#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
வந்தவுடனே அந்நியோன் னியக் கலகமாகும். அந்தக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். அவர்களுக்கு வேண்டிய பாக்கியத்தைக் கொடுப்போம். 998ல்.
.
விளக்கம்
=========
மூன்றாம் தவத்துக்கு வந்தவுடனே, அங்கே மனிதர்களில் ஒருவருக்கொருவர், உள்ளபடியே உள்ள சம்பந்தம் அதாவது ஐக்கியம் பற்றிய குழப்பம் உண்டாகும்.
.
அந்தக் குழப்பத்தில், எல்லாருமே இறைவனின் படைப்பு, அதில் எவ்வித ஏற்றத் தாழ்வும் கூடாது. தீண்டாமை என்ற தீயசெயலை ஒழித்திடல் வேண்டும் என்ற எண்ணம் உடைய முற்போக்குச் சிந்தனையாளர்களுக்கும், அதற்கு மாற்றுக் கருத்துடைய பிற்போக்குச் சிநதனையாளர்களுக்கும் மோதல் உண்டாகி அதனால் ஒருவர்கொருவர் ஆணவ மல வேட்கையால் அழிந்து போவார்கள்.
.
அப்படி அழிந்து போனவர்கள் போக எஞ்சி இருக்கிறவர்கள் எல்லோரும் புண்ணியவான்களாக இருப்பார்கள். அவர்களுக்கெல்லாம் என்னென்ன பாக்கியங்கள் வேண்டுமோ அத்தனை பாக்கியங்களையும் கொடுப்போம். இது எழுதப்பட்டது கொல்லம் ஆண்டு 998ல்.
.
அகிலம்
========
விருத்தம்
==========
பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன் வாழு வோர்க்கு
நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்து வாழ்வார்
தாக்கிய வாச கத்தின் தன்மையை நம்பு வோர்க்கு
வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே
.
விளக்கம்
=========
நல்லொழுக்கமான குண நலன்களோடு வாழுகின்ற புண்ணியவான்களுக்குச் சகல பாக்கியத்தையும் கொடுப்போம். எனவே, அந்தப் பாக்ககியவான்களின் விருப்பங்கள் யாவும், கருணைமிக்க காரியங்களை அடிப்படையாகக் கொண்டே அமைந்திருக்கும். ஆகையால் அவர்கள் இன்னொரு பிறப்புக்கு இடம் வைக்காதவர்களாகவும் அதாவது, இப்பிறப்பில் எவ்வகைக் கடமைக் கடனும் வைக்காதவர்களாய், மன உளைச்சலோ, அதனால் உடல் உபாதையோ இல்லாமல் வாழ்வார்கள்.
.
இந்தத் திருவாசகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்திகளைத் தப்பு இல்லாமல் தெளிவாக உணர்ந்து திடமாக நம்புகின்றவர்கள், வரம் பல பெற்றோர் வாழுமிடமாகிய வைகுண்ட லோகத்திற்கு வந்து மோட்சம் பெற்றுப் பேரின்பப் பெருநிலையை அடைவார்கள்.
.
அகிலம்
========
விருத்தம்
---------------
தினமொரு நேர மெந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம்
கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும்
துணிவுடன் கேட்டோ ருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே
.
விளக்கம்
=========
ஒரு நாளில் ஒரு முறையாவது எமது திருவாசகத்தைக் கேட்டீர்களானால், கதிரவனின் நீண்ட கரங்களின் ஒளிப்பிரவேசத்தினால் பனித்துளிகள் காணாமல் போய்விடுகிறதே அதைப் போல, உங்களைச் சூழ்ந்திருக்கும் பாவங்கள் யாவும், உங்களை விட்டுவிலகி விரைவாக ஓடிப்போய்விடும் என்பது எமது சத்திய வாக்காகும்.
.
கனிவாகச் சொல்கின்ற தெய்வத்தின் மெய்யுரையும், அதைத் தம் திருக்கரத்தால் எழுதுகின்ற மகாவிஷ்ணுவின் கிருபையும் ஒருங்கே அமைந்துள்ள இந்த திருவாசகத்தைத் தெளிவாகக் கேட்போரும், அதற்கு உதவியோரும் பிறவித் துன்பத்திலிருந்து மீண்டு நற்பேறு பெறுவர்.
.
அகிலம்
========
வாசித்தோர் கேட்டோ ருற்றோர் மனதினி லுணர்ந்து கற்றோர்
ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர்
கோசித்தன் பதமே கண்டு கோமலைப் புவியின் வாழ்வும்
தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்
.
விளக்கம்
=========
இந்தத் திருவாசகத்தை வாசித்தவர்களும், வாசிப்பதைக் கேட்டவர்களும், அதனை மனப்பாடம் செய்து அதன் அகப்புறக் கருத்துக்களை ஆராய்ந்து உணர்ந்து கற்றவர்களும், இதனைப் பரம்பொருளின் பங்குவமான அறிவுரை எனக் கண்டுணர்ந்து, அது கூறுகின்ற வழிமுறைகளைக் கடைப்பிடித்து வாழ்பவர்களும் சித்தாதி சித்துக்களுக்கெல்லாம் பேரரசனாகிய இறைவனின் திருவடியைக் காணுகின்ற பேறும், தேவலோக வாழ்க்கையும் சித்திக்கும். அதுவரை பூவுலகில் சகல ஐஸ்வர்யங்ளோடும் சிறப்பாக வாழ்வார்கள்.
