ஸ்ரீ (969) #🙏 லட்சுமி நரசிம்மர் திண்டுக்கல் சுற்றியுள்ள சில ஊர்களுக்கு பயணம் செய்தால், ஆங்காங்கே நரசிம்மர் ஆலயங்கள் கண்ணில் படும். ஆனால் அவற்றின் வரலாறு பலருக்கும் தெரியாது.
அகோபிலம் பகுதியில் ஒன்பது நரசிம்மர் ஆலயங்கள் இருப்பது போலவே, விஜயநகர மன்னர்கள் காலத்தில் திண்டுக்கல் பகுதியில் ஒன்பது நரசிம்மர் ஆலயங்கள் கட்டினர். நரசிம்மர் இவர்கள் இஷ்ட தெய்வம்.
இந்த ஒன்பது கோவில்களையும் சமீபத்தில் தரிசனம் செய்தோம்.
அந்த காலத்தில் இப்பகுதிகள் பாளையங்களாக இருந்தன. பின்னர் ஜமீன் ஆட்சிக்குள் சென்றன. காலப்போக்கில் பல கோவில்கள் பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து போனது.
அவற்றில் மங்களப்பள்ளி என்ற இடம் மிகவும் சுவாரசியமானது. தற்போது அங்கு மக்கள் குடியிருப்பே இல்லை. ஒருகாலத்தில் அங்கு சென்ற NCC மாணவர்கள் சிதிலமடைந்திருந்த அந்த கோவிலை கண்டுபிடித்துள்ளனர். அதன் பின்னர் பல ஆண்டுகளாக புதுப்பிப்பு பணிகள் நடந்து , இன்று அது சிறப்பான கோவிலாக மாறியுள்ளது.
திண்டுக்கல்லில் பிரபல டாக்டர் இப்பணிக்கு ஒரு கோடி தந்தார்.
அம்மையநாயக்கனூர் கோவில் பணிக்கு ஒரு துவைக்கும் சோப் கம்பெனி ஓனர் ஒண்ணரை கோடி தந்தார். இது எல்லாம் பேசியபோது தெரிந்த விசயம். சத்தமின்றி தந்துள்ளனர்.
திண்டுக்கல் சுற்றியுள்ள அந்த ஒன்பது நரசிம்மர் ஆலயங்கள் உள்ள இடங்கள்:
அம்மையநாயக்கனூர்
நிலக்கோட்டை
கன்னிவாடி
பாளையம்
தேவர்மலை
வேடசந்தூர்
ரெட்டியார்சத்திரம்
சாணார்பட்டி (மேட்டுப்பட்டி)
மங்களப்பள்ளி
(குருநாத நாயக்கனூர் )
இந்த ஆலயங்களை எழுப்பியவர்கள் விஜயநகர அரசர்கள். அவர்கள் வைணவ மரபை சார்ந்தவர்களாக இருந்தாலும், சைவ வழிப்பாடும் செய்துள்ளனர்.
சைவ வைணவ ஒற்றுமை இவர்கள் காலத்தில் தான் உருவாகி உள்ளது.
இதற்குச் சான்றாக, இந்த ஆலயங்களில் பலவற்றில் மூலவர் சன்னதிக்கு அருகே சிவன் சன்னதியும் காணப்படுகிறது.
சைவம் – வைணவம் ஆகிய இரு மரபுகளும் ஒற்றுமையாக இருந்த காலத்தை இது நினைவுபடுத்துகிறது.
ஒரு காலத்தில் முக்கியமான பகுதிகளாக இருந்த இந்த இடங்கள், இன்று அமைதியான பகுதிகளாக மாறியுள்ளன. நிறைய இடங்களில் ஆள் நடமாட்டம் கூட இல்லை.
இந்த கோவில்களுக்கு செல்ல நினைப்பவர்கள் சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
இங்கு பெரிய அளவில் கூட்டங்கள் வருவதில்லை வார நாட்களில் கோவில் விரைவாக நடை சாத்திவிடலாம் . சனிக்கிழமை செல்வது சிறந்தது.
பல கோவில்கள் அருகில் பூக்கடைகள் இருக்காது. பூக்கள், அர்ச்சனை பொருட்கள் போகும் வழியிலேயே வாங்கிக்கொள்வது நல்லது.
அங்கு யாராவது விற்பனை செய்தால், அவர்களிடமிருந்து வாங்கி அவர்களுக்கும் உதவி செய்யுங்கள்
இந்த ஒன்பது கோவில்களையும் சுற்றி வந்த போது, தேவர்மலை கோவிலில் ஒரு வித்தியாசமான அனுபவம் ஏற்பட்டது.
அங்கு யாரும் இல்லை.
ஒரு குருக்கள் மட்டும் உரத்த குரலில், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்தார்.நரசிம்மர் சினம் தணிந்த இடம் என இதை கூறுகின்றனர்.
சில நிமிடங்கள் பேசிக் கொண்ட பிறகு, கோவிலை பூட்டி வைத்து தனது TVS XL வாகனத்தில் அமைதியாக கிளம்பி சென்றார்.
வாய்ப்புள்ள திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள நகரவாசிகள், இந்த மறைந்து போன இந்த வரலாற்று சிறப்பான ஆலயங்களுக்கு ஒருமுறை சென்று பார்த்து வரலாம்.
எந்த ஒரு பழைய கோவில்களுக்கு செல்லும் முன் அதன் வரலாறை ஒருமுறை படித்து செல்லுங்கள் . அது ஒரு புதுவித அனுபவமாய் இருக்கும்.


