#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
அதன்மேல் மகனே யானுனக்குச் சொல்வதுகேள்
இதின்மே லுனக்கு ஏகவியா ழம்வரும்
சந்தோச மாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு
எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே
அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே
.
விளக்கம்
==========
இவற்றுக்கெல்லாம் மேலாக இன்னும் உனக்கு ஓர் உபதேசம் கூறுகிறேன். கேட்பாயாக. இங்கிருந்து நீ போன பிறகு நல்ல காலம் உனக்கு வரும். உன்னைச் சார்ந்திருக்கும் அன்பர்களுக்கும் சந்தோசமான காலம் வரும். காண்பாயாக. என் துயரங்கள் எல்லாம் இன்னும் சிறிது காலத்தில் உன் மூலம் நீங்கப்போகிறது. அதுவரையும் நீ எல்லாரிடமும் அன்பாக இருப்பாயாக.
.
.
அகிலம்
========
எதுவந் தாகிடினும் எண்ணம்வையா தேமகனே
சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன்
.
விளக்கம்
==========
தீமை வந்தாலும் சரி, அந்தத் தீயதில் உன் சிந்தனையைச் செலுத்தாதே. நான் சீக்கிரமாக இவற்றை ஒவ்வொன்றாய் உண்டாக்குவேன்.
.
.
அகிலம்
========
இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ
வேண்டா மிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ
ஆண்டார் மகனே அதிகத் திருமகனே
நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம்
செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ
.
விளக்கம்
==========
மகனே மக்களைத் தொல்லைப்படுத்திப் பூஜை கேட்பதாகக் கூறப்படும் தெய்வங்கள் இவ்வுலகில் இல்லை என்று கூறிவிடு. அத்தகைய தெய்வங்கள் இவ்வுலகுக்குத் தேவை இல்லை என்றும் மக்களிடம் கூறி விடு. செல்ல மகனே, நான் கூறி உபதேசம் எல்லாம் உன் மனதில் பதிந்து உள்ளனவா?
.
.
அகிலம்
========
போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே
சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே
முவ்விஞ்சை வைத்தேன் உலகமறி யாதவிஞ்சை
இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச் சொல்லாதே
பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே
கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே
.
விளக்கம்
==========
கண்ணே, திருமகனே நான் கூறியுள்ள உபதேசங்களில் உலக மக்கள் எளிதில் அறிய முடியாத மூன்று இரகசிய உபதேசங்களை உனக்குத் தந்துள்ளேன். அவற்றைத் தெளிவாக இனம் பிரித்து கூறினாலும் இந்தக் கடைசி உபதேசத்தை மட்டும் தனியாகப் பிரித்து விளக்கிச் சொல்லிவிடாதே. இதன் உன்மையை அனுபவம் மூலம் அடைந்தவர்களும் உண்மை அறிவோடு கற்றவர்களும் அறிந்து கொள்வர்.
.
.
அகிலம்
========
கண்ணே மகனே திருமகனே கமலப் பூமா கரிமகனே
எண்ணே யெழுத்தே என்மகனே இறையோர் தொழவே வருமகனே
ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே
தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே
.
விளக்கம்
==========
திருமால் வைகுண்டரை நோக்கி, கண்ணே, என் மகனே, தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் இலட்சுமிதேவியின் கரிய மகனே, எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் மூலமாய் இருப்பவனே, இறையோரும் தொழும்படியாக வருகின்ற மகனே, கலியுகத்தில் என் ஏகப்புதல்வனே, உயர்வான மகனே, எல்லாமுடைய மகனே, கண்மணியே, குளிர்ச்சி பொருந்திய தவத்தினால் வந்த மகனே, சாகாது நிலைத்திருக்கும் கடலில் பெற்ற மகனே.
.
.
அகிலம்
========
மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே
தவமே யுனதுள் வைத்தவிஞ்சை தானே போது மோமகனே
எகமேழ் மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென
உகமே ழளந்தோ ருரைத்திடவே உயர்ந்த மறையோர் வாழ்த்தினரே
.
விளக்கம்
==========
தவப்பொருளே, மரகதமே, மாதவம் புரிந்து சகஸ்ரார மலரை அடைந்தவனே, உன் மனதுக்கு ஏற்கும்படி சொல்லிய உபதேசங்கள் போதுமானதாக இருக்கிறதா? இல்லையெனில் இன்னும் தேவை உண்டா? இவ்வுலகு மகிழும்படி இங்கு வந்து தோன்றியவனே, என்னுடைய மகனே, நீ நல்ல முறையில் வாழ்ந்து வளர்ந்து வருவாயாக என்றுரைத்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


