ShareChat
click to see wallet page
search
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 முகூர்த்தக்கால் / பந்தக்கால் நடுவது ஏன்...?? ஹிந்து மதத்தில் ஒருவருக்கு திருமணம் ஆகப் போகிறது என்றாலே... திருமணத்திற்கு ஐந்து நாட்களுக்கு முன் வீட்டில் முகூர்த்தக் கால் நடுவார்கள். இது எதற்காக நடுகிறார்கள்...? என்பது பலருக்கு தெரியாத ஒன்றே. இந்த முகூர்த்தக்கால் நடும் வழக்கத்தை நம் முன்னோர்களிடம் இருந்து நாமும் இன்றளவும் பின்பற்றி வருகிறோம். திருமண வீடுகளில், திருமணம் நடப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் சுபகூர்த்த நாளில், சுபமுகூர்த்த நேரத்தில் முகூர்த்தக் கால் நடப்படுகிறது. நடைபெறப்போகும் திருமணம் இறை அருளாசியோடு மணமக்கள் இன்புற்று மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதைக் குறிக்கவே பந்தக்கால் அல்லது முகூர்த்தக் கால் நடப்படுகிறது. மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும். திருமணத்தின் போது மணமகன் மற்றும் மணமகள் இல்லங்களிலும், திருமணம் செய்யும் இடத்திலும் வடகிழக்கு திசையில் முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன் மற்றும் மணப்பெண் இவர்களுக்கு மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில் இடப்படும் மணப் பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள். மூங்கிலும், பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல் மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்காகும். இந்த பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் ஏன் நடுகிறார்கள்...?? அவற்றை நட்டால் என்ன பயன்...?? எந்த திசையில் முகூர்த்த கால் நட வேண்டும்? போன்ற கேள்விகளுக்கான பதில்களை இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்!! முகூர்த்தக்கால் நடும் முறை எப்படி வந்தது? தற்போது திருமண விழாக்களின் போது குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்திற்கு அழைப்பிதழ் வைத்து வணங்குவது போல், முற்காலத்தில் திருமணம் ஆக போகிறது என்றால் அந்நாட்டு அரசனுக்கு மரியாதை செய்யும் வகையில் திருமண அழைப்பிதழை அரசனுக்கு அனுப்பி வைப்பார்கள். ஆனால், அரசனால் அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலாது. அதற்காக அவர் தனது ஆணைக்கோலை திருமண விழாவிற்கு அனுப்பி வைப்பார். அரசனிடம் இருந்து அந்த ஆணைக்கோல் வந்து விட்டாலே அத்திருமணம் அங்கீகரிக்கப் பட்டது என்று அர்த்தம். இந்த வழக்கம் நம் முன்னோர்களிடம் இருந்து இன்றளவும் பந்தக்கால் நடும் முறை வளர்ந்து வருகிறது. முகூர்த்தக் கால் நடப்பட்ட பிறகு எந்த ஒரு துக்க நிகழ்ச்சியிலும் பங்கேற்கக் கூடாது என்ற கட்டுப்பாடும் இந்த நடைமுறையில் உள்ளது. பந்தக்கால்: திருமணத்திற்கு முன்னதாகவே வீட்டில் முகூர்த்த கால் நட்டு மாவிலையால் தோரணம் கட்டுவது ஐதீகம். கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கும் முன்பும் வீட்டில் திருமணம் நடைபெறுவதற்கு முன்பும், பந்தக்கால் அல்லது முகூர்த்த கால் நடும் விழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருமணம் நடைபெறுவதற்கு ஐந்து அல்லது மூன்று நாட்களுக்கு முன்பாக வீட்டின் ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கு பகுதியில் பந்தக்கால் நடப்படும். இது, வீட்டில் மங்கல நிகழ்ச்சி நடப்பது உறுதி செய்யப்பட்டு விட்டதன் அடையாளமாக கருதப்படுகிறது. பந்தக்கால் நடும் முறை: கல்யாண முருங்கை மரத்தின் ஒரு கிளையை வெட்டி அதிலுள்ள இலைகளை அகற்றி, அதன் நுனியில் ஐந்து மாவிலைகளை மஞ்சள் பூசிய கயிற்றால் கட்டி, இடையில் ஒரு மஞ்சள் பூசிய வெள்ளைத் துணியில் ஒரு செப்புக்காசு வைத்து முடிந்து கட்டிவிட வேண்டும். உறவினர்கள் அனைவரையும் அழைத்து வீட்டிலுள்ள அந்த மரத்தை நட வேண்டிய இடத்தில் வைத்து அதற்கு பூக்கள் சாற்றி, தேங்காய் உடைத்து, சாம்பிராணி மற்றும் கற்பூரம் காட்டி பூஜையினை செய்ய வேண்டும். அதை நடும் இடத்தில் உள்ள குழிக்குள் நவதானியத்தோடு நீர், பால் ஊற்றி மரத்துக்கு திருநீறு, சந்தனம், குங்குமம் போன்றவற்றை இட வேண்டும். இதுதான் முகூர்த்தக்கால் நடும் முறை. பந்தக்காலை நட்டபின், பெண் மற்றும் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் திருமணச் சடங்குகள் முடியும் வரை எந்தவித துக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கக் கூடாது என்பது நியதி. முகூர்த்த கால் நட காரணம்: திருமண நிகழ்ச்சியின் ஆரம்ப சடங்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெறும். கண்திருஷ்டி விலகி, நடக்க போகும் சுபகாரியம் நல்லபடியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவும், தீமைகள் ஏதும் அனுகாமல் மணமக்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப் படுகிறது. இதனைத் தொடர்ந்தே மற்ற திருமண சடங்குகளை குடும்பத்தினர் துவக்குவார்கள். மணமகன் வீடு, மணமகள் வீடு மற்றும் சுப நிகழ்ச்சி நடைபெறும் இடம் ஆகியவற்றில் தனித்தனியாக, இந்த முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சுப முகூர்த்த நாளில், சுப முகூர்த்த வேளையில் நடைபெறுவது அவசியம் ஆகும். நடைபெறும் சுப காரியமானது இறைவனின் அருளால் நல்ல படியாக நடைபெற வேண்டும் என்பதற்காகவே பந்தக்காலில் பால் ஊற்றி நடப்படுகிறது. மூங்கில் அல்லது பலா மரம் செழித்து வளர்வது போல, புதிதாக வாழ்க்கையை துவங்க போகும் மணமக்களின் வாழ்க்கையும் செழித்து வளர வேண்டும் என்பதற்காகவே இந்த சடங்கானது நடத்தப்படுகிறது. ஈசானிய மூலையானது சிவனுக்குரிய திசை ஆகும். அவரின் அருளானது நடக்க போகும் சுப காரியத்தில் நிறைந்திருக்க வேண்டும் என்பதை குறிக்கவே பந்தக்கால் வடகிழக்கு திசையில் நடப்படுகிறது.
நலம் வாழ - ShareChat