கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஐந்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 17.01.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத் தீரேயென்று
கோபித்தான் சான்றோரைக் கூறழியப் பேசியவன்
சாபித்தான் சான்றோர்க்குச் சத்தியில் லாநீசன்
என்குடும்பத் தோர்கள் இராச்சியத்தை யாளுமட்டும்
உன்குடும்பத் தோர்கள் ஊழியங்கள் செய்துமிக
அழுந்தப்படு வாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு
விழுந்த மொழியாய் விரைந்துரைத்தா னேநீசன்
சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தா னவன்றன்
வல்லி யுடன்பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான்
நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு
மாய வலையாய் வளைந்ததுகா ணன்போரே
.
விளக்கம்
==========
என்னுடைய மெய்க்காபாளர்களாக இருந்துகொண்டே என்னைக் காட்டிக் கொடுத்துவிட்டீர்களே, என் சாவுக்குக் காரணமாகிவிட்டீர்களே என்று மன்னனின் மனம் தகித்தது. கடலில் உறுதி இல்லாத நிலையில் உண்மை புரியாமல் தவித்தது. உனவே, என்னுடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் இந்த நாட்டை ஆளுகின்ற காலம் வரை, உன்னுடைய இனத்தவர்கள், மிகக் கேவலமான ஊழியங்கள் செய்து, மனம் குமுறும்படியாகத் துன்பப்படுத்துவார்கள் என்று சாபமிட்டுக்கொண்டு மன்னன் உயிர் துறந்தான்.
.
மன்னன் உயிர் துறந்த மறு கணமே, மன்னனின் சகோதரியின் மகன் அந்த நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று அரசு புரிந்தான். சான்றோரைப் பழி வாங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வஞ்சங் கொண்டிருந்த வஞ்சகர்கள் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மன்னனிடம் சான்றோருக்கு எதிராக சூதுரைகளைப் போதித்தனர். இறந்துபோன மன்னன் இறுதிக் காலத்தில் இட்ட சாபத்தை நிறைவேற்றும்படி நினைவூட்டினர்.
.
மன்னனும் அதற்கு இசைந்தான். சான்றோருக்குத் தீங்கு விளைவிக்கும் பற்பல கொடிய சட்டங்களைப் பிறப்பித்தான். வெற்றிக்கு வித்தாக, விவேகத்தின் சொத்தாக, நன்றியின் இருப்பிடமாய், தியாகத்தின் உறைவிடமாய், பொறுமையின் புகலிடமாய் வாழ்ந்து வந்த சான்றோர்கள் சகல வகையிலும் புறக்கணிக்கப்பட்டார்கள். வரிக் கொடுமை அவர்களை வாட்டி வதைத்தது. கூலியில்லா வேலை அவர்களைக் கொடுமைப் படுத்தின. மொத்தத்தில் மாடாக உழைத்து ஓடாகத் தேய்ந்தனர் என்றாலும் இவர்களின் நிழல் பட்டாலே தீட்டு என்ற நிலை உருவாயிற்று.
.
.
அகிலம்
========
சான்றோர்கள் அனுபவிக்கும் துன்பங்களை மகாவிஷ்ணுவிடம் தேவர்கள் தெரிவித்தல் :
==========================================================================
தேவ ரதையறிந்து திருமா லிடமேகி
மேவலர்கள் வந்து விளம்பினா ரப்போது
மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்குப்
பாவிநீ சன்சபித்த பழிசாபங் கேட்டீரோ
சாபத்துல்ப மெல்லாம் தானுரைத்தா ரச்சுதற்குத்
தாமத் திருமேனி தானுரைப்பார் தேவருக்கு
மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு
அந்நீசன் சாபம் அதுவுங் குறிதான்காண்
வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு
அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது
எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும்
அத்தனையும் நீசன் அவனேற்கக் காரியந்தான்
நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான் றோர்களுக்குத்
தொல்லைவந்தா லுந்தீர தொகைவைத்த லக்குமுண்டு
சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு
வேழமிட் டிருப்பேரை வெட்டினான் பாரறிய
நீசனுக்குச் சான்றோர் நித்திரைக ளில்லாமல்
வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச் சாபமிட்டான்
எல்லா மறிவார் ஈசர்முதல் லோகம்வரை
வல்லாண் மையான வாயத்ததே வாதிகளே
நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்குப்
போமென்னத் தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து
மாயவரு மங்கே மனஞ்சடைத்துத் தானிருந்தார்
.
