பைபிள் வாசகங்கள்:
பிப்ரவரி 22 : முதல் வாசகம்
முதல் பெற்றோரைப் படைத்ததும் அவர்களின் பாவமும்.
தொடக்க நூலிலிருந்து வாசகம் 2: 7-9; 3: 1-7
ஆண்டவராகிய கடவுள் நிலத்தின் மண்ணால் மனிதனை உருவாக்கி, அவன் நாசிகளில் உயிர் மூச்சை ஊத, மனிதன் உயிர் உள்ளவன் ஆனான்.
ஆண்டவராகிய கடவுள் கிழக்கே இருந்த ஏதேனில் ஒரு தோட்டம் அமைத்துத் தாம் உருவாக்கிய மனிதனை அங்கே வைத்தார். ஆண்டவராகிய கடவுள் கண்ணுக்கு அழகானதும் உண்பதற்குச் சுவையானதுமான எல்லா வகை மரங்களையும், தோட்டத்தின் நடுவில் வாழ்வின் மரத்தையும் நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்தையும் மண்ணிலிருந்து வளரச் செய்தார்.
ஆண்டவராகிய கடவுள் உருவாக்கிய காட்டு விலங்குகளிலெல்லாம் பாம்பு மிகவும் சூழ்ச்சிமிக்கதாக இருந்தது. அது பெண்ணிடம், “கடவுள் உங்களிடம் தோட்டத்திலுள்ள எல்லா மரங்களிலிருந்தும் உண்ணக்கூடாது என்றது உண்மையா?” என்று கேட்டது. பெண் பாம்பிடம், “தோட்டத்தில் இருக்கும் மரங்களின் பழங்களை நாங்கள் உண்ணலாம். ஆனால் ‘தோட்டத்தின் நடுவில் உள்ள மரத்தின் கனியை மட்டும் நீங்கள் உண்ணக்கூடாது; அதைத் தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள்’ என்று கடவுள் சொன்னார், “ என்றாள்.
பாம்பு பெண்ணிடம், “நீங்கள் சாகவே மாட்டீர்கள்; ஏனெனில் நீங்கள் அதிலிருந்து உண்ணும் நாளில் உங்கள் கண்கள் திறக்கப்படும். நீங்கள் கடவுளைப் போல் நன்மை தீமையை அறிவீர்கள் என்பது கடவுளுக்குத் தெரியும்” என்றது.
அந்த மரம் உண்பதற்குச் சுவையானதாகவும் கண்களுக்குக் களிப்பூட்டுவதாகவும் அறிவு பெறுவதற்கு விரும்பத்தக்கதாகவும் இருந்ததைக் கண்டு, பெண் அதன் பழத்தைப் பறித்து உண்டாள். அதைத் தன்னுடனிருந்த தன் கணவனுக்கும் கொடுத்தாள். அவனும் உண்டான். அப்பொழுது அவர்கள் இருவரின் கண்களும் திறக்கப்பட்டன; அவர்கள் தாங்கள் ஆடையின்றி இருப்பதை அறிந்தனர். ஆகவே, அத்தி இலைகளைத் தைத்துத் தங்களுக்கு ஆடைகளைச் செய்துகொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பிப்ரவரி 22 : பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 3-4a. 10-11. 12,15 (பல்லவி: 1a)
பல்லவி: ஆண்டவரே, இரக்கமாயிரும்; ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி
3
ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது.
4a
உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன். - பல்லவி
10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி
12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
15
என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். - பல்லவி
பிப்ரவரி 22 : இரண்டாம் வாசகம்
பாவம் பெருகிய இடத்தில் அருள் அணைகடந்து பெருக்கெடுத்தது.
திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 12-19
சகோதரர் சகோதரிகளே,
ஒரே ஒரு மனிதன் வழியாய்ப் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது; அந்தப் பாவத்தின் வழியாய்ச் சாவு வந்தது. அதுபோலவே, எல்லா மனிதரும் பாவம் செய்ததால், எல்லா மனிதரையும் சாவு கவ்விக்கொண்டது. திருச்சட்டம் தரப்படுமுன்பும் உலகில் பாவம் இருந்தது; ஆனால், சட்டம் இல்லாதபோது அது பாவமாகக் கருதப்படவில்லை. ஆயினும் ஆதாம் முதல் மோசே வரையில் இருந்தவர்கள் ஆதாமைப்போல் கடவுளின் கட்டளையை மீறிப் பாவம் செய்யவில்லை. எனினும் சாவு அவர்கள்மீதும் ஆட்சி செலுத்திற்று; இந்த ஆதாம் வரவிருந்தவருக்கு முன்னடையாளமாய் இருக்கிறார்.
