#pagirthal perinnbam. தருதல் பேரின்பம்.
பகிர்ந்து கொடுப்பது என்றால் எதை? எந்த அளவுக்கு? உங்களிடம் உள்ள அறிவை மற்றவருக்குப் பகிர்ந்து கொடுங்கள்; திறனைப் பகிர்ந்து கொடுங்கள்; ஆலோசனையைப் பகிர்ந்து கொடுங்கள்; உழைப்பைப் பகிர்ந்து கொடுங்கள்; உணவைப் பகிர்ந்து கொடுங்கள்; இறைவன் உங்களுக்கு என்னென்ன நலன்களைக் கொடுத்தானோ, அவை அனைத்தையும் பகிர்ந்து கொடுங்கள்.
எந்த அளவுக்குப் பகிர்ந்து கொடுப்பது என்னும் கேள்வி எழுகிறதா? ‘நிதி மிகுந்தவர் நிதி தாரீர்; நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்; அதுவும் இல்லாதவர் வாய்ச் சொல் அருளீர்’.
உங்கள் வருமானத்தில் நூற்றில் ஒரு பங்கு, இரண்டு பங்கு என்று தொடங்கி, உங்கள் வருமானம் உயர உயர ஐந்து சதவீதம், பத்து சதவீதம் என்று உயர்த்தி, தேவையை மீறிய வருமானம் வரும் போது பாதிப் பங்கை நீங்கள் பகிர்ந்து கொடுத்தாலும் பாதகமில்லை.
இறைக்கிற கிணறு தான் ஊறும்; வற்றாது;
பகிர்ந்து கொடுத்தல் மேன்மையானது தான். யாருக்குப் பகிர்ந்து கொடுப்பது? இறைவனுக்கு நன்றி செலுத்துவாக நினைத்துக் கோயில், ஆலயங்களின் உண்டியல்களில் கொண்டு போய்ப் போடலாமா...
போடலாம். ஆனால் அது துன்பம், துயரத்தில் வாழ்கிற, தேவையில் உள்ள ஏழை, எளிய சகோதரருக்குப் போய்ச் சேருமா? ஆகவே தேவைப் படுவோர்க்கு நேரடியாகக் கொடுங்கள். இடைத்தரகர்கள் எவரும் வேண்டாம்.
பகிர்ந்து கொடுப்பதற்கு எத்தனை வழிகள், வாய்ப்புகள் உள்ளன! தேடிப் பாருங்கள்.
உங்கள் பிறந்த நாள் வருகிறதா? மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டுமா? ஆயிரம் ரூபாய் ஒதுக்குங்கள்; உங்கள் அருகில் உள்ள அநாதை இல்லத்தைத் தேடிக் கண்டு பிடியுங்கள். அதிகாலை நேரத்தில் இனிப்புப் பெட்டிகளுடன் செல்லுங்கள். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குங்கள். அவர்கள் ஆர்வத்துடன், முக மலர்ச்சியுடன் தின்பதை அன்போடு பாருங்கள்; உங்களுக்கு ஆனந்தக் கண்ணீர் வரும்.
தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் கொண்டாடுபவரா நீங்கள்? பண்டிகைச் செலவில் இரண்டாயிரம் ரூபாய் சேர்த்துக் கொள்ளுங்கள். முதியார் இல்லம் ஒன்றைத் தேடிச் செல்லுங்கள் அன்றைய மதிய உணவுச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆதரவற்ற, அநாதைகளான அவர்களுடன் சேர்த்து அமர்ந்து உணவருந்துங்கள். அவர்கள் வயிறார, ருசித்து உண்ட பிறகு அடைகிற மகிழ்ச்சி உங்கள் ஆரோக்கியத்தை வளர்ப்பதுடன் ஆயுளையும் நீட்டிக்கும்.
பள்ளிகள் திறந்து விட்டனவா? பத்துப் பேருக்காவது சீருடை வாங்கிக் கொடுங்கள், ஐந்து பேருக்காவது புத்தகம், குறிப்பேடுகள் வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் ஒரு ஏழைக் குழந்தையின் ஆண்டின் படிப்புச் செலவை முழுதாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
இவ்வாறாக பகிர்ந்து கொடுக்க மனமின்றி தனக்காகவும், தன் குடும்பத்திற்காகவும் பணத்தைப் போற்றி வைத்தால் என்ன நடக்கும்?
அடுத்த தலைமுறையில் சோம்பேறிகளாலும், ஊதாரிகளாலும் அச்செல்வம் அழிக்கப்படும். என்ன எண்ணிச் செல்வம் சேர்க்கிறோமோ அச்செல்வம் அவர்களுக்கு நன்மை செய்வதை விடுத்து தீமையே செய்கிறது.
கொடுங்கள் ! அப்போது உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்னும் ஏசுக் கிறிஸ்துவின் மொழி மெய்யானது. நிறைவான மனதுடன் நீங்கள் மற்றவருக்கு என்ன கொடுக்கிறீர்களோ அது பல மடங்காக உங்களிடம் திரும்பி வரும்.
எவருக்குக் கொடுத்தீர்களோ, அவரிடம் இருந்தே நேரடியாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம். வேறு பல திசைகளிலிருந்து, நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாக உங்களுக்குக் கிடைக்கும்.
தர்மம் தலை காக்கும்’ என்பது சாதாரண மொழி அன்று. பகிர்ந்து கொடுப்பதால் நீங்கள் அடையக்கூடிய பேரின்பத்தை அது வலியுறுத்துகிறது.
ஆகவே, பணம் சேர்ப்பதில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறீர்களோ அவ்வளவு பகிர்ந்து கொடுப்பதில் ஆர்வம் செலுத்தங்கள்.
பகிர்ந்து கொடுத்தல் பெரும் பேரின்பம்.
இது தான் வெற்றியின் இரகசியம்! 😊😊😊


