#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை
கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால்
வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே
இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ
கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ
இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால்
புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே
.
விளக்கம்
=========
இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் திருமணமானவர்களாக இருக்குமோ? வாலிப வயதிலே அந்தப் பாதகன் வஞ்சகமாகக் கொன்றிருப்பானோ? அவர்களுக்குக் கலியாணம் ஆகியிருந்தால் வாலிபமான அந்த மங்கையர்கள் மனம் வருந்தி வாடுவார்களே. அவர்களின் ஆடை ஆபரணங்களை எல்லாம் கழற்றி இரப்பார்களே. அவர்களுக்கு எம்பிள்ளைகள் கட்டின மாங்கல்யத்தையும் கழற்றியிருக்கக் கூடுமே. இவற்றையெல்லாம் கழற்றாமல் இருக்க சிவபெருமான் அவர்களுக்கு அறிவைக் கொடுத்திருக்க வேண்டுமே, எங்களுடைய அன்னையாகிய உமாதேவியே, என்னதான் நடந்தது என்று எதையும் நிதர்சனமாக அறிய முடியவில்லையே.
.
.
அகிலம்
=======
கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே
வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று
புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே
கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு
மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே
கன்னிப் பருவமதில் கைமோச மானதினால்
உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப்
பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச்
சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி
பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித்
தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே
.
விளக்கம்
=========
கோதண்டமுடைய தாயே, எங்களையெல்லாம் வைத்து ஆட்சிபுரிகின்ற மாதாவே! நாங்கள் தவம் புரியும் இந்த வனத்திற்கு எங்களைத் தேடி நீங்கள் வந்ததால் எங்கள் துயரங்கள் யாவும் தீர்த்துவிட்டீர்கள் என்று கிடைத்தற்கரிய கனி கிடைத்தாற் போன்று மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம் மாதாவே ! ஆனால், எங்களை கைப்பிடித்த பொக்கிஷம் சொன்ன செய்திகளைக் கேட்டதும் எங்கள் உடலின் ஒவ்வொரு அங்கமும் தடுமாறுகிறது தாயே.
.
கன்னிப் பருவத்திலே நாங்கள் மகாவிஷ்ணுவின் மாய்கையினால் கற்பை இழந்துவிட்டதை நினைத்து நினைத்து மனம் இடிந்து ஒடிந்து போய்விட்டதால் எங்கள் பிள்ளைகள் என்று கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக அந்த வனத்தரையில் படுக்க வைத்துவிட்டு வெட்கம் தாளாமல் தவம் செய்யக் கானகம் தேடிச் சென்று விட்டோம். சோழனென்ற கெடுவான் இப்படி எம்பிள்ளைகளில் இரண்டைப் பலிகொள்வான் என்று எங்கள் மனம் சற்றும் அறியாமல் போய்விட்டதே.
.
.
அகிலம்
=======
எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும்
சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர்
நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில்
சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம்
எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன்
கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ
இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக்
கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம்
இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும்
மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும்
குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத்
திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும்
கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க
அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால்
ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம்
நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும்
.
விளக்கம்
=========
எங்களைச் சீர்கெடச் செய்து, நாங்கள் பெற்ற பிள்ளைகளையும் பெருமை குலையச் செய்வதற்காகவே கபடநாடக சூத்திரதாரியாகிய மகாவிஷ்ணு ஆட்பட்டிருக்கிறார். நாங்கள் அன்றாடம் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட இடத்தில் விஷ விருட்சம்போல் சன்னியாசி கோலத்தில் வந்து உலகத்தையே உடைமையாகக்கொண்ட மகாவிஷ்ணு எங்களுக்குத் துரோகம் செய்து விட்டார்.
.
எங்களையெல்லாம் இந்நிலைக்கு ஆட்படுத்துவதற்காகத் தான் பிரம்மதேவன் இவரைப் படைத்தாரா? இவற்றையெல்லாம் கங்கையைத் தம் தலையில் அணிந்து கொண்டிருக்கும் சிவ பெருமான் கேள்விப்பட்டும் மகிழ்ச்சியோடு இருக்கிறாரா?
.
இத்தனை நாடகத்தையும் இந்த விளையாட்டையும் நடத்துவதற்காக நடிகனாக வேடங்கொண்ட மகாவிஷ்ணு இனி எங்களை மாலையிட்டு மனைவியர்களாக ஏற்று, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் எந்த குறையும் இல்லாமல் தந்து, இந்த உலகத்தையும், உலகத்தை ஆளுவதற்கான மகிமை மிகுந்த மகுடமும், அதற்கான செங்கோலும் அருளி, எங்களுடைய மக்கள் இந்த உலகத்தை ஆட்சிபுரிவதற்கு உடனே ஏற்பாடு செய்து தரவேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தால் எங்கள் ஏழுபேருக்கும் தீங்கு செய்த பாவம் உம்மைப் பற்றிக்கொள்ளும். எனவே, காலதாமதமின்றி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாரும்.
.
தொடரும்... அய்யா உண்டு.