ஆனால், குற்றத்தின் தன்மை வேறு, அருள் கொடையின் தன்மை வேறு. எவ்வாறெனில், ஒருவர் செய்த குற்றத்தால் பலரும் இறந்தனர். ஆனால் கடவுளின் அருளும் இயேசு கிறிஸ்து என்னும் ஒரே மனிதரின் வழியாய் வரும் அருள்கொடையும் பலருக்கும் மிகுதியாய்க் கிடைத்தது. இந்த அருள்கொடையின் விளைவு வேறு, அந்த ஒரு மனிதர் செய்த பாவத்தின் விளைவு வேறு. எவ்வாறெனில், ஒரு மனிதர் செய்த குற்றத்துக்குத் தீர்ப்பாகக் கிடைத்தது தண்டனை. பலருடைய குற்றங்களுக்கும் தீர்ப்பாகக் கிடைத்ததோ அருள்கொடையாக வந்த விடுதலை.
மேலும் ஒருவர் குற்றத்தாலே, அந்த ஒருவர் வழியாகச் சாவு ஆட்சி செலுத்தினதென்றால், அருள் பெருக்கையும் கடவுளுக்கு ஏற்புடையவராகும் கொடையையும் இயேசு கிறிஸ்து என்னும் ஒருவர் வழியாக அடைந்துகொண்டவர்கள் வாழ்வு பெற்று ஆட்சி செலுத்துவார்கள் என இன்னும் மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?
ஆகவே ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனைத் தீர்ப்பாய் அமைந்ததுபோல், ஒரே ஒருவரின் ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானதுபோல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வசனம்
மத் 4: 4b
மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்.
பிப்ரவரி 22 : நற்செய்தி வாசகம்
இயேசு நாற்பது நாள் நோன்பிருக்கிறார்; சோதிக்கப்படுகிறார்.
✠ மத்தேயு எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 1-11
அக்காலத்தில்
இயேசு அலகையினால் சோதிக்கப்படுவதற்காகப் பாலைநிலத்திற்குத் தூய ஆவியால் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் நாற்பது நாள் இரவும் பகலும் நோன்பிருந்தார். அதன்பின் பசியுற்றார். சோதிக்கிறவன் அவரை அணுகி, “நீர் இறைமகன் என்றால் இந்தக் கற்கள் அப்பமாகும்படிக் கட்டளையிடும்” என்றான். அவர் மறுமொழியாக, “ ‘மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர்’ என மறைநூலில் எழுதியுள்ளதே” என்றார்.
பின்னர் அலகை அவரை எருசலேம் திருநகரத்திற்குக் கூட்டிச் சென்றது. கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, “நீர் இறைமகன் என்றால் கீழே குதியும்; ‘கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளில் உம்மைத் தாங்கிக் கொள்வார்கள்’ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அலகை அவரிடம் சொன்னது. இயேசு அதனிடம், “ ‘உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்’ எனவும் எழுதியுள்ளதே” என்று சொன்னார்.
மறுபடியும் அலகை அவரை மிக உயர்ந்த ஒரு மலைக்குக் கூட்டிச் சென்று உலக அரசுகள் அனைத்தையும், அவற்றின் மேன்மையையும் அவருக்குக் காட்டி, அவரிடம், “நீர் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து என்னை வணங்கினால், இவை அனைத்தையும் உமக்குத் தருவேன்” என்றது. அப்பொழுது இயேசு அதனைப் பார்த்து, “அகன்று போ, சாத்தானே, ‘உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி, அவர் ஒருவருக்கே பணி செய்’ என்றும் மறைநூலில் எழுதியுள்ளது” என்றார்.
பின்னர் அலகை அவரை விட்டு அகன்றது. உடனே வானதூதர் வந்து அவருக்குப் பணிவிடை செய்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
---------------------------------------------------------------------------
கீழ்ப்படிவோம்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்!
தவக்காலத்தின் முதல் ஞாயிறு
(தொநூ 2: 7-9; 3: 1-7; உரோ 5: 12-19; மத் 4: 11)
கீழ்ப்படிவோம்; கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆவோம்!
முதலில் கீழ்ப்படி; அப்புறம் போகலாம்
“பண்ணை நிலத்தைப் பார்த்துக்கொள்” என்று தன் தந்தையால் அனுப்பப்பட்ட இளைஞன் ஒருவன், வேறு வழியில்லாமல் அங்கே சென்றான். அங்கு அவன் யாருக்கும் தெரியாமல், மறைவான ஓர் இடத்தில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தபோது, தற்செயலாக அவனுடைய தந்தை அங்கு வந்தார்.
