ShareChat
click to see wallet page
search
தமிழகத்தில் குருபூஜை கலாச்சாரம்: பகுத்தறிவின் நிழலில் ஒரு புதிய “வழிபாடு” செய்தி: கேப்டன் விஜயகாந்தின் குருபூஜை சிறப்பாக நடந்தது. தமிழகத்தில் குருமார்களுக்கும் பஞ்சமில்லை, பூஜாரிகளுக்கும் பஞ்சமில்லை. “ஒரு மனிதனை மதிப்பது நன்றாகும்; அவனை தெய்வமாக்குவது ஆபத்தாகும்.” தமிழகத்தின் அரசியல்-சமூக வரலாற்றில் “குருபூஜை” என்பது இன்று ஒரு தனித்த கலாச்சாரமாக மாறிவிட்டது. அண்ணாதுரை, எம்ஜிஆர் போன்ற பெருந்தலைவர்கள் இறந்தபின் அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து, புகழாரம் பாடி, நினைவு தினங்களை விழாக்களாக மாற்றி வழிபாடு தொடங்கிய பெருமை பெரும்பாலும் திராவிடக் கட்சிகளையே சேரும். ஆரம்பத்தில் இது “மரியாதை” போல தோன்றியது. ஆனால் காலப் போக்கில் அது சிலைவழிபாடு + அரசியல் அணிவகுப்பு + வாக்கு கணக்கு என்ற கலவையாக வளர்ந்தது. வள்ளலார் சமத்துவத்தையும் கருணையையும் வலியுறுத்தியவர். அவர் வற்புறுத்தியது மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்ற ஒழுக்கம்தான். ஆனால் சில இடங்களில் வள்ளலாருக்கே குருபூஜை நடத்தப்படுவது அவரது சித்தாந்தத்துக்கு நேர்மாறானதாகிறது. தலைவரைத் தெய்வமாக்கும்” கலாச்சாத்தில் சமத்துவம் எங்கே வாழ்கிறது? இந்த இடத்தில் அரசியல்வாதிகளின் நோக்கம்தான் தெளிவாகிறது: குருபூஜை என்பது சமூக உணர்வுக்கான மேடை அல்ல; கூட்டத்தை கூட்டி பலத்தைக் காட்டும் ஒரு நிகழ்வு! உலக அளவில் குருபூஜைக்கு ஒப்பானது, சில நாடுகளில் நிகழும் அரசியல் தலைவர்களின் சிலை (அல்லது புகைப்பட) “வழிபாடு” தான். லெனினின் சிலைகள் ஒருகாலத்தில் சோவியத் மையங்களின் அடையாளமாக இருந்தன. சீனாவில் மாவோவுக்கான நினைவுச் சின்னங்களும் சிலைகளும் உள்ளன. வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் மீது மரியாதை நிமித்தமாக, கட்டாய வழிபாட்டு முறை நிலவி வருகிறது. மத்திய கிழக்கு மன்னராட்சி நாடுகளில், வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும் மன்னர்களின் படங்கள் வைத்திருப்பதைகாணலாம். ஆனால் ஜனநாயக நாடுகளில் இது அரிது. மேலை நாடுகளில் முன்னாள் தலைவர்களுக்கு சிலைகள் இருக்கலாம்; ஆனால் அவற்றுக்கு பூஜை-புனஸ்காரங்கள் நடத்தும் கலாச்சாரம் இல்லை. அங்கே சிலைகள் “வரலாற்றுச் சின்னம்”; இங்கே சிலைகளும் சமாதிகளும் பல நேரங்களில் “அரசியல் முகவரி”. பகுத்தறிவு பேசும் தமிழகம் குருபூஜையில் தனித்துவமாக நிற்கிறது என்பதே irony. பகுத்தறிவு என்றால் கேள்வி கேட்கும் மனநிலை. ஆனால் குருபூஜை என்றால் கேள்வியை மூடும் உணர்ச்சி. இவ்விரண்டும் சேரும் போது உருவாகிறது “பகுத்தறிவு பேசும் வழிபாடு” — இது தமிழகத்தின் விசித்திரமான அரசியல் கலவை. தேசியமும் ஆன்மீகமும் எனது இரண்டு கண்கள் என்று கூறிய தியாகச்செம்மல், தேசியத் தலைவர் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை தமிழகத்தில் மிகவும் பிரசித்தமானது. அது இன்று அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகி விட்டது அவலம். ஒரு நினைவு நாளாக இருந்த குருபூஜை, இன்று அடையாள அரசியலின் பெரிய மேடையாக மாறியுள்ளது. தேவர் குருபூஜை நாளில் திரளும் கூட்டம், விளம்பரங்கள், அணிவகுப்பு, கட்சித்தலைவர்களின் பங்கேற்பு —இவை அனைத்தும் “மரியாதை” என்ற பெயரில் அரசியல் பலம் காட்டும் நிகழ்வாக மாறிவிட்டது. சில நேரங்களில் இது பக்தியையும் சமூக ஒற்றுமையையும் உருவாக்குவதற்கு பதில் பிரிவினை உணர்வை தீவிரப்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. தேவர் குருபூஜை பிரபலமானதைத் தொடர்ந்து, "கானமயிலாட கண்டிருந்த வான்கோழி" கணக்காக எல்லா சாதித் தலைவர்களுக்கும் குருபூஜை நடத்துவது தமிழகத்தில் ஃபேஷனாகிவிட்டது! குறிப்பாக, தேர்தல் காலங்களில் பல்வேறு பகுதிகளில் அந்தந்த வட்டாரத்தில் செல்வாக்குடைய சாதித் தலைவர்களுக்கான குருபூஜைகள், அரசியல் கட்சிகளின் ஆதரவோடு விமரிசையாக நடக்கின்றன. இதில் அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படையாகவே ஒரு “கணக்கு” உள்ளது. அது, "யாருடைய விழாவை ஆதரித்தால் எந்த சமூகத்தின் வாக்கு கிடைக்கும்?" என்பதே. குருபூஜையின் விளைவாக சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, போக்குவரத்து முடக்கம், வன்முறை, பதற்றம் ஆகியவை கூட ஏற்படுகின்றன. இதே ரீதியில் “கேப்டன் குருபூஜை” என ஓர் அரசியல் கட்சியே களத்தில் இறங்குவது, மறுபக்கம் அரசியல் தலைவர்கள் “ஜெயலலிதா கோவில்” போன்ற வழிபாட்டுத் தலங்களை கட்டுவது போன்ற நவீன கலாச்சாரம் ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது: சிலைகள், சமாதிகள், மனித வழிபாடுகள் போன்ற நடைமுறைகள் எல்லாம் சாதி அரசியலின் நீட்சியாகி விட்டதா? இதுதான் பகுத்தறிவா? முடிவில் ஒன்று தெளிவு: திராவிட இலக்கணத்தின் படி "குருபூஜை" என்பது ஆதாயம் தேடும் ஓர் அரசியல் சித்து விளையாட்டு! புரட்சியாவது புடலங்காயாவது? தலைவர்களை நினைவுகூர்வது தவறு இல்லை. ஆனால் நினைவு நாளை வழிபாடாக மாற்றி, அதை வாக்கு இயந்திரமாக இயக்குவது தமிழக சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. தலைவர்களைத் தெய்வமாக்காமல், அவர்களின் கருத்துகளைப் பின்பற்றினால்தான் உண்மையான மரியாதை. #🚹உளவியல் சிந்தனை #📺அரசியல் 360🔴
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:10