#மனோகரா
மனோகராதான் வசனங்களின் உச்சக் கட்டம் என்று நினைக்கிறேன். தீ பறக்கும் வசனங்கள், அதை உணர்ச்சி பொங்க பேசும் சிவாஜி இது இரண்டே போதும்.
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய நாடகம்.
கலைஞரின் மாஸ்டர்பீஸ் இதுதான்.
1954-இல் வந்த படம். ஜூபிடர் தயாரிப்பு . எல்.வி. பிரசாத் இயக்கம். சிவாஜியை தவிர, கண்ணாம்பா, டி.ஆர். ராஜகுமாரி, எஸ்எஸ்ஆர் (மனோகரனின் நண்பன் ராஜப்ரியன்), சதாசிவ ராவ்(மனோகரனின் அப்பா), முஸ்தஃபா (வசந்த சேனையின் முதல் கணவன்), காகா ராதாகிருஷ்ணன் (வசந்த சேனையின் மகன்), கிரிஜா (மனோகரனின் மனைவி), ஜாவர் சீதாராமன் (அமைச்சர்), எஸ்.ஏ. நடராஜன் (சேர மன்னன்) ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இசை எஸ்.வி. வெங்கட்ராமன்.
வசந்த சேனை தன் கணவனுக்கு விஷம் வைத்துவிட்டு மன்னரை மயக்கி தன் பிடிக்குள் வைத்திருக்கிறாள். இதனால் மனம் நொந்த மனோகரனும் அவர் அம்மாவும் விலகி வாழ்கிறார்கள். முதல் கணவன் இறக்கவில்லை, ஏதோ ஆராய்ச்சி செய்து தான் யார் கண்ணிலும் தெரியாமல் இருக்க ஒரு மருந்தை கண்டுபிடிக்கிறான். மனோகரன் நடுவில் பாண்டிய நாட்டை வென்று, பாண்டிய இளவரசியை மணக்கிறார். அவர் ஒரு கட்டத்தில் வ. சேனையை அவமதிக்க, வ. சேனை மன்னரை மனோகரனின் தாய் தவறான உறவு வைத்திருப்பதாக நம்ப வைக்கிறாள். அப்போதுதான் அந்த ராஜ சபை சீன். மனோகரனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மனோகரனின் தாயும் மனைவியும் சிறையில். ஆனாலும் வ. சேனையின் மகனான வசந்தனுக்கு இளவரசு பட்டம் கட்ட மன்னர் மறுக்கிறார். சேர மன்னனுடன் வ. சேனை சதி செய்து மன்னரை சிறையில் அடைக்கிறாள். மனோகரன் தப்பி மாறு வேஷத்தில் அரண்மனைக்கு வருகிறான், மாட்டிக் கொள்கிறான். அவனை கட்டிப் போட்டுவிட்டு, அவன் சின்னக் குழந்தையை கொலை செய்வதற்கு முன் வழக்கம் போல கெக்கே பிக்கே என்று வில்லன் எஸ்.ஏ. நடராஜன் சிரிக்க, கண்ணாம்பா பொறுத்தது போதும் பொங்கி எழு என்று ஆணை இடுகிறாள். மனோகரன் கட்டி இருக்கும் சங்கிலிகளை உடைத்து விட்டு சண்டை போடுகிறார். அவருக்கு அருவமான முதல் கணவனும் உதவுகிறான். வெற்றி! பிறகு அருவமான கணவன் வ. சேனையை தன் குகைக்கு அழைத்துப் போய் துடிக்க துடிக்க கொல்கிறான். பிறகு எல்லாரும் ஒன்று சேர்ந்து, சுபம்!
ஒரு சாகசக் கதை என்ற அளவில் இந்த கதை வெற்றி. இதில் எவ்வளவு தூரம் முதலியாரின் ஒரிஜினல் கற்பனை, எவ்வளவு தூரம் கலைஞர் சேர்த்த மசாலா என்று தெரியவில்லை.
வசனங்களை பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்.