அவரைப் பார்த்ததும் என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பித் தவித்த அவன் நிலைமையைச் சமாளிப்பதற்காக, “அப்பா! பக்கத்து ஊரில் சர்க்கஸ் போட்டிருக்கின்றார்களாம்! இன்று இரவு நாம் இருவரும் அங்கே போய் வரலாமா?” என்றான். இதற்கு அவனுடைய தந்தை, “சர்க்கஸ் போவதெல்லாம் இருக்கட்டும். முதலில் சிகரெட் பிடிப்பதை நிறுத்து. அதன்பிறகு சர்க்கஸ் போகலாம்” என்றார்.
மிகப்பெரிய மறைப்போதகரான சார்லஸ் ஸ்பெர்ஜன் (Charles Spurgeon) என்பவரின் வாழ்வில் நடந்ததாகச் சொல்லப்படும் நிகழ்வு கீழ்ப்படிந்து நடந்து நடப்பதன் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றது. சார்லஸ் ஸ்பெர்ஜியன் தன் தந்தைக்குக் கீழ்ப்படியாதால், அவரால் சர்க்கஸ் பார்க்கப் போக முடியவில்லை. நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் நடந்தால், அவருக்கு ஏற்புடையவர் ஆகமுடியாது; அவரிடமிருந்து ஆசிகளையும் பெற முடியாது. தவக்காலத்தின் முதல் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளுக்குக் கீழ்ப்படிபவர்களாலேயே அவருக்கு ஏற்புடையவர் ஆக முடியும் என்ற சிந்தனையைத் தருகின்றது. நாம் எப்படிக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது என்பது குறித்துச் சிந்திப்போம்.
கீழ்ப்படியாமையால் வந்த சாவு
ஆஸ்கர் வைல்ட் (Oscar Wilde) என்ற அறிஞர், “அடிப்படையில் மனிதன் யாருக்கும் கீழ்ப்படியாதவன்” என்று குறிப்பிடுவார். இதை எண்பிக்கும் வகையில் இன்றைய வாசகத்தில் ஆதாமும் ஏவாளும் நடந்துகொள்கின்றார்கள்.
மனிதனைத் தம் உருவிலும் சாயலிலும் படைத்த கடவுள், அவனிடம், “தோட்டத்தில் இருக்கும் எந்த மரத்திலிருந்தும் உன் விருப்பம் போல் உண்ணலாம். ஆனால், நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து மட்டும் உண்ணாதே: ஏனெனில், அதிலிருந்து நீ உண்ணும் நாளில் சாகவே சாவாய்” (தொநூ 2: 16, 17) என்கிறார். ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது (திபா 19: 7). அதனால் மனிதன் கடவுளின் ஒழுங்குமுறைப் படி, நன்மை தீமை அறிவதற்கு ஏதுவான மரத்திலிருந்து உண்ணாமல் இருந்திருக்கலாம். அவனோ, பொய்யனாகிய சாத்தானின் வார்த்தைகளை நம்பி, விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டு பாவம் செய்கின்றான்.
மனிதன் கடவுளின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் பாவம் செய்ததால் ஆன்மிக இறப்பு (எபே 2:11) உடல் இறப்பு, நெருப்பு ஏரியில் எறியப்படுதல் என்ற இரண்டாம் இறப்பு ஆகிய மூன்றுவிதமான இறப்புக்கு ஆளாகின்றான். முதல் இறப்பு எனப்படும் ஆன்மிக இறப்பு அவனைக் கடவுளை விட்டு வெகு தொலைவில் கொண்டு சென்றது. இரண்டாவது இறப்பு எனப்படும் உடல் இறப்பு அழியாமைக்கென்று படைக்கப்பட்ட மனிதனை (சாஞா 2:23) அழிவுக்குரியதாக்கியது. மூன்றாவது இறப்பு அவனை நெருப்பு ஏரிக்குள் விழ வைத்து, என்றென்றும் துன்பப்பட வைத்தது. இவையெல்லாம் மனிதன், நம்பிக்கைக்குரியவரான ஆண்டவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல், பொய்யனும், சூழ்ச்சி மிக்கவனுமாகிய சாத்தானின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடந்தாலேயே ஏற்பட்டது.
கீழ்ப்படிதலால் வந்த வாழ்வு
ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் எல்லாரும் பாவிகளாகி, சாவுக்கு உள்ளான போதும், கடவுள் மனிதர்களை அப்படியே புறந்தள்ளிவிடவில்லை. மாறாக, அவர்களை மீட்கத் தம் ஒரே மகனை அனுப்பத் திருவுளமானார். அவர் இறைமகனாக இருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார் (எபி 5:8).
