கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விருச்சம் படைக்க வேணு மதுவிபரம்
புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான்
என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த
மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய்
வன்னமது பூகம் வாசமது விருச்சம்
தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம்
ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம்
சோதி விருச்சம் சுபசோபன விருச்சம்
தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம்
ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும்
வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில்
.
விளக்கம்
=========
தர்மயுகத்திற்கு உரித்தான தாவர வகைகளையும் படைக்க வேண்டும். அதைப்பற்றிச் சோதிட நியமப்படி ஆராய்ந்ததில் முன் ஆகமங்கள் என்ன கூறுகிறது என்றால், சப்தமாதர்கள் பூலோகத்தில் மனிதர்களாகப் பெற்ற மேலோகத்தார் ஏழு பேரும் பெற்றுப் பெருகி வாழ்வாங்கு வாழ்வதற்காக ஒளி மிகுந்ததும், அதிவேகமாகத் தழைத்து வளர்வதும், நிலைத்து இருப்பதுமான தாவரங்களைப் படைத்து வைக்க வேண்டும்.
.
அவை மேன்மையான வாசனை உள்ள மலர்களைத் தருவதாகவும், தேனைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தென்னை, புன்னை மரங்களும் அடர்ந்து பரந்து நிழல் தரும் முதன்மையான மரங்களும், ஜோதிமரம் எனப்படும் இரவெரிமரமும் மங்களமான காரியங்களுக்குப் பயன்படும் மரங்களும், ஆல் அரசு, வில்வம், வேம்பு வேங்கை போன்ற தேவ விருச்சங்களும், செம்பொன் நிற இலைகளையுடைய அழகு விருச்சங்களும் இன்னும் ஆகமத்திலுள்ளபடியான அனேக விருச்சங்களும் நாம் தர்மயுகத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்திருக்கும் தேதியில் தோன்றும்.
.
.
அகிலம்
=======
சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம்
வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக
ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய்
சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய்
சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும்
வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும்
ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும்
நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும்
தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள்
ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள்
மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய்
இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி
பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப்
புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார்
.
விளக்கம்
========
வைடூரியம் தமக்கு எதிரிலுள்ள வண்ணத்தை உள்வாங்கி ஒளிசெய்வதைப்போன்று ஒளி மிளிரும் சிறந்த வெள்ளை வானமும், அந்த வானத்தை உறைவிடமாகக் கொண்டியங்கும் நிலவு நேராக இருந்துகொண்டு எப்பொழுதும் எத்தீங்கும் செய்யாத ஒளியை வழங்குவதோடு அதுவே அனைத்து தலங்களுக்கும் நித்திய விளக்காகவும் அமையும்.
.
தர்மயுகத்தில் சாஸ்திரம், வேதம், மதம் ஆகியவை எல்லாம் ஒன்று மட்டுமே இருக்கும். காற்றானது மலரைப் போன்ற மென்மையுடன் இதமாக வீசும். ஆய்வுக்குரிய தமிழ் கலைகள் யாவும் ஒத்த கருத்துடையதாக உலகமெல்லாம் பரவும்.
.
நம்முடைய மக்கள் வாழுகின்ற தர்மபூமி நாளுக்கு நாள் மிகுதியாகத் தழைத்துக் கொண்டேயிருக்கும். தர்மயுகத்து மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் ஒன்றுமையாகவும், செழிப்பாகவும் வாழ்வார்கள். மேன்மை பொருந்திய மக்களெல்லாம் சான்றோர்களாக அளவிற்கடங்காத காலமெல்லாம் நிலையாக வாழ்வார்கள். புண்ணியவான்களான அவர்கள் பாலோடு பழமும் அருந்தி பண்பாக வாழ்ந்திருப்பார்.
.
அகிலம்
=======
மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும்
தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம்
நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம்
இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச்
செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும்
முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில்
பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும்
உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு
கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள்
ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத்
தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை
சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி
சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும்
காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு
ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண்
ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா
ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும்
அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண்
முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப்
பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய்
இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால்
அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில்
அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக்
கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு
என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே
.
