#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஆறாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
சோழக் குருநாடு தேசமது நன்னாடு
ஆளவை குண்டர் அவர்வளரும் நன்னாடு
இந்நாட்டில் வாழும் இராச ருடவளமை
சொன்னால் தொலையாது சொல்ல எளிதல்லவே
இப்புவியில் வாழும் என்றன்வை குண்டரிடம்
எப்புவியில் வாழும் இருஷிகன் னாசியெல்லாம்
வரம்வைக்கச் சொல்லி வதைக்கவந்த வைகுண்டர்காண்
பரம்பெரிய வைகுண்டப் பதியாள வந்தவர்காண்
சன்னாசி யெல்லாம் தலைவீதம் வாழுகின்ற
மின்னான சீமை விரிக்கக்கேள் நீங்களெல்லாம்
.
விளக்கம்
==========
இந்த ஐம்பத்தாறு தேசங்களிலும் சோழநாடு மிகவும் நல்ல நாடு. அந்த நாடு இப்பொழுதே எதிர்காலத்தில் யாம் வைகுண்ட அவதாரமாக வந்து வளர்க இருக்கும் தருமச் சீமை போல் உள்ளது.
.
அந்தச் சோழ நாட்டை ஆண்டுகொண்டிருக்கும் மன்னின் பெருமைகளை சொல்வதென்பது எளிதானதில்லை. அவ்வளவு சிறப்புடையவன் அம்மன்னன். அங்கே எதிர்காலத்தில் வரவிருக்கும் வைகுண்ட நீதம் இப்போதே நடைமுறையில் இருந்து வருகிறது. இத்தகு நிலையில் யாம் வைகுண்டமாக பதியாள வரும்போது ஆங்காங்கே வாழுகின்ற ரிசிகளையும் சன்னாசிகளையும் எம்மிடம் வருவித்து, அவர்கள் பெற்றுள்ள வரங்கள் யாவையும் வாங்கிவிட்டு அவர்களை மீண்டும் பிறப்பித்து, பூலோகத்திலுள்ள துவாரகையை வைகுண்ட லோகமாக்கித் தர்மச் சீமையை ஆட்சிபுரிவோம். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்ற ரிசிமார்களின் நிலவரம் பற்றி விவரமாகச் சொல்லுகிறேன் கேளுங்கள்.
.
.
அகிலம்
========
பாண்டிய னான பரிகொங்கை நன்னாட்டில்
ஆண்டிருப்பான் சன்னாசி அவனொருவன் கேட்டிருநீ
வருஷ மொருநேரம் மாறிப் பிறந்தேனென்று
புருஷனென வந்தெடுத்தால் பிள்ளையுண் டென்றுசொல்லி
இருப்பான் சிலநாள் இவனொரு சன்னாசி
.
விளக்கம்
=========
ஒன்றாம் சன்னாசி பாண்டிய நாட்டில் வாழ்வான். அவன் ஆண்டாண்டு தோறும் புதுப்புதுப் பிறவி எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்றும், பிள்ளை இல்லாத பெண்கள் என்னைப் புருஷனாக ஏற்றுக்கொண்டால் நான் பிள்ளை தருவேன் என்றும் சொல்லிக்கொண்டே சிலகாலம் வாழ்வான்..
.
.
அகிலம்
========
சிங்கள நன்னாட்டில் சீகண்டன் ராச்சியத்தில்
புங்கம்பா லுண்டு பூவையரைப் பாரோமென்று
ஆடை யுடுக்காமல் அவனிருப் பானொருவன்
.
விளக்கம்
==========
இரண்டாம் சன்னாசி சிங்கள நாட்டில் சில பக்தர்களில் ஒருவனாக இருப்பான். உயர்தரமான பாலை மட்டுமே உணவாக அருந்தும் இவன், பெண்களைக் கண்கொண்டு பார்க்கவே மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு ஆடை எதுவுமே அணியாமல் இருப்பான்.
.
அகிலம்
=======
கோரக்க நாடு குருக்கேத்திரன் ராச்சியத்தில்
சூரக்கோல் கைப்பிடித்துச் சூலா யுதமேந்தி
தன்மதத்தால் பேசித் தானிருப்பா னேசிலநாள்
கன்மத்தால் சாவான் கடியமூன் றாம்பேர்தான்
.
விளக்கம்
=========
மூன்றாம் சன்னாசி கோரக்க நாட்டில் பிரம பக்தர்களில் ஒருவனாக வாழ்வான். இவன் சூலாயுதத்தை ஒரு கையிலே ஏந்திக்கொண்டும், இன்னொரு கையில் வலிய கைத்தடியைப் பிடித்துக்கொண்டும் எல்லாம் நானே என்ற ஆணவத்தோடு அலைந்து இறுதியில் ஜென்மாந்திர நோயால் சீரழிந்து சாவான்.
.
