செ.சாா்லஸ் செபஸ்டின்
#இன்றைய வேத வசனம் #இன்றைய இறைவார்த்தை #இன்றைய வசனம் சிந்தனை*
*நம்பிக்கைக்குரிய பணியாளராய்!*
தாய் நாட்டிற்காக எதிரிகளோடு போராடி, நாட்டிற்கு வெற்றியைப் பெற்றுத் தந்த வீரர்களைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சி இது.
போரில் தலையிலும் கையிலும் காலிலும் அடிபட்டிருந்த ஒவ்வொரு வீரருக்கும் பதக்கம் அணிவித்து, அவர்களுக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டே வந்தார் அந்நாட்டு அரசி. கடைசியாக, ஒரு படைவீரர் போரில் தன் இரு கைகளையும் கால்களையும் இழந்த நிலையில் படுக்கையில் கிடத்தப்பட்டிருப்பதைக் கண்ட அரசிக்கு அழுகையே வந்துவிட்டது.
அவர் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்த படைவீரர் அருகில் சென்று, அவரது நெற்றியில் முத்தமிட்டு, “நீயன்றோ நல்ல, நம்பிக்கைக்குரிய பணியாளர்! இந்த நாட்டிற்காக நீ ஆற்ற சேவைக்கு இந்த நாடு தலைவணங்குகின்றது” என்று அந்தப் படைவீரருக்கு தலைவணங்கினார்.
இப்படியொரு செயலைச் செய்தவர் வேறு யாருமல்ல, பேரரசி விக்டோரியாவே.
ஆம், போரில் தன்னுடைய கைகளையும் கால்களையும் இழக்கும் அளவுக்கு இந்த நிகழ்வில் வரும் படைவீரர் பணிபுரிந்ததாலேயே பேரரசி விக்டோரியா அவரை, ‘நம்பிக்கைக்குரிய பணியாளர்’ என்று வியந்து பாராட்டினார். இன்றைய இறைவார்த்தை நாம் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாய் விளங்க வேண்டும் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
‘யாருடைய வாயிலும் விழக்கூடாது’ என்று சொல்வர். யாருடைய வாயில் விழக்கூடாது என்றால் யாருடைய குறைசொல்லும் ஆளாகக்கூடாது என்பதே பொருள். இயேசுவின் இரண்டாம் வருகையைப் பற்றிக் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பேசும் பவுல், குறை சொல்லுக்கு ஆளாகதிருக்கவேண்டும் என்கின்றார்.
குறை சொல்லுக்கு ஆளாகதிருக்க வேண்டும் என்றால், நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு நமக்குத் தெளிவுபடுத்துகின்றார். தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை விழியாய் இருந்து செய்யும் வீட்டுப் பொறுப்பாளர் நம்பிக்கைக்குரிய பணியாளர் இருப்பார்; அவர் தன்னுடைய பதவியில் மேலும் உயர்த்தப்படுவார் என்று சொல்லும் இயேசு, விழிப்பாய் இல்லாமல், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளைச் சரிவரச் செய்யாத வீட்டுப் பொறுப்பாளர் அதற்குரிய தண்டனையைப் பெறுவார் என்கிறார்.
இன்றைக்குப் பலர் தங்களுடைய பொறுப்புகளில் உண்மையில்லாமலும் நேர்மையில்லாமலும் இருப்பதைக் காண முடிகின்றது. ஒருவர் குறை சொல்லுக்கு ஆளாமல் இருக்க வேண்டும் என்றால், அவர் கடவுள் தன்னிடம் ஒப்படைத்திருக்கும் பொறுப்புகளுக்கு நம்பிக்கைகுரியவாய் இருக்க வேண்டும். அது மிகவும் முக்கியம். இதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வு நிச்சயம்.
*சிந்தனைக்கு:*
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்கின்ற ஒருவர், வேறு எதற்கும் யாருக்கும் அஞ்சிடத் தேவையில்லை.
தன்னுடைய கடமையைச் செய்யத் தவறிய ஒருவர் உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்
உண்மை ஒருவரை உயர்த்தும்.
*இறைவாக்கு;*
‘பொறுப்பாளர்கள் நம்பிக்கைக்குரியவர்களாய்க் காணப்படவேண்டும்’ (1 கொரி 4:2) என்பார் புனித பவுல். எனவே, நாம் ஆண்டவர் எப்படி நம்பிக்குரியவராய் இருக்கின்றாரோ, அப்படி நாமும் நம்பிக்கையவராய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.*