D Muthu Prakash, Kanchipuram 💐
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 13ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 31.07.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்:
========
தவசிருந்த துவையல்காரர்களைச் சோதித்தல்:
==========================================
பவமா னதுநீக்கும் பச்சைநா ராயணரும்
முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தைப்
பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே
நீச னிடையில் நிறடுசெய் தானதினால்
தோச மவன்பேரில் சுமக்கச்சா பம்புரிந்து
.
விளக்கம்:
சான்றோர்கள் துவையல் தவம் இருந்தபொழுது, பாவங்களை நீக்கக் கூடிய பச்சைமால் நாராயணராகிய வைகுண்டர், முன்பு ஆறு வருடங்கள் தொடர்ந்து மிகழ்ச்சியுடன் செய்து வந்த தவத்தை, கடைசியில் ஒரு வருடம் கவனமாக நடத்தி முடிப்பதற்கு முன்பாக கலியன் இடையூறு செய்தான். அதன் காரணத்தால் உண்டாகிய தோசம் அக்கலியனைப் பற்றும்படி சாபம் இட்டார்.
.
.
அகிலம்:
=========
ஆறு வருசம் அதிற்குறைவு வராமல்
வாறு தவசு வகுத்து முடிக்கவென்று
புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன்
சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று
ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி
அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை
நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித் தெம்பெருமாள்
உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று
மகத்துவ நாதன் மனதில்மிக வுத்தரித்துத்
.
விளக்கம்:
=========
அந்த ஆறு வருடத் தவத்தையும் குறைவுபடாமல் முடிக்க வேண்டும் என்று நினைத்து வைகுண்டரும் தவம் புரிந்து வந்தார். இவ்வாறு தாம் இருந்துவரும் தவம் நிறைவேறும் முன்னால், துவையல்காரர்கள் அலைகள் வீசும் கடற்கரையில் செய்யும் தவத்தைச் சோதித்து பார்க்க வேண்டும் எனவும், அதுவும், இந்தக் கலியுகத்துக்குத் தகுந்த வழியில் அவர்களைச் சோதனை செய்ய வேண்டும் எனவும் வைகுண்டர் எண்ணினார்.
.
.
அகிலம்:
========
தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார்
விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே
ஆதி விடையருள அதுவெல்லா மேசமைந்து
மோதி யொருமித்து உற்றஅந்தத் தெள்ளினங்கள்
வந்து வளைந்துதல்லோ வாய்த்ததவத் தோரருகில்
பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும்
வைத்தக் குடிலுள்ளும் வளைந்ததுகாண் தெள்ளினங்கள்
மெய்த்தபுகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து
.
விளக்கம்:
==========
அதன்படி தெள்ளுப்பூச்சிகளிடம், நீங்கள் தவம்புரியும் சான்றோர்களைக் கதறும்படி சீக்கிரம் ஏதாவது செய்யுங்கள் என்று தெள்ளுப் பூச்சிகளுக்கு அனுமதி கொடுத்து அனுப்பினார். உடனே, தெள்ளுப் பூச்சிகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து, வந்து தவசு இருந்த சான்றோர்களை வளைத்து கொண்டன. அவை தவம் இருந்த சான்றோர்களின் அருகில் காணப்பட்ட எல்லாப் பொந்துகளிலும் அவர்கள் அணியும் துணிகளின் உள்ளும், அவர்கள் வாழ்ந்து வந்த குடிசையின் உள்ளும், முழுவதுமாக வளைந்து சூழ்ந்து கொண்டன. தவம் செய்து வந்த உண்மையுள்ள புகழ் பெற்ற சான்றோர்கள் உடல் மெலிந்து, மனம் மிகச் சடைத்தனர்.
.
.
அகிலம்:
=========
மாடா டுகோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில்
ஏடா விடமல்லோ இதுசெய்யு மாய்மாலம்
இருக்கு மிடத்தில் எண்ணக்கூ டாதபடிப்
பொருக்குப் பொருக்கெனவே பொன்றக் கடிக்குதென்ன
.
