#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தெய்வப் பிறவியல்லொ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம்பை யெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி
கற்பகலாப் பெண்களுட கற்புக்கிரங் காதிருந்தால்
உற்பனமோ நாமள் உடையபர னென்றாமோ
எளியவனை வம்பால் இடுக்கஞ்செய் தேயடித்தால்
விளியிட் டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை
கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர்
நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார்
அல்லாமல் நம்முடைய அரிதன்மகா நாமமதை
இல்லாம லேமறைத்தான் இயல்புகெட்ட மாநீசன்
ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது
மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன்
ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி
தாக மடைந்தார்கள் தவசுமுனி மார்களெல்லாம்
நீசப் பாசாசு நீணிலத்தைக் கொள்ளைகொண்டு
தோசப் பயலோடு துணையாய் மிகக்கூடிக்
கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல்
கொடுக்கவொன் றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண்
அதுவே யொருகொடுமை அநேகம் பொறுக்கரிது
எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில்
ஆனதால் நாங்கள் அவனிதனிற் போயிருந்து
மானமுறை சோதித்து மனுவிடுக்கந் தான்தீர்த்து
நாட்டிலுள்ள குற்றம் நாங்கள்பார்த் துத்தீர்த்து
ஓட்டுவதை யோட்டி உறைப்பதை யுறைப்பித்து
நாடையொரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே
பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது
நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே
ஆனதால் பாவி அவனிழுக்குச் சொல்லாமல்
மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன் றேயெழுதி
வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து
கருவி குழறி கற்பினைக்குள் ளாகுவதும்
என்னவோ வென்று இடும்புசெய்வ துமறிய
அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய
எவரும்புற் பூண்டுவரை எவ்வகையுந் தானறிய
எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று
முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான்
.
விளக்கம்
=========
உலகில் உத்தமர்களாக வாழ்வதென்பது சாதாரண காரியமா? உத்தம குணம் படைத்த சான்றோர்கள் திக்கெட்டும் வென்ற தெய்வப் பிறவியல்லவா? அவர்கள் வகுத்து வாழ்ந்து வந்த கட்டுப்பாடான ஒழுக்கத்தையெல்லாம் அந்தக் கலியாகிய பாதகன் அழித்து விட்டான்.
.
கலிநீசப்பாவி எல்லாருடைய மனத்திலும் புகுந்துவிட்டாதல், கற்புக்கரசிகளெல்லாம் கதிகலங்கிக் குமுறுகிறார்கள். அந்த கற்புக்கரசிகளின் கதறலுக்காகவாவது நாம் இரக்கம் காட்ட வேண்டுமல்லவா? கற்புக்கே இரங்காமல் இருந்தால் நாமெல்லாம் பரம்பொருள் என்று சொல்வது உண்மையாகுமா?
.
உலகில் கலிக்குணம் மிகுந்தோரெல்லாம் வலியோராகவும், கலிக்குணத்தில் ஆட்பட்டுவிடக்கூடாது என்று நினைப்போரெல்லாம் எளியோராகவும் வாழ்ந்துவருகின்றனர். எளியோருக்கு, வலியோர் இன்னல் பல புரிந்து இடுக்கம் செய்கின்றனர். அதனால் வருந்தும் எளியோர்கள் கூவி அழுதாலும் உலகில் குரல் கொடுக்க நாதியில்லை. எளியோருக்கு வலியோரால் ஏற்படும் கொடுமைகளை எதிர்த்துச் கேட்க யாரும் துணியாதால் பெருமை மிக்க அந்த எளியோர்களெல்லாம் நம்பேரில் நம்பிக்கை வைத்து, இதற்கெல்லாம் இறைவன் ஒரு நாள் முடிவு கட்டுவார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்து வருகின்றனர்.
.
இன்னும் சொல்லப்போனால், கலி வயத்தால் கவரப்பட்ட அந்த மகாபாதகர்கள் மகாவிஷ்ணுவின் அரி என்ற மகத்துவமான பெயரையே உலகில் பரவாத வண்ணம் தடுத்துவிட்டனர். அதுகூட பரவாயில்லை. கலிக்குணமுடைய கபடர்களின் அழிச்சாட்டமான செயல்களையும், அநியாயத்தையும் பொறுக்கவே முடியவில்லை.
.
மனித நேயத்தையும், தெய்வ நீதியையும் அநதக் கலிவயப்பட்டவர்கள் வரம்பு மீறி அழித்து வருகின்றனர். அந்த மகாப் பாதகர்கள் ஆகமங்களைக் கூட தாறுமாறாகக் கூறழித்து விட்டார்கள். அதனால், ஆன்மிக தாகமுள்ள தவ முனிவர்களெல்லாம் தவியாய்த் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
.
ஈனத்தனமான மனிதர்களெல்லாம், பேய்தனமான கலியோடு உறவுகொண்டு உலகத்தையே கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். அந்தக் கொடுமையான கொள்ளைகளைத் தட்டிக் கேட்க யாரும் இல்லாததால், கொடுக்க எதுவுமே இல்லாத ஏழைகளை எல்லாம் இந்த வஞ்சப்பேய்கள் கொன்று குவிக்கின்றனர்.
.