புருஷோத்தமரே! புரட்டுக்காரியின் உருட்டு விழியில் உலகத்தைக் காண்பவரே! மானமொன்றே நல்வாழ்வெனக் கொண்டு வாழ்ந்த மறவேந்தர் பரம்பரையில் மாசாக வந்தவரே! மயிலுக்கும் மந்திக்கும் வித்தியாசம் தெரியாத மதிவாணரே! குளிர் நிலவைக் கொள்ளிக்கட்டையெனக் கூறிய குருடரே! என் தாய் அன்பின் பிறப்பிடம், அற நெறியின் இருப்பிடம், கருணை வடிவம், கற்பின் திருவுருவம், மாசற்ற மாணிக்கம், மாற்றுக் குறையாத தங்கம். அவர்களை அவதூறு கூறிய அங்கங்களை பிளந்தெறிவேன். இந்த துரோகப் பேச்சுக்கும் உம்மைத் தூண்டிவிட்ட துரோகியின் உடலை துண்டாடுவேன். துணிவிருந்தால், தோளில் வலுவிருந்தால், எடுத்துக் கொள்ளும் உமது வாளை. தடுத்துக் கொள்ளும் உமது சாவை. தைரியமில்லாவிட்டால், தளுக்குக்காரியின் குலுக்குச் சிரிப்பிலே நீர் கோழையாகிவிட்டிருந்தால், ஓடி விடும். புறநானூற்றின் பெருமையை மூட வந்த புழுதிக் காற்றே! புறமுதுகு காட்டி ஓடும்! கலிங்கத்துப் பரணியை மறைக்க வந்த காரிருளே! கால் பிடரியில் இடிபட ஓடும்! ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓலமிட்டு ஓடும்! ஓங்காரக் கூச்சலிட்டு ஓடும்! ஏன், அவமானமாக இருக்கிறதா? என் அன்னையை தூஷித்த சின்னஞ்சிறு புழுவே, ஏன் சிலையாக மாறிவிட்டீர்? ஏ ராஜ விக்ரகமே! பழி வாங்கும் பக்தன் பூஜை செய்ய வந்திருக்கிறான். அப்படியே நில்லும்! அசையாமல் நில்லும்! இந்த சித்து வேலைக்காரியின் ரத்தத்தைக் கொண்டு உமக்கு அபிஷேகம் செய்கிறேன். இந்த நாசக்காரியின் நரம்புகளால் உமக்கு மாலை சூட்டுகிறேன். முல்லைச் சிரிப்பென புகழ்வீரே, மோக போதையில்! அந்தப் பல்லை எடுத்து உமக்கு அர்ச்சனை செய்கிறேன்.
சிவாஜியே கண்ணாம்பா என்னை பொறுத்தது போதும் என்ற ஒரே வசனத்தை வைத்துக் கொண்டு என்னை தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்று சொல்வாராம். மனோகரா நாடகத்தில் சிவாஜி கண்ணாம்பா ரோலில் நடித்திருக்கிறாராம்.
டி.ஆர். ராஜகுமாரி கலக்கி விட்டார். அலட்டிக் கொள்ளாமல் அற்புதமாக நடித்திருப்பார். அவர் இன்னும் நிறைய நடித்திருக்கலாம்.
எஸ்.எஸ்.ஆரின் நடிப்பு பலரால் சிலாகிக்கப்பட்டது. நன்றாக நடித்திருந்தார், மன்னராக நடித்த சதாசிவ ராவ், வ. சேனையின் கணவனாக வந்த முஸ்தஃபா, ஆகியோரின் நடிப்பு எனக்கு பிடித்திருந்தது.
இசை ஒன்றும் சுகம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வசந்த விழா, வசந்த திருவிழா என்ற ஒரே பாட்டுதான் கொஞ்சம் மங்கலாக ஞாபகம் இருக்கிறது. வடிவேல் முருகன் “சிங்காரப் பைங்கிளியே பேசு” என்ற பாட்டையும், “சந்தேகம் இல்லே” என்ற பாட்டையும் நினைவூட்டுகிறார். #🎬 சினிமா #💪கெத்து ஸ்டேட்டஸ் #📷நினைவுகள் #😍Old மூவிஸ்