விளக்கம்:
=========
நாம் ஆடு, மாடு, கோழி வளர்க்கவில்லையே, இந்த இடத்தில் இப்பூச்சிகள் எவ்வாறு உருவாகின? இவை கடிக்க வேண்டும் என்னும் எண்ணத்தை மாற்றாமல் தொடர்ந்து கடித்து வருகின்ற மாயம் என்ன? நாம் இறைச் சிந்தனையைச் சிந்திக்க முடியாதபடி திடீர் திடீர் எனத் தவம் அழியும்படியாக இவை கடிக்கும் காரணம் என்ன என யோசிக்கலாயினர்.
.
.
அகிலம்:
=========
மூணுநேரந் துவைக்கும் உற்றகலை யானதிலே
கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன
படுக்க இருக்கப் பண்புசற்று மில்லாமல்
முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக் கடிக்க
.
விளக்கம்:
==========
துவைக்காத அழுக்கான பைகளில் பற்றும் தன்மையுள்ள குறுத்தெள்ளு மூன்று நேரமும் துவைத்த சிறந்த ஆடையில் வந்து பற்றக் காரணம் என்ன? சிறிதுநேரம் படுக்கவும், இருக்கவும் கூட முடியாவண்ணடம், கடுமையான கோபத்துடன் இவை மீண்டும் மீண்டும் கடித்து விரட்டுகின்றனவே, என்று எண்ணி வேதனையுற்றனர்.
.
.
அகிலம்:
========
இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென
சதமில்லா மூட்டை தன்னினங்க ளைவருத்தித்
தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டிப்
பவத்துமாய் நீங்கள் பாவிப்பீ ரென்றுசொல்லி
மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே
.
விளக்கம்:
=========
இங்கே, சான்றோர் இவ்வாறிருக்க, அங்கே வைகுண்டர், இன்னும் ஒரு சோதனை பார்ப்போம் என்று எண்ணி, மூட்டைப்பூச்சி இனத்தை வருத்தி மூட்டைப்பூச்சிகளே நீங்கள் சான்றோர்களின் தவத்தைக் குலைத்து அவர்களை அங்கிருந்து விரட்ட செய்ய வேண்டியன எல்லாம் செய்து முடியுங்கள் என்று இதமாகச் சொல்லி அனுப்பினார்.
.
.
அகிலம்:
=========
சேட்டைசெய் வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து
வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை
முந்து பரிந்த மூண்டதெள் ளினங்ளோடு
கூடிக் குலாவிக் கூட்டமிட் டேதிரளாய்த்
தேடிச் சான்றோரைச் செகலதுக்குள் ளேவிரட்ட
.
விளக்கம்:
==========
மூட்டைப்பூச்சிகள் ஒன்று சேர்ந்து அவர்களுக்குத் துன்பம் கொடுத்திடுவோம், என்று கூறித் திரண்டு குவிந்து அவர்களை வந்து வளைத்தன. முன்பு கூறிய தெள்ளு இனங்களோடு இந்த மூட்டைப்பூச்சிகளும் கூடிக் குலாவிக் கூட்டம் கூட்டமாகத் திரண்டு, சான்றோரைத் தேடி சென்று கடித்துக் கடலினுள்ளே விரட்டின.
.
.
அகிலம்:
========
வேணு மெனவே விசும்புகொண் டவ்வினங்கள்
பூணு முடைமை போர்த்துந்துணி யிலிருந்து
நடையிற் கடிக்கும் கிடக்கவிடா தேயரிக்கும்
குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல்கும்ப லாய்க்கிடக்கும்
முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும்
அன்னத்தி லேமிதக்கும் அண்டைக்கல்லி லேவாழும்
.
விளக்கம்:
=========
வேண்டும் என்றே கோபம் கொண்ட தெள்ளுப் பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள் ஆகியவை
போர்வைத் துணிகள் முதலிய அணிகின்ற எல்லாப் பொருள்களிலும், நடக்கும்போதும், இருக்கும்போதும், படுக்கும்போதும் கடித்து அங்கு இருக்கவிடாது தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தன. பாறையில் தேங்கிக் கிடக்கும் குடிக்கும் கடல் நீரில் கூட அவை கும்பல் கும்பலாய் மிதந்தன. வாரி முடிக்கும் முடியில் அவை மூன்று கையளவு வசித்தன. அவை அன்னத்திலும், அண்டைக் கல்லிலும் ஒளிந்து வாழ்ந்தன.