இது ஒரு வகையான கொடுமை என்றால் இதைப்போல் இன்னும் எண்ணில் அடங்காத கொடுமைகள் உள்ளன. எதையுமே சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை.
.
இப்படி, கலியின் வருகையால் இந்த உலகத்தில் மனிதனின் வாழ்க்கை நெறிகள் வரம்பு தப்பித் தாறுமாறாகப் போய்க் கொண்டிருக்கிறது. ஆகவே, நாங்கள் பூலோகத்தில் போயிருந்து, மனித குலத்தின் மான முறைமைகளைப் பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நல்லது கெட்டதுகளை அறிந்து, அவர்களின் துன்பங்களைத் தீர்த்து, மனித நேயமில்லாத பாதகர்களைத் தண்டித்து, அதாவது, உலகில் வாழத் தகுந்தவர்களை வாழவைத்து, வாழத் தகுதியில்லாத வஞ்சகர்களை வதைத்து, இந்த உலகத்தை ஒரு சொல்லதுக்குள் நலமாக வாழ்விப்பதற்கான காலம் இதுவே ஆகும்.
.
பறந்து செல்லும் ஆற்றலை அகமே கொண்ட அன்னம் போன்ற மகிமை மிக்க மயிலே, பெண் குலத்தின் பேரரசியே, நாங்கள் உன்னிடம் இப்போது உரைத்தபடி பூலோகத்திற்குச் செல்லவேண்டிய நல்லநாள் வந்துவிட்டது. ஆகவே, அந்தக் கலி வயப்பட்ட பாவிகளுக்கு முன்னறிவிப்பாக சில புத்திமதிகளையும், அந்த புத்திமதிகளை அந்தப் பாதகர்கள் அனுசரித்து நடக்காவிட்டால் நாங்கள் பூலோகப் பரிபாலனத்திற்காக வரவேண்டியது வரும் என்ற எச்சரிக்கையையும் இங்கே இப்போது எழுதி பூலோகத்திற்கு அனுப்பவேண்டும். அப்படிச் செய்வதன் மூலமே கலியன் எவ்வகையிலும் நம்மைக் குறை கூற முடியாமற்போகும்.
.
நாம் பூலோகத்திற்கு வருவோம் என்று அறிவித்தால், கலியன் அதை அறிந்து, உணர்ந்து அவனுடைய ஜீவ நாடிகள் செயலிழந்து, நம் வருகையால் ஏற்படப்போகும் விளைவை கற்பனை செய்து பார்த்துத் திருந்துவதையும், அல்லது இந்த திருவாசகச் செய்தியை உதாசினம் செய்துவிட்டு மீண்டும் கொடுமைகள் தான் செய்கிறானா? என்பதையும் நாம் அறிந்து கொள்ளும் வகையில் நாம் எழுதும் திருவாசகத்தை கலியன் அறிவதற்காக விட்டு, அதைப் பதினான்கு உலகங்களும் புல் பூண்டு முதலான எல்லா வகை உயிரினங்களும் அறியச் செய்ய வேண்டும்.
.
ஆகவே, அந்த திருவாசகத்தை முழுமைப்படுத்தி எழுதுவதற்காகவே உன்னை இக்கோலத்தில் இங்கே விரைந்து வருவித்தோம் என்று சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் இணைந்து, சரசுபதியிடம் கூறினார்கள்.
.
.
அகிலம்
========
சரசுபதியின் அவையடக்கம்
-------------------------------------------
அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும்
இப்போ திவ்வகைக்கு யானென்ன செய்கருமம்
எல்லாங் கிருபை எம்பரனே யுன்செயலு
அல்லாம லென்றனக்கு ஆகுமோ ஏதாலும்
ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ
ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ
சொல்லுவதும் நீயல்லவோ சொல்லவைப்பானும் நீயல்லவோ
அல்லும்பகல் நீயல்லவோ அழியாத வனும்நீயல்லவோ
எல்லா முமது கிருபை யெனக்கல்லாது
சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தாள்
.
விளக்கம்
=========
அதைக்கேட்ட சரசுவதி மகாவிஷ்ணுவைப் பார்த்து இப்போது தாங்கள் என்னிடம் சொன்னவற்றிற்காக நான் என்ன காரியம் செய்ய வேண்டும் என்கிறீர்கள். என்னால் என்ன செய்ய முடியும். எச்சயெல் ஆனாலும், என் பரம்பொருளே உன் செயல்தானே, என் பரம்பொருளே உங்கள் கருணை இல்லாமல் என்னால் ஏதேனும் நடைபெறுமா?
.
எங்களையும், இந்த உலகத்தையும் இயக்குவதும், இயங்குவதும் தாங்கள் தானே? எங்களை ஓட்டுவதும், ஓடுவதும் தாங்கள் தானே? இரவும் பகலும் என்றும் அழியா பரம்பொருள் தாங்கள் தானே? எல்லாக் கிருபைகளும் தானாகி இருக்கும் தயாபரனே? என்னால் இதைச் செய்யமுடியும் என்ற சொல் எப்படி ஏற்பட்டது கடவுளே என்று மகாவிஷ்ணுவின் மலர் பாதங்களை வணங்கியவாறு சரசுவதி வேண்டினாள்.
.
தொடரும்... அய்யா உண்டு.