விளக்கம்
=========
எல்லாரும் புண்ணியவான்களாக வாழுகின்ற போது, பூவுலகம் தருமத்தை விதைத்து விளைவித்த வயல்போல் எங்கும் எதிலும் தர்மமே தழைத்திருக்கும். அத்தகு தர்ம பூமியில் ஊறுகின்ற தண்ணீர் கூட ஆய கலைகள் அறுபத்து நான்கையும் போதிக்கும் இயல்புடையதாகிவிடும். அந்த அறிவு வெள்ளம் அனைவருக்கும் கருணை உள்ளத்தை அருளும்.
.
இத்தகைய தர்மபதி இராச்சியம் ஒன்றை உண்டாக்கி, வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாத பற்பல பொன்பதிகளை அங்கே உருவாக்கி வைக்க வேண்டும். முன்னமே எனக்கென ஏற்பட்ட துவரயம் பதியில் பொன்னம்பதியும், பெரிய தங்கப்பதியும் உண்டு. அந்தப்பதி இப்போது கடலுக்குள் இருக்கிறது. அதைக் கலிமாசு கொண்டவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆகவே மக்களின் மனதில் படிந்திருக்கும் கலியாகிய அழுக்கை அகற்றி, அந்தத் தர்மபதியை நாடுவதற்கான அறிவை அவர்களுக்கெல்லாம் அருளி, அப்பதியை அவர்கள் அடைவதற்கு ஏதுவாக அமைத்தாக வேண்டும் என்றே அனைத்து சாஸ்திரங்களும் அறிவுறுத்துகின்றன.
.
தர்ம இராச்சியத்தில் வாழவேண்டும் என்று விரும்பி, நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழுகின்ற மக்கள் நிச்சயமாக தர்மச் சீமையை அடைவார்கள். அங்கே அவர்களுக்கு வஞ்சகமான வைராக்கியம் இருக்காது. உடலுக்கு வியாதி இருக்காது. உள்ளத்திற்கு வலி இருக்காது. எமனால் ஏற்படும் இறப்பு இருக்காது. மொத்தத்தில் தர்மச்சீமையில் வாழ்பவர்களின் மேலான விதிக் கணக்குகள் யாவும் நம்மிடத்தில்தான் இருக்குமே தவிர உலகில் வேறு எவரிடத்திலும் இருக்காது.
.
சாஸ்திரம், வேதம், மதம், உடற்கூறு தத்துவம் போன்றவற்றை விளக்கி உபதேசம் செய்வதற்கு தர்மராச்சியத்தில் எவரும் தேவைப்பட மாட்டார்கள். ஏனெனில் தர்மச்சீமையில் வாழும் இயல்புடையோர் எல்லாரும் மெச்சுதலுக்குரிய மேன்மக்களாவர்.
.
மேலும், வாழ்வு முடிந்தோரின் உயிரைக் கவரும் காலன், உயிரினங்களின் காலக்கணக்குகளைச் சரிபார்க்கும் சித்திர புத்திரன் போன்றோருக்கும் தர்மச் சீமையில் வேலை இல்லை. காரணம் அவர்களின் அச்செயல்கள் உலகில் இல்லாமல் ஒழிய வேண்டும் என்பதற்காகவே, செந்திரிசியின் மனைவியான எக்காள மடந்தையைப்போல் இன்னும் சிலர் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நமநாதிகளின் அழிவு நிச்சயம்.
.
சிதைவடைந்து போன ஒன்பது கிரகங்களையும் அழித்து, அவற்றின் அபூர்வமான ஆற்றல்களையெல்லாம் இன்னொன்றுக்குள் உறைந்து அருள் மிளிரச் செய்ய வேண்டும். முன் ஆகமங்களில் உள்ள சாஸ்திரச் சம்பிரதாயங்கள் எல்லாம் தப்பிதமாகும் அளவில், பின்பு தோன்றுகின்ற புராணம் ஒன்றை ஒருவரால் உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் யாம் நிச்சயித்து இருப்பதினால், அந்தந்தக் காலகட்டங்களில் அவை யாவும் நடந்தேறும்.
.
அதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் யாவையும் செய்து, காலங்கடத்தாமல் கலியை அழிப்பதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தாக வேண்டும் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கிறார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்


