ஆடிய ஆட்டம் என்ன?
கூடிய கூட்டம் என்ன?
பதவிவிட்டு இறங்கிப் போனால்
கூடவே வருவதென்ன…?
ஐயோ பாவம் அண்ணாமலை! யாருமற்ற அனாதையாய் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
கட்சியை வளர்ப்பதாக பேர் பண்ணிக் கொண்டு, சதா சர்வ காலமும் தன்னை வளர்த்துக் கொண்டவர் தான் அண்ணாமலை.
சொந்த கட்சிக்காரனுக்கே சூனியம் வைத்தார். பாடுபட்ட பழைய கட்சிக்காரர்களை எல்லாம் பந்தாடினார்! கண் அசைவில் கட்சியை ஆட்டுவித்தார் அண்ணாமலை !
எல்லோரையும் தூக்கி எறிந்து பேசினார்! உச்சகட்ட சுய நலத்தால் அச்சம் தரும் அரசியலை அரங்கேற்றினார்.
தற்போது பிரதமரை வரவேற்கும் நபர்களில் ஒருவராகக் கூட அண்ணாமலையை சேர்க்க முடியாது என நயினார் நாகேந்திரனும், எல்.முருகனும் அண்ணாமலையை தவிர்த்து விட்டார்களாம்.
சகலமும் நானே என சதிராடிய அண்ணாமலை இன்று சர்வமும் ஒடுங்கி அமைதி காக்கிறார்.
ஆனாலும் அண்ணாமலைக்கு துதிபாடும் ஊடக அடிமைக் கூட்டத்தினர், ’’அண்ணாமலை தான் பிரதமர் மோடி வருகையை புறக்கணித்தார்’’ என வீர வசனத்தை எழுதினர். உடனே தமிழக பாஜக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய அவரை வரவேற்கும் நபர்களின் பட்டியலை பொதுவெளியில் அம்பலப்படுத்தி அண்ணாமலையை அசிங்கப்படுத்திவிட்டனர்.
அதே போல கூட்டணி கட்சி உட்பட 35 தொகுதிகளில் தாமரை சின்னத்திற்கு போட்டியிடுபவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் அண்ணாமலைக்கு மறுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அண்ணாமலைக்கு தேர்தல் வேலை செய்ய ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அப்பாவின் உடல் நிலையை காரணம் சொல்லி நிற்க மறுத்துவிட்டார். அண்ணாமலையின் அப்பா ஒன்றும் உயிருக்காக போராடிக் கொண்டு ஐ.சியுவில் இல்லை. தேவையில்லாமல் தந்தை பெயரை தன் அரசியல் நிலைபாட்டுக்கு அவர் பயன்படுத்தி கட்சி வேலை செய்ய மறுத்த நிலையில் அவருக்கு எப்படி தொகுதி தருவார்கள்.
எம்.எல்.ஏ சீட் கொடுத்தால் அப்பா உடல் நிலை சரியாகிவிட்டது எனச் சொல்லி வெட்கமின்றி வாங்கிக் கொள்வார் அண்ணாமலை என்பதால் அவருக்கு திட்டவட்டமாக மறுக்கப்பட்டுவிட்டது.
உடனே அண்ணாமலையின் துதிபாடியான தினமலர் உள்ளிட்ட ஊடகங்கள் ’’அண்ணாமலைக்கு நேரம் சரியில்லை என ஜோசியர் சொல்லியதால் அவர் தேர்தலில் நிற்பதை தவிர்த்து விட்டார்’’ என எழுதுகின்றன.
அண்ணாமலைக்கு ஒரு கட்சியை நிர்வாகிக்கும் தகுதி அறவே கிடையாது. அவர் இங்கு செய்ததெல்லாம் தேசிய அரசியல் என்ற பெயரில் ஏசிய அரசியலையே. ’எப்படியோ திமுகவை ஏசுவதற்கு தங்களுக்கு ஒருவன் கிடைத்துவிட்டானே..’ என பார்ப்பன ஊடகவாதிகள் அண்ணாமலையை உச்சி மோந்தனர்.
திமுக அமைச்சர்கள் சொத்து விபரங்களை அறிந்து கொண்டு, தாறுமாறாக அறிக்கை விட்டு பிளாக்மெயில் அரசியல் செய்தே பெரும் செல்வந்தரானார்!
’திமுகவை தீய சக்தி’ என்று கூறி, திமுகவுக்கும் ஒருபடி மேலாக தில்லாலங்கடி அரசியல் சித்து விளையாட்டுகளை நிகழ்த்தினார்.
டெல்லிக்கு மட்டும் கப்பம் கட்டினால் போதாது, கமலாயத்தில் உள்ள என் கைகளுக்கும் வர வேண்டும்.. என்று ஏக போக வசூல் ராஜ்ஜியம் செய்தார்.
ஆருத்ரா தொடங்கி அன்னபூர்ணா வரை அண்ணாமலையின் லீலைகள் கொஞ்சமா…?
அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பு தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டதெல்லாம் அவர் அறிமுகம் செய்த நாடக அரசியலின் நகைச் சுவை அத்தியாயமாகும்.
திமுக அரசுக்கு கூட்டணிக் கட்சிகள், ஊடகங்கள் அனைத்தும் லாலி பாடிக் கொண்டிருந்த ஒரு துர்பாக்கியமான கால கட்டத்தில் - அதிமுக தலைமையும், முன்னாள் அமைச்சர்களும் ஊழல் வழக்குகளை நினைத்து பயந்து ஊமை வேசம் போட்ட காலகட்டத்தில் - திமுகவை தட்டிக் கேட்ட அண்ணாமலையின் குரல் ஓங்கி ஒலித்து, அட்டகாச முக்கியத்துவம் அடைந்தது.
தன்னை துதிபாடுவதற்கென்ற ஒரு ஐ.டிவிங்கை கட்சிக்குள் ஏற்படுத்தி ’வார் ரூம்’ என்று டிஜிட்டல் யுத்தம் செய்து எதிரிகளை துவம்சம் செய்தார்.
தனிக் கட்சி, தனக்கென்று தனியாக துதிபாடும் கூட்டம் என தனிக்காட்டு ராஜாவாக வலம் வர வேண்டும் என்று திட்டமிட்ட அண்ணாமலை குறித்து சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டு, குட்டு வைத்தது பாஜகவின் டெல்லித் தலைமை.
அதிமுகவுடன் சிதைத்துக் கொண்ட உறவையும் சீர் செய்து கொண்டனர். திமுகவின் மீதான சீண்டலுக்கும் முற்றுப் புள்ளி வைத்தனர். சொந்தக் கட்சியினரும் சுதந்திரக் காற்றை சுவாசித்தனர். அண்ணாமலையின் அலங்கோல அரசியலும் முடிவுக்கு வந்தது.
சாவித்திரி கண்ணன் #👨மோடி அரசாங்கம்