அகிலம்
========
இப்படியே யைம்பத் தாறூ ரிவைகளுக்கும்
அப்படியே தானிருக்கும் ஆனசன் னாசிகட்கு
ஒண்ணொண் ணடையாளம் உரைக்கிறேன் சீக்கிரமாய்
துண்ணெனவே நீங்கள் துணிந்துமிகக் கேளுமென்று
நாலாஞ் சன்னாசி நயன மிமையாதிருப்பான்
காலைக் கைகொண்டு கட்டிறுக்கி யேயிருப்பான்
.
விளக்கம்
=========
இத்தகைய நிலையில் ஐம்பத்து ஆறு தேசங்களிலும் ஆளுக்கொரு விதமாக அலைந்து திரியும் ஐம்பத்து ஐந்து சன்னாசிகளின் அடையாளங்களையும் மிகத் துரிதமாகச் சொல்லுகிறேன். நீங்கள் அதைக் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள்.
.
நான்காம் சன்னாசி தம் கால்களைக் கைகளால் கட்டி இறுக்கிப் பிடித்துக்கொண்டு, எப்பொழுதும் கண்களை இமைக்காமல் இருப்பான்.
.
அகிலம்
========
அஞ்சாஞ் சன்னாசி அன்னங் குடியாமல்
பிஞ்சிரு மிச்சியிலை பிசைந்துதின் றேயிருப்பான்
ஆறாஞ் சன்னாசி ஆனகஞ் சாகுடித்து
நீறாக்கித் தேகமதை நிஷ்டைபோல் தானிருப்பான்
ஏழாம் சன்னாசி இடுப்பிலொரு சீலைகட்டிப்
பாழாகப் பட்சி பறவைதின்றே யிருப்பான்
எட்டாஞ் சன்னாசி இருந்துமிகக் கண்மூடி
கட்டாய்ச் சுவாசமதைக் கவர்ந்துகவர்ந் தேயிருப்பான்
ஒன்பதாஞ் சன்னாசி உமிழ்நீ ரிறக்காமல்
இன்ப விறுவிறுத்து ஈரவம்போல் கண்வெளுத்துத்
தூங்கினாற் போலே சூழச்சூழ விழித்துப்
பாங்குகள் தேடிப் பதிந்திருப்பான் கண்டீரே
பத்தாஞ் சன்னாசி பதிவாக நாள்தோறும்
சிற்றா மணக்கிலையில் துயிலுவான் கண்டீரே
பதினொராஞ் சன்னாசி பவளமணிக் கோர்வையிட்டுத்
துதியா யொருமூலம் சொல்லித்தினம் சேவித்து
உரிய உளுந்தும் ஓயாமல் கஞ்சாவும்
சதமென்று நம்பி தானிருப்பான் கண்டீரே
.
விளக்கம்
=========
ஐந்தாம் சன்னாசி அன்னமே அருந்தாமல் எலுமிச்சையின் கொழுந்து இலையைக் கசக்கித் தின்றே வாழ்வான்.
.
ஆறாம் சன்னாசி கஞ்சா புகையை உறிந்து உறிந்து உடம்பைக் கெடுத்து அருந்தவத்தோனைப் போன்று அசையாமல் அமர்ந்து இருப்பான்.
.
ஏழாம் சன்னாசி இடுப்பில் மட்டும் ஒரு துணியைக் கட்டிக் கொண்டு, கண்ட கண்ட பச்சிப் பறவைகளையெல்லாம் பிடித்து பச்சையாகவே தின்று வாழ்வான்.
.
எட்டாம் சன்னாசி கண்களை மூடிக்கொண்டு, சுவாச நிலையைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து சுவாசித்த வண்ணம் வாழ்வான்.
.
ஒன்பதாம் சன்னாசி தம் உமிழ் நீரைக் கூட உட்கொள்ளாமல் எந்நேரமும் ஆன்மிக இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்பான். அவனுடைய கண்கள் நீர் அரும்பலைப் போல வெளுத்துக் காணப்படும். அவனுடைய செயல்களோ அப்போது தூங்கி விழித்தவன் போல் துரு துரு என்றிருக்கும். அவன் தங்குவதற்கு பக்குவமான இடங்களைத் தேடிப்பிடித்துப் பவ்வியமாகவே இருப்பான்.
.
பத்தாம் சன்னாசி தினந்தோறும் ஊர் ஊராக அலைந்து திரிந்து ஆமணக்குத் தழைகளைப் பறித்து, அதைப் படுக்கைபோல் விரித்து அதன்மேல் உறங்குவான்.
.
பதினோராம் சன்னாசி சதா காலமும் பவளமணிகளைக் கோத்துக்கொண்டே, இறைவனின் நினைவோடு, விளக்கிச் சொல்ல முடியாத மந்திரங்களைச் சொல்லி உருவேற்றிய வண்ணம் தன் கைவிரல் அங்குலாஸ்திகளை மடக்கி வைத்து ஏதாவது ஒன்றினால் அதைக் கட்டிக் கொண்டு இருப்பான், உணவுக்காக உளுந்தையும், கஞ்சாவையுமே உண்டு கொண்டிருப்பான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


