கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.12.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட
தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை
மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும்
வாகான மன்னன் வாய்த்த நிருபனுட
மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு
மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே
என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள்
நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள்
தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள்
மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள்
பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே
உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே
அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம்
செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு
கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான்
.
விளக்கம்
==========
நிருபதிராஜனிடம் ஒப்புதல் பெற்ற நாரத மாமுனிவர், அங்கிருந்து புறப்பட்டு புட்டாபுரத்திற்கு வந்து, பத்திர மாகாளியின் பாதம் பணிந்து போற்றி, அம்மா ! உன்னுடைய மக்கள் ஏழுபேருக்கும், மாண்புமிகு மன்னன் நிருபதியின் பெண்மக்கள் ஏழுபேரையும் பேசி முடித்துள்ளேன் தாயே என்றார்.
.
அதைக் கேட்ட பத்திர மாகாளியோ, நாரதமாமுனிவரைப் பார்த்து, நல்லதை நல்லபடியே செய்கின்ற நாரதமாமுனியே ! நீ இப்போது நன்றே செய்துள்ளாய் என்றாலும், நான் வளர்த்துக் கொண்டிருக்கும் என் பிள்ளைகள் ஏழுபேரும் தெய்வப் பிறவியாயிற்றே ! சென்ற திசையெல்லாம் வெல்லுகின்ற சக்தி பெற்ற அந்த சான்றோர்களுக்காக நீ பேசி வந்துள்ள அந்தப் பெண்களின் பிறப்பின் ரகசியம் என்ன? என் மக்களோடு சேர்த்துவைக்க பெண்களின் பூர்வீகம் எத்தகையது என்று நாரதமாமுனிவரிடம் ஊடுருவி வினவினாள்...
.
பத்திர மாகாளியின் அந்தப் பரிவான வினாவிற்குப் பதிலுரைக்க எண்ணமுற்ற நாரதமாமுனிவர், சிவபெருமானின் உருத்திர அம்சமாகிய பத்திரமாகாளியின் பாதங்களைப் பணிந்து, தாயே ! அந்தப் பெண்மணிகள் ஏழுபேரின் முற்பிறப்பையெல்லாம் இப்போதே செப்புகிறேன் அம்மா என்று நிருபதிராஜனின் பெண்மக்களின் பிறப்பின் பெருமையைப் பத்திர மாகாளியிடம் பக்திப் பூர்வமாக எடுத்துரைக்கிறார்.
.
அகிலம்
========
நிருபதிராஜனின் மகள்களின் பூர்வீகப் பெருமை
================================================
நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில்
தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த
நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும்
வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி
மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப்
பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக்
கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம்
ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள்
நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே
பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி
பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப்
பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய்
ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே
காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க
மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது
ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி
தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே
.
விளக்கம்
==========
அம்மா ! இப்போது நிருபதிராஜனின் மகள்களாக பிறந்திருக்கும் அந்த மங்கையர்கள் ஏழுபேரும், முன்பொரு காலத்தில் தெய்வலோகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே தெய்வேந்திரனுடைய உத்திரவிற்கிணங்க, பணிவிடை புரிந்த பாவையர்கள். இந்த மாமடவார் ஏழுபேரும் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மலர் பறித்து, தெய்வேந்திரனுக்கு மலர் தூவி மனமார பூசை புனக்காரம் செய்து வந்தனர். இரவிலோ தெய்வலோகத்து அரசனாகிய அந்த தெய்வேந்திரன் நித்திரை புரிவதற்காக நாட்டியமாடும் இந்த நங்கையர்கள், சிவலோகம், வைகுண்டலோகம், சத்தியலோகம், தெய்வலோகம் ஆகிய நான்கு லோகத்தவர்களும் பாராட்டும்படியாக பணிபுரிந்து வந்தார்கள்.
.
அப்போது இவர்கள் ஏழுபேரும் பூலோகத்தில் மனித குலத்தோரின் வாழ்க்கை முறைகளை நினைத்துப் பார்க்க நேர்ந்தது. நாமும் பூலோகத்தில் பிறந்தால் அங்குள்ள ஆண்களைத் திருமணம் செய்து, பூலோகவாசிகளாகப் பெருமையோடு வாழலாமே என்ற எண்ணம் அவர்களின் அடி மனத்தை வருடியது.
.
எனவே அவர்கள் ஏழுபேரும் தம்முடைய அன்றாடக் கடமைகளைச் செய்யாமல் தனக்கு காய்ச்சலும் குளிருமாக இருக்கிறது என்று பொய்க் காரணம் புகன்று பணி முடக்கம் செய்து விட்டார்கள். அன்றாடம் ஆர்வத்தோடு தம் பணிவிடைகளைப் பங்கமின்றி செய்துவந்த நங்கையர்களைக் காணாமையின் காரணத்தை அறிவதற்காகத் தெய்வேந்திரன், பிரம்மதேவனிடம் சென்று இந்த ஏழு பணிப்பெண்களுக்கும் இந்நிலை ஏற்பட என்ன காரணம் என்று வினவினார்.
.
.
அகிலம்
========
வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது
சூதான மான தோகை யேழுபேரும்
பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு
காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது
வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க
தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும்
அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை
இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி
சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து
நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ
உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று
திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு
.
விளக்கம்
==========
தெய்வேந்திரனின் இந்த கேள்விக்கு பதிலளித்த பிரம்ம தேவனோ, தெய்வேந்திரனைப் பார்த்து, தெய்வேந்திரா ! இந்த ஏழு பெண்மளிகளும் பூலோகத்தில் வாழும் ஆடவர்களோடு கூடி வாழ இச்சை கொண்டுள்ளனர். ஆகவேதான், உடல் நலம் குன்னியவர்கள் போல் பாவனை செய்கிறார்கள் என்ற விவரத்தை விளக்கினார்.
.
பிரம்மதேவன் மூலம் உண்மையை அறிந்த தெய்வேந்திரன், அந்தப் பெண்மணிகள் பூலோகவாசிகளாகவே பிறப்பித்து விடுங்கள் என்றார். அதனம்படி அவர்கள் ஏழுபேரையும் பிரம்மதேவன் நிருபதிராஜனுக்குப் பிள்ளைகளாகப் பிறப்பித்தார் என்று பத்திர மாகாளியிடம், நாரதமாமுனிவர் எடுத்துரைத்தார்.
.
நிருபதிராஜனின் பெண் மக்களின் பூர்வீக வாழ்க்கையைப் பற்றி நாரதமாமுனிவர் சொன்னதுமே பத்திரமாகாளியின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியது. உடனே நாரத மாமுனிவரிடம், மாமுனியே இது மிக நல்ல செய்தியாகவே உள்ளது. எனவே நல்ல முகூர்த்தம் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை உடனே செய் என்றாள். அன்னை பத்திரமாகாளியின் ஆணைப்படியே திருமணத் தேதியை நிச்சயித்து நிருபதி ராஜனுக்குச் சொல்ல நாரதர் ஆள் அனுப்பினார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}


