ரவி மோகன் - ஜெனிலியா நடிப்பில் வெளிவந்த சந்தோஷ் சுப்பிரமணியம் திரைப்படத்தில் ரவி மோகனின் தலையில் ஜெனிலியா முட்டுவது போன்ற காட்சி அனைவரையும் கவர்ந்து இழுப்பதாக இருந்தது. 'நம்ம தலைல முட்டுனவங்க தலையில மறுபடியும் நம்ம முட்டலைன்னா தலையில கொம்பு முளைக்கும், உனக்கு தெரியாதா' என ஜெனிலியா வெந்தியாக பேசும் இந்த காட்சி கலகலப்பை ஏற்படுத்தியது. இந்தக் காட்சியை நிஜமாக்கும் வகையில் ஒரு திருவிழாவே கர்நாடகாவில் நடந்துள்ளது.
அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரையில் மாமியாரும் - மருமகளும் எதிரும் புதிருமாகவே இருந்து வருகின்றனர். மாமியார்களுடன் நாத்தனார்களையும் இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.
கள யதார்த்தம் இப்படி இருக்க கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் இரியூர் தாலுகாவில் உள்ள சிக்கீரண்ணாமாலிகே என்ற கிராமத்தில் ஒரு வினோத திருவிழா நடந்துள்ளது. இந்த திருவிழாவில் விசேஷம் என்னவென்றால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மருமகள்கள், தங்களது மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையுடன் முட்டிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
ஒவ்வொரு வீட்டிலும் மாமியார், நாத்தனார் - மருமகள்களிடையே பணிப்போர், தகராறு, சண்டைகள், போட்டி, பொறாமை என இருந்து வரும் நிலையில் ஒருவருடன் ஒருவர் தலையை முட்டி நேர்த்தி கடன் செலுத்தும் வினோதம், இந்த திருவிழாவில் நடந்துள்ளது. இந்த திருவிழாவை அப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி வருவதாக சொல்லப்படுகிறது.
இந்த கிராமத்தில் உள்ள ஆகோபலா நரசிம்மசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வருடாந்திர திருவிழாவை ஒட்டி இந்த வினோத நேர்த்திக்கடன் செய்யப்படுகிறது. குடும்பத்துடன் இந்த திருவிழாவில் பங்கேற்க வருபவர்கள் மருமகள்கள் தங்களது மாமியார்களை தங்களுடைய தாயாகவும், நாத்தனார் தங்களுடைய சகோதரிகளாகவும் நினைக்க வேண்டும், அதுபோல மருமகள்களை மாமியார்கள் தங்களது மகள் போன்றும் நாத்தனார் தங்களது சகோதரி போன்றும் நடந்து கொள்ள வேண்டும் என்பதுதான் இந்த வினோதத் திருவிழா உணர்த்தும் கருத்தாக உள்ளது.
குடும்பங்கள் செழிக்க வேண்டும், அனைவரும் ஆரோக்கியமாக ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டும் என நரசிம்ம சாமி தேரோட்டத்தின் போது தேர் மீது வாழைப்பழம், வெல்லம் மற்றும் காசுகளை வீசி மருமகள்கள் தங்களது மாமியார் மற்றும் நாத்தனாரின் தலையில் முட்டி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த திருவிழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு தங்களது மாமியார் மற்றும் நாத்தனார்களின் தலையில் முட்டி தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர். இது தொடர்பான வீடியோக்களும், புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
குடும்ப ஒற்றுமையை வலியுறுத்தும் இது போன்ற திருவிழாக்கள் நம்மூரிலும் நடந்தால் நன்றாக இருக்கும் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். #✨பெண்கள் ஃபிட்னஸ் & ஹெல்த் 💪 #📝மகளிர் தின கோட்ஸ்✨ #👩🎓பெண்களின் சக்தி🔥 #gethu girls😎 #🌷மகளிர் தினம் விரைவில்🌟


