#நல்லதே பேசு நல்லதே நினை புதிய மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாளர் பற்றாக்குறை – முதல்வரிடம் முஸ்லிம் மக்கள் கழகத்தின் கோரிக்கை
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஆய்வக மற்றும் மருத்துவ பணியாளர் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என முஸ்லிம் மக்கள் கழகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மு.க. ஸ்டாலின் அவர்கள் கடந்த 4-ம் தேதி காணொளி வாயிலாக மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மருத்துவமனை திறக்கப்பட்டு மூன்று வாரங்கள் கடந்தும் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள், லேப் டெக்னீசியன்கள் உள்ளிட்ட பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்படவில்லை.
இதனால் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக ஆய்வகப் பிரிவில் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக பரிசோதனைகள் தாமதமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
எனவே, ரூ.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட இந்த தலைமை அரசு மருத்துவமனை முழுமையாக செயல்பட உடனடியாக போதிய மருத்துவர்கள், செவிலியர்கள், உதவி பணியாளர்கள் மற்றும் லேப் டெக்னீசியன்களை கருணை மனதுடன் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லிம் மக்கள் கழகம் சார்பில் தமிழக முதல்வரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


