கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
.
விளக்கம்
==========
தர்மத்திற்கு எதிரான அதர்மச் செயல்புரியும் தீயவர்களை எல்லாம் எதிர்த்துப் போர்புரிந்து, உலகெல்லாம் அவ்வப்போது நீதியை நிலைபெறச்செய்யக் கூடிய காரணச் சரீரதாரியாகிய மகாவிஷ்ணுவின் உபாயமாய திருமேனித் தோற்றமுடையவராய் திருச்சம்பதிக் கடலினுள்ளிருந்து எழுந்தருளிய ஆதிப் பரப்பிரம்ம்மாகிய அய்யா வைகுண்டப் பரம்பொருள் மண்ணுலகில் மணவைபதித் திருவிடத்தைத் தம் தவத்திருத்தலமாகத் தேர்ந்தெடுத்துத் தவம்புரிந்து நிறைவான மனோபாவமுடைய மேன்மக்களையெல்லாம் தாமிருக்கும் திருத்தலத்திற்கு வருவித்து, அந்த அன்பு மக்களுக்கு எல்லாம் உபாகாரியாகி நானூற்று நாற்பத்தி எட்டு விதமான நோய்களுக்கும் தண்ணீரையே தர்ம மருந்தாகக் கொடுத்து, சுகப்படுத்திய நற்செய்திகளையும் அந்த அளப்பரிய தர்ம கைங்கரியங்களையெல்லாம் கண்டு, சகிக்க முடியாமல் கெம்பிய கெடுமதி கொண்ட கலியின் வயது முடிவடையும் காலம் அதுவாகையால் அக்கலி மரணமடையப் போகும் வாய்ப்பினையும், இவ்வரிகளில் அகிலம் குறிக்கிறது.
.
.
அகிலம்
========
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி
.
விளக்கம்
==========
பிரபஞ்ச உற்பத்தியின் போது கெடுமதியாளனாகத் தோன்றிய குறோணி என்னும் கொடியவனின் உயிரை ஆறு துண்டுகளாக வெட்டி, அவனை பத்மாசூரன், சிங்கமுகா சூரனாகப் பிறவி செய்து, இந்தச் சூரர்களுடன் பிறந்த தாரகாசூரனையும் சேர்த்து மூன்று அசுரர்களையும் அழித்து. அதன்பிறகு, அக்குறோணியை இரணியனாகப் படைத்து அவனையும் இருகூறாகப் பிளந்து கொன்று, இவ்வரக்கர்களுக்குத் துணையாக இருந்து பத்துசைனியம் படைகளையும் வெற்றிகண்டு, அதே யுகத்தில் இருந்த மூர்க்கர்களையெல்லாம் மறுத்துரையாட முடியாத நிலைக்குள்ளாக்கி, துவாபரயுகத்தில் ஐம்பத்தி ஆறு தேசத்து அரசர்களும் சிரம் தாழ்த்தி வணங்கும் அளவில் கொடுமுடி புரிந்த துரியோதனன் முதலான அந்த யுகத்தில் அநியாயம் செய்த அனைவரையும் அழித்து எந்த யுகத்தில் வாழ்ந்தோரும் காணமுடியாத வைகுண்டலோகத்திற்கு தம் உபாயமாய உடலோடு சென்றதையும் கூறுகிறது.
.
.
அகிலம்
========
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில்
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து
.
விளக்கம்
==========
பொல்லாங்கு செய்வதில் பிரியன், உண்மையான நியமங்களை உணருகின்ற உபாயமில்லாத மகாபாதகன், கற்றுணரும் குணமில்லாக் குறைமனத்தோனாகிய நீசனானவன், இந்தக் கபடமான கலியுகத்தில் வம்பான பல அட்டுழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதினால், கலிக் கொடுமையால் அல்லலுறும் அபலை மக்களுக்காக இறைவன் இரக்கமுற்று, முருகப்பெருமான் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்க் கடலைத் தன் திருக்கரங்களுக்குக் சொந்தக்கார்ராகிய மகாவிஷ்ணுவின் காரணத் திருமேனி உருவெடுத்து, மேலேழு லோகங்களும் எந்நாளும் இன்புறும் வகையில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன், பார்வதி லட்சுமி, சரஸ்வதி மற்றும் பூமாதேவி ஆகிய அனைத்துத் தெய்வாம்சங்களையும் தன்னகமாக்கிக் கொண்டு திரேதா யுகத்தில் இராவணனை வதை செய்வதற்காக, மற்றொருவரையும் உவமை சொல்லுதற்கில்லாத புகழுக்குரியமன்ன்ன் தசரதரக்கு மகானாகப் பிறக்க மகாவிஷ்ணு மனித உடல் கொண்டது போல், இந்தக் கலியுகத்தில் மாயாதி சூட்சனாகிய ஆதிப் பரப்பிரம்மன் தமக்கே உரித்தான மேன்மை பொருந்திய தவப்பெருமைகளோடு பிறந்து வருகிறேனென்று இப்பெரும்புவிக்கு மனிதனைப் போல் வந்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}