#தீபாவளி #பத்தி #தெரிந்து கொள்வோம் என்றால் பலகாரம் சாப்பிட வேண்டும், பட்டாசு வெடிக்க வேண்டும். இத்தோடு நம் கடமை முடிந்து விட்டது என்று தான் இன்றைய நிலைமை இருக்கிறது.
*நாளை தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பது மிக மிக முக்கியமான கடமை.* இதை கங்கா ஸ்நானம் என்பர்.
காசியில் இருக்கும் கங்கை நதி இந்த நாளில் அனைத்து நீர் நிலைகளிலும் நிறைந்து இருப்பாள். நம் வீட்டு வெந்நீர் பானைக்கு கூட அவள் வந்து விடுவாள்.
தன்மகன் என்று அறியாமல் நரகாசுரனை கொன்றுவிட்ட சத்தியபாமா, பூமாதேவியின் அவதாரம் ஆவாள்.
பொறுமையின் சின்னம் அவள். விஷ்ணுவிடம் சென்று, "ஐயனே! என் மகன் தவறு செய்து விட்டான். அதற்காக அவன் யார் என்றே அறியாமல் அவனை கொன்று விட்டேன். இருப்பினும் மக்கள் அவனது மரணத்தை கொண்டாடுவதை பார்த்தால், அவன் செய்த தவறுகளின் அளவு எனக்கு புரிகிறது.
இப்போது குளிர்காலம். இந்த மக்கள் நாளை கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். குளிரில் அவர்கள் நடுங்கிப் போவார்கள். எனவே அவர்கள் வெந்நீரில் குளிக்க அனுமதி அளியுங்கள்" என கேட்டாளாம்.
அவளது தயாள குணத்தை அறிந்து நெகிழ்ந்து போன விஷ்ணு, அனைத்து மக்களும் சுடுநீரில் குளிக்க அனுமதி அளித்தார்.
சுடுநீரில் குளிப்பதையும், ஏனோ தானோ என்று செய்யக்கூடாது. மண்பானை அல்லது செம்பு பானையில் வெந்நீர் வைப்பது சிறப்பு வாய்ந்தது. எந்த பானையில் வைத்தாலும் பாத்திரத்தை சுத்தமாக தேய்த்து இருக்க வேண்டும்.
பானை மீது மாக்கோலம் போட்டிருக்க வேண்டும். சமையலறை மற்றும் குளிக்கும் இடம் ஆகியவற்றை முன்கூட்டியே சுத்தப்படுத்தி இருக்க வேண்டும். ஒருவர் குளித்து முடித்து மற்றொருவர் குளிக்கச் செல்லும் முன் மீண்டும் குளியலறையை சுத்தப்படுத்த வேண்டும்.
நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதால் நமது வீட்டுக்கு லட்சுமி தாயார் வருவாள் என்பது ஐதீகம்? அவள் சுத்தத்தை மிகவும் விரும்புவாள். எனவே சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
குளிக்கும்போது காசி விஸ்வநாதரையும் கங்காதேவியையும் மனதில் நினைத்தபடியே பக்தி உணர்வுடன் நீராட வேண்டும்.
இது ஒன்றும் கடினமான செயல் அல்ல. மனம் இருந்தால் இது போன்ற சடங்குகள் மீண்டும் நமது இல்லங்களில் துளிர் விட இந்த ஆண்டே விதை விதைக்கலாம்.