.
.
அகிலம்:
========
முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும்
இடைக்குள் ளிருந்து இடைவிடா தேயரிக்கும்
உடையி லிருந்து ஓயாம லேயரிக்கும்
மேலெல்லா மிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய்க்
காலெல்லாந் தெள்ளு கனமாய் மிகஅரிக்கும்
மாறி யிவரெடுக்க மனதுசற்று மில்லாமல்
ஆறிப் பதறி அசையாமல் தாமிருப்பார்
.
விளக்கம்:
==========
அவை முன்நெற்றி முடியிலிருந்தும், உதிர்ந்து விழுந்தன. இடுப்பு இடையிலிருந்தும், உடைகளிலிருந்தும் இடைவிடாது தொல்லை கொடுத்தன. அவை உடலின் எல்லாப் பாகங்களிலும் மிதந்து கீழ்ப் பாகத்து வழியாக விழுந்து கொண்டிருந்தன. தெள்ளுகள் காலெல்லாம் கடித்து அதிகமாகத் தொல்லை கொடுத்தன. சான்றோர்களோ ஒரு தெள்ளை எடுத்து விட்டு, மீண்டும் அடுத்து தெள்ளை எடுக்க மனமின்றி சோர்ந்து அசையாமல் இருந்து விடுவர்.
.
.
அகிலம்:
========
வாரிக் கரையில் வளர்நண்டு சேகரமாய்
மாரித் துளிபோல் வந்து வளைந்துமிகப்
.
விளக்கம்:
==========
கடற்கரையில் வளர்ந்து வரும் நண்டுகள் எல்லாம் கூட்டமாகச் சேர்ந்து மழைத்துளி போன்று வந்து சான்றோர்களைச் சுற்றி வளைந்து பாத்திரங்களுக்குள்ளும் ஒளித்திருந்து வாழ்ந்து வரும்.
.
.
அகிலம்:
=========
பாண்டத்துக் குள்ளே பதிந்திருந் தேவாழும்
காண்டமாய்க் கண்டு கைநீட்ட லாகாதெனத்
தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென
வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார்
.
விளக்கம்:
==========
அவற்றை சான்றோர்கள் கண்டு, அடித்துத் துன்புறுத்தக் கூடாது என்பதற்காகத் தடவி எடுத்து, உன் வழியில் நீ போய்விடு, என்று கூறி வெளியே விடுவதைப் பார்த்தால் அவற்றைக் காட்டுக்குள் சென்றுவிடாமல் பாதுகாப்பவரைப் போன்று அவர்கள் செயல்படுவர்.
.
.
அகிலம்:
========
இப்படியே தெள்ளு ஈமூட்டை நண்டினங்கள்
அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே
அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில்
பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே
வெகுவாய்ப் பெருத்து மேலிலிடை காணாமல்
தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும்
எங்கே யினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி
சங்கை யுடன்கூடிச் சமுத்திரக் கரையருகில்.
.
விளக்கம்:
==========
இப்படியாகத் தெள்ளுப்பூச்சிகள், மூட்டைப்பூச்சிகள், நண்டுகள் எல்லாம் சான்றோரை அலையச் செய்தன. அது மட்டுமல்லாமல், சான்றோர்களின் உடம்பு முழுவதும் பொல்லாத வங்கும், பெரிய வகைச்சிரங்கும் இடைவெளி இல்லாதவண்ணம் பரந்தன. எனவே, சான்றோர்கள் திகைத்துக் களைத்தனர். பிறகு, எல்லாரும்கூடி, இனி, நாம் எங்கேச் செல்லுவோம் எனச் சொல்லிக் கூட்டமாகக் கவலையுடன் கடற்கரை ஓரத்தில் அமர்ந்து இருந்தனர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.