ShareChat
click to see wallet page
search
#செய்திகள் #தற்போது செய்தி 🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விருதுநகர், மே.17. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்டத்தின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் திட்டச் செயல்பாடுகள் குறித்த அனைத்துத் துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாண்புமிகு அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா தலைமையில், மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என். ஸ்ரீநாதா, ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சிக்குத் துறை அலுவலர்கள் அனைவரும் ஒரு ஒருங்கிணைந்த வழிகாட்டியாகத் திகழ வேண்டும். கல்வித் துறையில் விருதுநகர் மாவட்டம் எப்பொழுதும் முதன்மை மாவட்டமாகத் திகழ்வதை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வரும் “உயிர்” மற்றும் “திசை” ஆகிய திட்டங்களின் செயல்பாடுகள் பாராட்டுக்குரியவை. அதேபோல், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10 மாணவர்களுக்கு ஒரு பொறுப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு, அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் சிறப்பு நடவடிக்கைகள் தொடர வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு முன்னேற விழையும் மாவட்டங்களின் (Aspirational Districts) பட்டியலில் நமது விருதுநகர் மாவட்டம், தற்போது மாவட்ட நிர்வாகத்தின் தொடர் முயற்சியால் பல்வேறு குறியீடுகளில் சிறந்த முன்னிலையை எட்டியுள்ளது. இதே உத்வேகத்துடன் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகளுக்குத் துறை அலுவலர்கள் முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தினை முழுமையாகச் செயல்படுத்தத் தேவையான உள்கட்டமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். நமது மாவட்ட இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், நவீன விளையாட்டு அரங்கம் அமைப்பதற்குத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடுகளைச் செய்து, அவர்களின் நீண்ட நாள் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், பொது சுகாதாரம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு ஆகியவற்றுக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் உள்ளாட்சி மற்றும் சுகாதாரத் துறையினர் தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா. ஆனந்தி, சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(தேசிய நெடுஞ்சாலை நில எடுப்பு) திரு.ம.ராஜசேகரன், மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் - _9__LD _9__LD - ShareChat