விளக்கம்
==========
கலிநீச மன்னின் சாபத்தால் சான்றோர்களுக்கு அநியாயமாக ஏற்பட்ட அவலங்களை அறிந்த தேவர்களெல்லாம் மகாவிஷ்ணுவை நாடிச்சென்று, சுவாமி, பூலோகத்தில் எங்கள் வம்சா வழிகளான சான்றோர்களுக்கு, காரணமே இல்லாமல் கலிநீசன் சபித்த சாபத்தைப் பற்றி அறிந்தீர்களா? என்று வினவியவாறே நடந்தேறிய உண்மைச் சம்பவங்களையும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகளையும் எடுத்துரைத்தார்கள்.
.
தேவர்கள் உரைத்த செய்தியை அறிந்த மகாவிஷ்ணு, மேன்மை மிகுந்த தேவர்களே, புகழ் வாய்ந்த சான்றோர்களுக்கு அந்தக் கலிநீசனிட்ட சாபமானது கலி அழிவதற்கோர் அறிகுறி என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். வம்பான அந்தக் கலியன் தன்னுடைய அழிவிற்கு என்ன காரணம் என்று எதிர்வாதம் செய்தால் அவன் ஏதுமறியா சான்றோருக்கு இட்ட இந்தச் சாபம் சாட்சியாக வந்து நிற்கும்.
.
சான்றோர்கள் ஒருவேளை குற்றமே செய்திருந்தால் கூட, அத்தனை குற்றங்களையும் சகித்துக் கொள்ள வேண்டிய அளவிற்கு கலிநீசனுக்குச் சான்றோர் நன்மை புரிந்திருக்கிறார்கள். ஆனால் எது நடந்தாலும் அது நன்மைக்கே நடந்துள்ளது. என்மீது எப்போதும் நாட்டமாக இருக்கும் சான்றோர்களுக்கு எத்தனை துன்பங்களை கலிநீசன் கொடுத்தாலும், அந்தத் துன்பங்கள் அடியோடு அகலுவதற்கான காலமும் வழிவகைகளும் உண்டு.
.
தேவர்களே சான்றோர்கள் சோழ மன்னனுக்குச் செய்த உதவிகள் அளவில் அடங்காது. அப்படியிருந்தும், சான்றோர்களுக்கு நன்றிக்கடன் செய்யவேண்டிய சோழன் நன்றி மறந்தவனாய், இந்த உலகம் அறியும்படியாக, சான்றோரில் இரண்டுபேரின் தலையை யானைக்காலால் இடறச் செய்து கொன்றான்.
.
அதுபோல், இந்த கலியரசனுக்காக ஊண், உறக்கமில்லாமல், கலியரசனின் எதிரிகளின் மூச்சு கூட கற்றோடு கலந்து, அந்த மாநீசனின் மாளிகைக்குள் புகுந்துவிடா வண்ணம் கடமை உணர்வோடு, மெய்க் காப்பாளர்களாக அவனுடைய வாசல் நடை காத்துவந்த சான்றோருக்கு விதி வயத்தால் செத்தொழியும் நேரத்தில் வேந்தன் அந்தக் கலிநீசன் கடுமையாக சாபமிட்டிருக்கிறான்.
.
சான்றோரின் நிலையையும், சாபத்தின் செயலையும் ஈசனும் உணர்வார். இவ்வுலக மக்களும் அறிவர். இந்த கலியுகத்திற்கு இப்படியோர் விதி வந்துள்ளதே என்று தான் நாம் நம்மை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டுமே அல்லாமல் என்ன செய்ய முடியும். வல்லமையும் வாய்மையும் ஒருங்கே அமைந்துள்ள உத்தமமான தேவாதிகளே நீங்களெல்லாரும் உங்கள் உறைவிடத்திற்குச் செல்லுங்கள் என்று தேவர்களையெல்லாம் ஆறுதல் கூறி அனுப்பிவைத்த மகாவிஷ்ணு மனச்சுமையோடு இருந்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்


