ஊழியம் புரியும் மகிழ்ச்சியைப் பெறுவாய்; நானோ, மண்ணுலகின் உயர்விடங்களில் உன்னை வலம் வரச்செய்வேன்; உன் மூதாதையாகிய யாக்கோபின் உரிமைச் சொத்தின் மூலம் உனக்கு உணவளிப்பேன்; ஆண்டவரின் வாய் இதை உரைத்தது. ஆண்டவரின் அருள்வாக்கு. பிப்ரவரி 21 : பதிலுரைப் பாடல் திபா 86: 1-2. 3-4. 5-6 (பல்லவி: 11a) பல்லவி: ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும். 1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில் நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். - பல்லவி 3 என் தலைவரே! என்மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நாள் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். - பல்லவி 5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். - பல்லவி நற்செய்திக்கு முன் வசனம் எசே 33: 11 ‛தீயோர் சாகவேண்டும் என்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே என் விருப்பம்,’ என்கிறார் ஆண்டவர் பிப்ரவரி 21 : நற்செய்தி வாசகம் நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன். ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 27-32 அக்காலத்தில் இயேசு சுங்கச் சாவடியில் அமர்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிதண்டுபவர் ஒருவரைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா!” என்றார். அவர் அனைத்தையும் விட்டுவிட்டு எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். இந்த லேவி தம் வீட்டில் அவருக்கு ஒரு பெரிய விருந்து அளித்தார். வரிதண்டுபவர்களும் மற்றவர்களும் பெருந்திரளாய் அவர்களோடு பந்தியில் அமர்ந்தார்கள். பரிசேயர்களும் அவர்களைச் சேர்ந்த மறைநூல் அறிஞர்களும் முணுமுணுத்து இயேசுவின் சீடரிடம், “வரிதண்டுபவர்க ளோடும் பாவிகளோடும் சேர்ந்து நீங்கள் உண்பதும் குடிப்பதும் ஏன்?” என்று கேட்டனர். இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே மனம் மாற அழைக்க வந்தேன்” என்றார். ஆண்டவரின் அருள்வாக்கு. ------------------------------------------------------------------------------ விட்டுவிடுங்கள்; பற்றிக் கொள்ளுங்கள் திருநீற்றுப் புதனுக்குப் பின்வரும் சனிக்கிழமை I எசாயா 58: 9b-14 திருப்பாடல் 86: 1-2, 3-4, 5-6 (11a) II மாற்கு 5: 27-32 விட்டுவிடுங்கள்; பற்றிக் கொள்ளுங்கள் ஆண்டவரைப் பற்றிக்கொள்வோம் திருமுழுக்குச் சடங்கின்போது அருள்பணியாளர், இறைமக்களைப் பார்த்து, “பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய சாத்தானை விட்டுவிடுகின்றீர்களா?” என்று கேட்டுவிட்டு, “விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம் வல்ல கடவுளை நம்புகிறீர்களா?” என்று கேட்பார். நாம் ஒவ்வொருவரும் அலகையையும், அது தரும் கவர்ச்சிகளையும் விட்டுவிட்டு, ஆண்டவரைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே இந்த வழிபாட்டில் அடங்கியிருக்கும் அர்த்தமாகும். இன்றைய இறைவார்த்தையும் நாம் அலகையையும் அதன் செயல்பாடுகளையும் விட்டுவிட்டு, ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழவேண்டும் என்ற அழைப்பினைத் தருகின்றது. இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், சுட்டிக்காட்டிக் குற்றம் சாட்டுவதையும், பொல்லாதன பேசுவதையும் விட்டுவிட்டு, வறியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், மண்ணுலகின் உயர்விடங்களில் வலம் வரலாம் என்ற செய்தியைத் தருகின்றது. இஸ்ரேயல் மக்கள் போலியாகக் கடவுளை வழிபட்டார்கள். அதனாலேயே