தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே படர்ந்தபுளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலச்சந்திரன். இவரது மனைவி திருகேதீஸ்வரி. இந்த தம்பதிக்கு 22 வயதில் கனகராஜ் மற்றும் பாலபாரதி என்ற இரண்டு மகன்கள். பாலச்சந்திரன் தொழில் நிமித்தமாக சொந்த ஊரை விட்டு, சென்னை பூந்தமல்லி அருகே குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு மிக்சர் பாக்கெட் போட்டு கடைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இவரது மூத்த மகன் கனகராஜ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருளுக்கு அடிமையாகி உள்ளார். போதையில் அடிக்கடி சண்டை போட்டு ஊர் வம்பை விலை கொடுத்து வாங்கியுள்ளார்.
இதனால், அவரை சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கே குடும்பத்தினர் அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, தந்தை வழி பாட்டியான மாடத்தி அம்மாளுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 13ஆம் தேதி தனது பைக்கை பழுது நீக்க பணம் கேட்டு பாட்டியிடம் தங்க கம்மல் மற்றும் மோதிரத்தை கனகராஜ் பறித்துள்ளார். இது குறித்து மாடத்தி அம்மாள் தனது மகன் பாலச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, 70 ஆயிரம் ரூபாய் கேட்ட மகனுக்கு ஜி-பே மூலம் இரண்டாயிரத்து 500 ரூபாயை பாலச்சந்திரன் அனுப்பியுள்ளார். மீதி பணத்தை பின்னர் தருவதாகவும் உறுதியளித்துள்ளார். அதைத் தொடர்ந்து கனகராஜ் தனது பாட்டியிடம் பறித்த தங்க மோதிரம் மற்றும் கம்மலை திருப்பிக் கொடுத்துள்ளார். மறுநாளே தான் கேட்ட பணத்தை அனுப்பி விடுங்கள் என்றும், இல்லாவிட்டால் பாட்டியை கொலை செய்துவிடுவேன் என்றும் பெற்றோருக்கு போன் போட்டு மிரட்டியுள்ளான்.
மேலும், போதைப் பழக்கத்திற்கு அடிமையான கனகராஜ், ஊருக்குள் பலரிடம் வம்பிழுத்து தகராறு செய்வதாக மூதாட்டி மாடத்தி அம்மாள் தனது மகனிடம் புலம்பியுள்ளார். அவனை தன்னால் பார்த்துக்கொள்ள முடியாது, உடனே சென்னைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று கெஞ்சியுள்ளார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், அன்று இரவே தனது மனைவியுடன் சொந்த ஊரான படர்ந்தபுளி கிராமத்திற்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து வந்த பெற்றோரிடம், ஞாயிற்றுக்கிழமை இரவில் பணம் கேட்டு தொல்லை செய்துள்ளார் கனகராஜ்.
இது தொடர்பாக சண்டையிட்டு வெளியே சென்றவர் நள்ளிரவில் 12.15 மணிக்கு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தனது பைக்கை சரி செய்ய பணம் கொடுக்காமல் தூங்கிக்கொண்டு இருக்கீங்களா என்று கூறியபடி தந்தையிடம் மல்லுக்கட்டியுள்ளார். அப்பாவை ஏன் கீழே தள்ளி விட்டாய்? என்று கேள்வி கேட்ட தாயாரையும் தாக்கியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த பாலச்சந்திரன், கம்பை எடுத்து கனகராஜ் தலையில் அடித்துள்ளார். உன் தொந்தரவு தாங்க முடியல… நீ ஒழிஞ்சால் தான் எங்களுக்கு நிம்மதி என்று சொல்லிக் கொண்டே கனகராஜ் தலையில் தொடர்ந்து தாக்கியுள்ளார். இருந்த போதிலும் கனகராஜ் மீண்டும் தந்தையை தாக்கப் பாய்ந்துள்ளார்.
: திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி மதிப்பிலான நகை திருட்டு... ஊழியர்களிடம் தீவிர விசாரணை...
அதில் கண்கள் சிவந்த பாலச்சந்திரன், கடும் ஆத்திரத்தில் அருகில் இருந்த கிரைண்டர் கல்லை எடுத்து மகனின் தலையில் தாக்கியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த கனகராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து எட்டையபுரம் போலீசார் வழக்குப் பதிந்து, பாலச்சந்திரனை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட கனகராஜ் மீது எட்டையபுரம் மற்றும் நாலட்டின் புதூர் காவல் நிலையங்களில் கஞ்சா விற்பனை உள்ளிட்ட சில வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
: சென்னையின் முக்கிய பகுதியில் என்கவுன்டர்.... பிரபல ரவுடி சுட்டுக்கொலை!
கஞ்சா போதைக்கு அடிமையான மகன், பைக் பழுது நீக்க 70 ஆயிரம் ரூபாய் கேட்டு தகராறு செய்த ஆத்திரத்தில், தந்தையே கிரைண்டர் கல்லை தலையில் போட்டு, கொலை செய்த சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #📢மார்ச் 17 முக்கிய தகவல்🫠


