#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள்
என்றுரைக்க நாதன் இசைந்ததே வனுரைப்பான்
அய்யாவே யென்னுடைய ஆதித் திருவுளமே
பொய்யா னகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே
சாதி பதினெண்ணாய்த் தான்பிரித்தா னேநீசன்
ஆதித்தா திதனிலே அமையுமையா என்கோவே
அல்லாம லுன்றனக்கு ஆதிவரை யெந்நாளும்
நல்லாகத் தொண்டுபண்ணி நவ்வியிருக்கு மனுவில்
படையுமையா யென்றன் பிதாவே யெனப்பணிந்தான்
.
விளக்கம்
========
சம்பூரணத் தேவனின் பணிவான வேண்டுகோளுக்கு இணங்கி, வைகுண்ட அவதார காலநிலைகளைச் சம்பூரணத் தேவனுக்கு எடுத்துக்கூறிய மகாவிஷ்ணு, இதற்கு மேலும் உனக்கு ஏதேனும் சங்கடங்கள் உள்ளனவா என்று கேட்டார்.
.
மகாவிஷ்ணு சொன்ன செய்திகள் யாவையும் மிகவும் கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்து சம்பூரணத்தேவன் அவ்வுரைகள் யாவையும் அகம் ஏற்றுக்கொண்டு மகாவிஷ்ணுவைப் பார்த்து, அய்யா, என் ஆதித் திருவுளமே, போலியுகமாகிய இந்த கலியுகத்தில் என்னைப் பிறக்கப் போ என்று சொல்லுகிறீர்களே, தாங்கள் படைத்த மக்களைச் சாதி என்னும் பெயரால் பதினெட்டுப் பிரிவுகளாகக் கலிநீசன் பிரித்து வைத்திருக்கிறானே, அதில் முதன்மையான பிரிவில் தங்களுக்குக் காலங்காலமாக நறிதொண்டு செய்து, அத்தொண்டு செய்வதிலேயே பேரானந்தம் அடைந்து கொண்டு இருக்கும் மானிடர் வயிற்றுப் பிள்ளையாக என்னைப் பிறவி செய்யுங்கள் எனையாளும் ஆண்டவனே ! பிதாவே ! என்று சொல்லி பணிவோடு வணங்கினான்.
.
.
அகிலம்
=======
குடையொன் றாற்பெரிய குருவு மகிழ்ந்துரைப்பார்
நல்லதுகாண் தேவாநீ நம்மக்கள் ஏழ்பேரில்
வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வ லோகவித்தாய்
அவ்வழியி லம்மனுவில் ஆனசான் றோர்குலத்தில்
மெய்வழியி லங்கே மிகப்பிறக்கப் போநீயென்றார்
நல்லதுதா னென்று நவிலுவான் தேவனுமே
வல்லவரே மூவருக்கும் மைத்துனராய் நிற்போரே
என்னைப் பிறவி இப்போது செய்யுமென்று
வன்னத் தேவாதி வணங்கிநின்றான் மாயவரை
.
விளக்கம்
========
உலகம் யாவையும் ஒரு குடைக்குள் வைத்து ஆளுகின்ற மகா குருவான மகாவிஷ்ணு, மிகவும் சந்தோசத்தோடு சம்பூரணத்தேவனைப் பார்த்துச் சொல்லுகிறார். சம்பூரணத்தேவா, உன்னுடைய இந்த நல்ல நோக்கத்தை நான் ஏற்றுக் கொள்ளுகிறேன்.
.
மேலோக வித்துக்களான ஏழுபேர் என் மக்களாகப் பூலோகத்தில் பிறந்துள்ளனரே, அவர்களில் வெற்றி வேந்தனாகிய தேவேந்திரனின் தேவலோகத்திலிருந்து ஒரு வித்தின் மூலமாகப் பெற்றுப் பெருகியிருக்கும் மனுவழியில் உண்டான, அறிவிற்சிறந்த குடும்பத்தில் உள்ள ஒரு உடல் வழியாகச் சிறப்போடு பிறப்பதற்கு செல்லு என்றார்.
.
மகாவிஷ்ணுவின் அவ்வுரையால் மகிழ்ச்சி அடைந்த சம்பூரணத்தேவன், வல்லோனே, மும்மூர்த்திகளுக்கும் சினேகமாக இருக்கும் பரம்பொருளே, என்னை உடனே பூலோகத்தில் பிறவி செய்யுங்கள் என்று சம்பூரணத்தேவன் மகாவிஷ்ணுவை வேண்டி வணங்கி நின்றான்.
.
அகிலம்
========
ஆத்ம ஜெயம்
=============
அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து
முப்பொழுது வுள்ள முறைமையது கூறலுற்றார்
ஆறுதரம் நம்மை அகம்வைத்துக் கொண்டசடம்
பேதுபெற்ற தில்லையே பேறுநா மீந்திலையே
அச்சடல மம்மலையில் அருந்தவசு பண்ணினதே
இச்சடல மீடேற இந்தநாள் வந்துதென்று
தேவன் சடலமதைத் திக்கென் றழித்துவிட்டு
மூவர் நடுவருட முச்சடலக் கூடதையும்
வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி
விரைவாக வாருமென்று விடைகொடுத்தா ரெல்லோரும்
.
விளக்கம்
=========
அதனால் மகிழ்ச்சியுற்ற மகாவிஷ்ணு கழிந்த காலத்தில் அவர் எடுத்துள்ள அவதார முறைமைகளைப் பற்றி நினைவுகூர்ந்துப் பேசலானார்.
கலியுகத்திற்கு முன்புள்ள ஆறு யுகங்களிலும் தம்மை அகம் வைத்துச் சுமந்த உடல் ஒன்று உள்ளனவே, அந்த உடல் இதுவரை வீடுபேறு அடையவில்லையே. நாமாக அந்த உடலுக்கு எவ்வகைப் பேறும் கொடுக்கவும் இல்லையே. அந்த உடல் கிருஷ்ண அவதார நிறைவில் நாம் உகுத்து வைத்த அந்த மலையில் அருமையாகத் தவம் செய்து கொணடல்லவா இருக்கிறது. என்றெல்லாம் நினைத்துப் பார்த்த மகாவிஷ்ணு, அந்த உடலைக் கடைத்தேறச் செய்ய வேண்டும் எனத் தீர்மானித்தார்.
.
அந்த காரணச் சரீரத்தைக் கடைத்தேறச் செய்வதற்கு உற்றநாள், உகந்த தருணம் இதுதான் என்றெண்ணி, சம்பூரணத் தேவனின் இயல்பான உடலை திடீரென்று அழித்துவிட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா என மும்மூர்த்திகளுக்கும் நடுவராகிய தம்முடைய முன் அவதாரக் கிருஷ்ண சரீரத்தை உடனே வரவழைத்து வாருங்கள் என்று அங்கிருந்த மறையோர் அனைவரையும் அழைத்து உத்தரவிட்டு அனுப்பிவைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