இன்றைய நற்செய்தி வாசகம் இயேசு சாத்தானால் சோதிக்கப்படுவதைப் பற்றிக் கூறுகின்றது. இதில் அவர் சாத்தானுக்குக் கீழ்ப்படியாமல், ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை பற்றி வாசிக்கின்றோம். ஏறக்குறைய முதல் பெற்றோருக்கு வந்த சோதனையைப் போன்றுதான் இயேசுவுக்குச் சோதனை வந்தது. நாற்பது நாள்கள் இரவும் நோன்பிருந்த இயேசு, சாத்தான் சொன்னது போன்று கற்களை அப்பமாக்கி உண்டிருக்கலாம். ஆனால், அவர் தந்தை தனக்குக் கொடுத்த திட்டத்தின்படி பாடுகளின் வழியாகத்தான் இவ்வுலகிற்கு மீட்பு வழங்க விரும்பினாரே ஒழிய, சாத்தானின் வார்த்தையைக் கேட்டு, குறுக்கு வழியில் இவ்வுலகிற்கு மீட்பு வழங்க முன்வர வில்லை.
முதல் பெற்றோர், விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்டால், கடவுளைப் போன்று நன்மை தீமையை அறியலாம் என்று சாத்தனுக்குக் கீழ்ப்படிந்து மரத்தின் கனியை உண்டனர். இயேசுவோ சாத்தானை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினால், உலக அரசுகள் கிடைக்கும் என்ற போதும், அதற்குக் கீழ்ப்படியாமல், அல்லது குறுக்கு வழியில் உலக அரசுகளை அடையாமல், தந்தைக் கீழ்ப்படிந்து அவற்றை அடைகின்றார் (பிலி 2: 10). இவ்வாறு அவர் இன்றைய இரண்டாம் வாசகத்தின் இறுதியில் நாம் வாசிப்பது போல், முதல் பெற்றோர் தங்கள் கீழ்ப்படியாமையால் தண்டனைத் தீர்ப்பை வருவித்துக் கொண்டபோது, இயேசு கிறிஸ்து தன்னுடைய கீழ்ப்படிதலால் வாழ்வளிக்கும் விடுதலைத் தீர்ப்பைப் பெற்றுத் தந்தது மட்டுமல்லாமல், பலரும் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆகக் காரணமானார்.
தூயதோர் உள்ளத்தைக் கேட்போம்
கடவுள் நமக்கு தம் ஒரே மகன் வழியாக வாழ்வளித்திருக்கும்போது, புனித பவுல் சொல்வது போன்று, நாம் மேலுலகு சார்ந்தவற்றையே நாட வேண்டும் (கொலோ 3:1). ஆனால், நமக்குள் இருக்கும் தீவினை நம்மைப் பாவம் செய்யத் தூண்டிக் கொண்டே இருக்கின்றது. அதனால் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51 இல் அதன் ஆசிரியர் தாவீது பாடுவதுபோல், “தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதி தரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும்” என்று நாம் கடவுளிடம் கேட்க வேண்டும்.
இஸ்ரயேலின் மன்னராக இருந்த தாவீது, ஆண்டவருக்கு ஏற்புடையவற்றைச் செய்து, அவரது நெஞ்சத்திற்கு உகந்தவராய் இருந்தார். எப்போது அவர் உரியாவின் மனைவியோடு பாவம் செய்கின்றாரோ, அப்போதே அவர் ஆண்டவரை விட்டு விலகிப் போகிறார். தாவீது செய்த இப்பாவத்தை இறைவாக்கினர் நாத்தான் மூலம் ஆண்டவர் அவரிடம் எடுத்துச் சொன்னபோது, தாவீது தன் பாவத்தை உணர்ந்து மனம் வருந்தி அழுகின்றார். அப்போது பாடப்பட்ட திருப்பாடல்தான் இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 51. இதில் தாவீது பாடியபோல, நாம் ஆண்டவரிடம் தூயதோர் உள்ளத்தைத் தருமாறு கேட்டு, அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்போது, நாம் கடவுளுக்கு ஏற்புடையவர்கள் ஆக முடியும்.
சிந்தனைக்கு:
‘அன்பு ஆணிவேர். கீழ்ப்படிதல் அதன் கனி” என்பார் மேத்யூ ஹென்றி என்ற எழுத்தாளர். நாம் கடவுள்மீது அன்பு கொண்டிருக்கின்றோம் என்பதை அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன்மூலம் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