அவர்களுக்கு இத்தகையதோர் அழைப்பு தரப்பட்டது. இந்த அழைப்பிற்கேற்ற இன்றைய நற்செய்தியில் மத்தேயு, ஆண்டவர் தன்னை அழைத்ததும், அனைத்தையும் விட்டுவிட்டு, அவரைப் பின்தொடர்கின்றார். அவருக்குத் தன்னுடைய வீட்டில் ஒரு விருந்து ஏற்பாடு செய்து, தன்னுடைய நண்பர்களையும் அவருக்கு அறிமுகப்படுத்துகின்றார். இவ்வாறு அவர் தான் மட்டுமல்லாமல், தன் நண்பர்களையும் இயேசுவைப் பற்றிக்கொண்டு வாழ அழைக்கின்றார். மத்தேயுவைப் போன்று நாம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு வாழ ஆண்டவரின் வழிகாட்டுதல் நமக்கு இருக்க வேண்டும். அதைத்தான் இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப் பாடலான திருப்பாடல் 86 இல் தாவீது, “ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பியும்” என்கிறார். எனவே, நாம் ஆண்டவரின் வழிகாட்டுதலின் படி, தீமையை விட்டுவிட்டு, நன்மையின் ஊற்றான ஆண்டவரைப் பற்றிக் கொண்டு வாழ்ந்து, அவர் வழி நடப்போம். குடியை விட்டுவிட்டுப் புனிதரானவர் குடிகாரர் ஒருவர் இருந்தார். இவருக்கு வார இறுதியில் குடிக்காவிட்டால் ஏதோ போன்று இருக்கும். ஒருவாரம் இவர் வேலைக்குப் போகாததால், குடிப்பதற்குக் கையில் பணமில்லை. ‘என்ன செய்வது?’ என்று யோசித்த இவருக்கு, ‘எதற்கும் கோயிலுக்குப் போய்வரலாம்’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. அங்கே சென்று இவர் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, ‘குடியை அடியோடு விட்டுவிடலாம்’ என்ற எண்ணம் ஏற்பட்டது. உடனே இவர் அங்கிருந்த அருள்பணியாளரைச் சந்தித்து, தன்னை பற்றி அறிமுகம் செய்துகொண்டு, குடியை அடியோடு விட்டுவிடுவதாகச் சபதம் ஏற்றார். அருள்பணியாளரும் இவர் எடுத்த முடிவை நினைத்துப் பெரிதும் மகிழ்ந்தார். மறு வாரம் இவர் தன்னுடைய நண்பர்களைச் சந்தித்தபோது, குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. இருந்தும், இவர் தான் எடுத்த சபதத்தை நினைவில் கொண்டு குடிக்காது இருந்தார். ஒருநாள் இவர் திருப்பலியில் கலந்து கொண்டபோது, குடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போது இவருக்குள் ஒலித்த குரல், ‘குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உள்ளுக்குள் வைத்துக்கொண்டு, இயேசுவின் திருவுடலை உட்கொள்வதற்கு உனக்கு என்ன தகுதியிருக்கின்றது?” என்றது. உடனே இவர் கோயிலை விட்டு வெளியேறி, வீட்டுக்கு வந்துகொண்டிருந்தார். வரும் வழியில் வேறொரு கோயில் இருந்தது. அந்தக் கோயில் நுழைவாயிலில் மரியன்னையின் திருவுருவம் இருந்தது. அதற்கு முன்பாக இவர் மன்றாடியபோது, குடியைப் பற்றிய எண்ணம் அடியோடு அகன்றது. இதற்குப் பிறகு இவர் கடவுளுக்கேற்ற வாழ்க்கை வாழ்ந்து, பின்னாளில் ஒரு புனிதர் ஆனார் இவர்தான் மது அடிமைகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் புனித மாட் டால்போத் (Mat Talbot). மாட் டால்போத் குடியை விட்டுவிட்டு, ஆண்டவரைப் பற்றிக் கொண்டார். நாம் நம்மிடம் உள்ள தீய பழக்கவழக்கங்களை விட்டு, ஆண்டவரைப் பற்றிக் கொள்ளத் தயாரா? சிந்திப்போம். ஆன்றோர் வார்த்தை “உண்மையான மனம்மாற்றம், நல்லதொரு வாழ்க்கையாய் வெளிப்பட வேண்டும்” – லெவிஸ் எப். கோர்ன்ஸ். தீர்மானங்கள் 1) அழிந்து போகும் செல்வத்தை விட்டு, அழியா வாழ்வு தரும் ஆண்டவரைப் பற்றிக் கொள்வோம். 2) உண்மையான சமய வாழ்வு அடுத்தவர்மீது அன்புகொள்வதில் இருப்பதால், அதன்படி வாழ முற்படுவோம். 3) ஆண்டவரின் வழியில் நடக்க, அவரது இரக்கத்திற்காக மன்றாடுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்