.
.
அகிலம்
========
திருமொழி வாசகந் தன்னைத் தேசத்தில் வருமுன் னாக
வருவது திடனா மென்று வழுத்தினோம் தொளாயிருத்து 98ல்
ஒருதிருக் கூட்ட மாக ஓராயிரத் தெட்டா மாண்டில்
வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தி னோமே
.
விளக்கம்
=========
இந்த் தெய்விகச் சொல்லான வசனத்தைப் பூலோகத்திற்கு அனுப்புவதற்ககு முன்பே, நாங்கள் பூலோகத்திற்கு வருவோம் என்பதை உறுதிசெய்து, தொள்ளாயிரத்து தொண்ணூற்று எட்டாம் ஆண்டில் இதை எழுதினோம்.
.
அனேகமாக இருந்து அருள்பாலித்துவரும் தெய்வீக சத்திகள் யாவும் ஒன்றுதிரண்டு ஏகனாக, அதாவது, பரம்பிரம்மமாக வருவோம் என்று இன்று இதில் எழுதியுள்ளபடி ஆயிரத்து எட்டாம் ஆண்டில் வந்து இந்த வசனத்தை அகிலத்திரட்டு அம்மானையிலும் எழுதி வெளிப்படுத்துனோம்.
.
.
அகிலம்
========
வருத்தினோ மம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கிக்
கருத்தினுள் ளகமே கொண்டு கவனித்தோ ரவர்க்கே தக்கும்
உருத்தில்லாக் கேட்போ ரெல்லாம் ஓருரை வெளியே காணார்
சிரித்துரைக் கேட்போ ரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்
.
விளக்கம்
=========
998ல் விண்ணகத்தில் எழுதி, மண்ணகத்திற்கு அனுப்பி வைத்த திருவாசகச் செய்தியை, இந்த அகிலத்திரட்டு அம்மானையில் பெருந்தன்மையோடு புதிய வடிவத்தில் சுருக்கமாக வரச் செய்துள்ளோம். இந்த திருவாசகக் கருத்து, மனதை ஒருமுகப்படுத்தி ஆழமாகவும் அகலமாகவும் கூர்மையாகவும் சிந்திப்பவர்களுக்கு மட்டுமே புலப்படும்.
.
இந்த திருவாசகத்தைப் பிடிப்பு இல்லாமல் ஏனோ தானே என்று படிப்போரும் கேட்போரும், அதிலுள்ள ஒரு வார்த்தைக்குக் கூட உட்பொருளை உணர்ந்துகொள்ள முடியாது. இதை மகிழ்ச்சியோடு படிப்போரும், கேட்போரும் வார்த்தைக்கு வார்த்தை உட்பொருளை உணர்ந்து இது இறைவனால் அருளப்பட்ட அரியதோர் பொக்கிஷம் என்பதை உலக நடப்பின் வாயிலாக் கண்டு களிப்பார்.
.
.
அகிலம்
========
உலகில் மனுக்கள் தமிழாலே உவமை யுரைத்து விட்டாப்போல்
கலக முடனே யென்மொழியைக் கண்டு பழித்து நகைத்தோரை
அலகைத் துளைத்து நரகதிலே ஆணி யறைந்து அவனிதனில்
குலையக் குலைத்துத் தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே
.
விளக்கம்
=========
உலகில் வாழுகின்ற மனிதர்களில் யாரோ ஒருவர், பல ஆகமங்களின் ஆதாரங்களை வைத்து, அலங்காரமாக இந்த அகிலத்திரட்டு அம்மானையை எழுதியிருக்கிறார் என்று நினைத்துக்கொண்டு, அதையே ஓங்கி உரைத்து மற்றோரைக் குழப்படையச் செய்தாலும், தெய்விக உரையான இந்த ஆகமத்தைப் பழித்துக் கூறி ஏளனம் செய்தாலும், அவர்களின் அத்தகைய பேய்குணத்தை முழுமையாக ஊடுருவிப் பார்த்து, தீயசெயல் புரிவோரைச் சென்றடையச் செய்கின்ற நரகத்தில், அசையவே முடியாதபடி ஆணியால் அறைந்து வைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதோடு, அவர்கள் பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே, அவர்களின் ஈரல் பாகத்தை நிம்மதி இல்லாமல் நிலைகுலையச் செய்து அவர்களுக்காக முன் கூட்டியே முடிவுசெய்து வைக்கப்பட்டிருக்கின்ற நரகத்தில் கொண்டு போட்டுவிடும்படி உத்தரவிடுவேன்.
.
தொடரும்... அய்யா உண்டு.


