செ.சாா்லஸ் செபஸ்டின்
சிந்தனை*
*“புதிய இதயத்தை அருள்வேன்”*
அந்தப் பெண்மணிக்கு நடுத்தர வயது இருக்கும். ஒருநாள் நாள் இரவு அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், அவருடைய குடும்பத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். மருத்துவமனையில் அவருக்கு உடனே சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது அந்தப் பெண்மணி கடவுளிடம், “கடவுளே எனக்கு ஏன் இந்த நிலைமை?” என்று கண்ணீர் விட்டு அழுதார். கடவுள் அவருடைய கண்ணீரைக் கண்டு மனமிரங்கி, “மகளே! நீ இறக்கமாட்டாய். இன்னும் 42 ஆண்டுகள், 8 மாதங்கள், 8 நாள்கள் வாழ்வாய்” என்று சொல்லிவிட்டு மறைந்தார். இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த அந்தப் பெண்மணி, தனக்குச் சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரிடம், கடவுள் தனக்குக் காட்சி தந்ததைச் சொல்லிவிட்டு, தனக்கு முகமாற்று அறுவைச் சிகிச்சை அளிக்க சொன்னார். மருத்துவரும் அவர் சொன்னது போன்றே அவருக்கு முகமாற்று அறுவைச் சிகிச்சை செய்தார்.
சிகிச்சை முடிந்ததும், அவர் யாராலும் அடையாளம் காண முடியாத அளவுக்கு மிகவும் அழகிய தோற்றத்தோடு தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். வரும்வழியில் ஒரு பெரிய வண்டி அவர்மீது மோத அவர் அந்த இடத்திலேயே இறந்துபோனார். அவர் இறந்ததும் கடவுளுக்கு முன் சென்றார். கடவுளிடம் அவர், “கடவுளே நான் இன்னும் 42 ஆண்டுகள், 8 மாதங்கள், 8 நாள்கள் வாழப் போவதாகச் சொன்னீரே! இப்படி உடனே என்னுடைய உயிரை எடுத்துக்கொண்டு வீட்டீரே!” என்று சற்று சினத்துடனே கேட்டார். அதற்குக் கடவுள் அவரிடம், “உன்னை என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை; அதனால்தான் இப்படி நடந்துவிட்டது” என்று பொறுமையாகச் சொன்னார்.
இன்றைக்குப் பலர் தங்கள் முகத்தைப் பொலிவாய் வைத்துக் கொள்ளும் அளவுக்கு இதயத்தைப் பொலிவாய், மாசற்றதாய் வைக்க முயல்வதில்லை என்பதை இந்தக் கதை வேடிக்கையோடு பதிவு செய்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுள் புதிய இதயத்தை அருளுவதாகக் கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
*திருவிவிலியப் பின்னணி:*
கடவுளுடைய கட்டளையைக் கடைப்பிடியாமல் இஸ்ரயேல் மக்கள் வேற்றினத்தார் முன்பாக அவரது பெயரைத் தீட்டுப் படுத்தினர். இந்நிலையில் கடவுள் தன்னுடைய பெயரைப் புனிதப்படுத்தப் போவதாகவும், இஸ்ரயேல் மக்களை அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அழைத்து வரப் போவதாகவும் வாக்குறுதி தருகின்றார்.
இஸ்ரயேல் மக்களிடம் கல்லான இதயம் இருந்ததால்தான் அவர்கள் தங்கள் விருப்பப்படி நடந்தார்கள். இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய திருமண விருந்து உவமையில், முதலில் அழைப்புப் பெற்றவர்கள் யூதர்கள்தான். அவர்கள் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்துத் தங்களுடைய விருப்பம் போல நடந்தார்கள். இப்படிக் கல்லான இதயம் கொண்டு, தங்கள் விருப்பம் போல் யூதர்கள் வாழ்ந்ததாள், கடவுள் அவர்களுக்குப் புதிய இதயத்தை அருள்வதாக வாக்குறுதி அளிக்கின்றார். கடவுள் அவர்களுக்குப் புதிய இதயத்தை அருள்வதன் மூலம், அவர்கள் அவரது நியமங்களைக் கடைப்பிடிப்பார்கள் என்றும், அவரது நீதிநெறியைக் கவனமுடன் செயல்படுத்துவார்கள் என்றும் கூறுகின்றார் கடவுள்.
கடவுள் நாம் செய்த குற்றங்களை மன்னித்து, நமக்குப் புதிய இதயத்தைத் தரத் தயாராய் இருக்கின்றார். எனில், அந்த இதயத்தில் அவருக்கு இடம் தந்து, அவரது கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்வதே சிறந்தது. இதை நாம் உணர்ந்திருக்கின்றோமா? சிந்திப்போம்.
*சிந்தனைக்கு:*
இதயத்தில் இறைவனுக்கு இடமளித்தால் இருளில் சக்திகள் நம்மை அணுகாது.
எல்லாருக்கும் அதே இருபத்து நான்கு மணிநேரம். அதில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்பதைப் பொறுத்தே நமது உயர்வும் தாழ்வும் உள்ளது.
கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் கொடுக்கப்படுகின்றது. அதற்குச் செவிசாய்ப்போர் சிலர் மட்டுமே.
*இறைவாக்கு:*
‘நீங்கள் உங்கள் உடைகளைக் கிழித்துக் கொள்ள வேண்டாம், இதயத்தைக் கிழித்துக் கொண்டு உங்கள் கடவுளாகிய ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்’ (யோவா 2:13) என்பார் இறைவாக்கினர் யோவால். எனவே, நாம் நமது இதயத்தைக் கிழித்துக் கொண்டு, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
*- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.* #இன்றைய வேத வசனம் #இன்றைய வசனம் #இன்றைய இறைவார்த்தை