கண்ணதாசனின் #பாவமன்னிப்பு!
‘பாவமன்னிப்பு’, தமிழ் திரையிசையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம். ‘பாவமன்னிப்பு’, ‘பாசமலர்’, ‘பாலும் பழமும்’ என்று 1961ல் அடுத்தடுத்து வந்த படங்களில் அமைந்த பாடல்கள், ஒரு புதிய மெல்லிசை அலையை மட்டுமல்ல, ஒரு கண்ணதாசன் அலையையும் ஏற்படுத்தின.
ஐம்பதுகளில் வந்த பெரும்பாலான படங்களில் ஒவ்வொரு படத்திலும் இரண்டு, மூன்று பாடலாசிரியர்களாவது பாடல்கள் எழுதுவார்கள். இதற்கு விதிவிலக்குகள் இருக்கத்தான் செய்தன: ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’ படத்தில் அ.மருதகாசி அனைத்துப் பாடல்களையும் எழுதினார்.
‘கல்யாண பரிசு’ படத்தில் எல்லா பாடல்களையும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதினார். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தின் பாடல்களை எல்லாம் கு.மா. பாலசுப்ரமணியம் எழுதினார்.
ஆனால், கண்ணதாசனைப் பொறுத்தவரை, ஐம்பதுகளில் அவரே ‘மாலையிட்ட மங்கை’, ‘சிவகங்கை சீமை’ என்று படங்கள் தயாரித்தபோதுதான், அவற்றின் அனைத்துப் பாடல்களையும் எழுதமுடிந்தது!
அவரை பாடல் ஆசிரியராக மதித்தவர் குறைவு. ‘பா’ வரிசைப் படப்பாடல்களின் அமோகமான வெற்றிக்குப் பிறகு, அத்தகைய வாய்ப்புகள் அவரைத் தேடி அலைமோதின. அவரே கூட படங்களின் அனைத்துப்பாடல்களையும் தானே எழுதத்தான் விரும்பினார்.
பிறகு, அவர் 1981ல் மறையும் வரை அவருடைய சினிமா பாடல்கள் எழுதும் வேலையில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால், அவர் இறந்து நாற்பது வருடங்கள் ஆகப்போகும் இன்றைய நிலையிலும், இதுவரை திரைப்பாடல்கள் எழுதியவர்களில் அவருக்குத்தான் முதல் ஸ்தானம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை! இந்த விஷயத்தில் ஒரு சிலருக்கு நிறைய ஏமாற்றம் உண்டு!
அறுபதுகளின் தொடக்க ஆண்டுகளில், வெற்றியின் சந்தோஷத்தில் குளித்தபடியே, திரைப்பாடல்கள் குறித்துக் கண்ணதாசன் சொன்ன விஷயங்களில் முக்கியமான ஒன்று -- ‘‘பாட்டு என்பது வெறும் படத்துக்காக அல்ல, தனித்து நிற்க வேண்டும்’’.
என்னது, வெறும் படமா? படம் முக்கியம் இல்லையா? பாட்டு தனியாக நிற்கவேண்டுமா? படத்தோடு பாடல் இணைந்து போகவேண்டும் என்று சினிமா மேதைகள் சொல்லிக்கொண்டிருக்கும் போது இந்தக் கவிஞர் என்ன பாடல்கள் தனியாக நிற்கவேண்டும் என்கிறார்? இப்படியெல்லாம் மனதில் கேள்விகள் எழலாம்.
அந்தக் கேள்விகளுக்குப் பதில், பாடல் படத்தோடு ஒட்டாமல் இருக்க வேண்டும் என்று கவிஞர் சொல்கிறார் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. காட்சிக்கும் கேரக்டருக்கும் ஏற்றபடி எழுதக்கூடியவர் என்று அவர் புகழப்பட்டார். ஏதோ காட்சிக்காக மட்டும் பாடல் என்று நினைத்துப் பாடலையும் அதன் காட்சிப்படுத்தலையும் தக்கையாக விட்டுவிடக்கூடாது. பாடலும் அதன் காட்சியும் மிகவும் முக்கியம் என்று நினைக்க வேண்டும் என்கிறார் கவிஞர்.
‘பாவ மன்னிப்பு’ படத்தைப் பார்த்தால் பாடல்கள் தனியாக நிற்கும்படித்தான் அமைந்திருக்கின்றன.
தன்னுடைய காதலி தங்கத்தைக் குறித்து, பலவிதமான கற்பனைகள் செய்து, ராஜன் (ஜெமினி கணேசன்) பூங்காவில் பாடும் பாடல் -- ‘காலங்களில் அவள் வசந்தம்’.
இஸ்லாமியர்களின் கொண்டாட்டப் பாடலாக, ரஹீம் (சிவாஜி கணேசன்) பாடும் பாடல், ‘எல்லோரும் கொண்டாடுவோம்’.
ரஹீம் சைக்கிளை மிதித்தபடி, ரம்மியமான இயற்கை சூழலில், மனிதகுலம் இப்படியெல்லாம் மாறிவிட்டதே என்று வருந்திப் பாடி வரும் பாடல், ‘வந்த நாள் முதல்’.
இரண்டு பெண்கள் (சாவித்திரி, தேவிகா), தங்கள் காதலர்களை நினைக்கும் நிலையில் வெளிப்படும் பாடல், ‘அத்தான், என்னத்தான்’.
ஆணின் ஹம்மிங்குடன் அமைந்த ஒரு காதல் டூயட், ‘பாலிருக்கும் பழமிருக்கும்’.
சோகத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஊசலாடும் மனதுடன் நாயகன் ரஹீம் பாடுவது, ‘சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்’.
இந்தப் பாடல்களை வெட்டிவிட்டாலும், கதை நகர்ந்து கொண்டுதான் இருக்கும். ஆனால், இந்தப் பாடல்களுக்காகவே படம் பார்க்க திரை அரங்கம் செல்லும் ரசிகர்கள், பாடல்களை ஏன் வெட்டினீர்கள் என்று கலாட்டா செய்வார்கள்!
நாடகமேடையில் ஒரு பாடலை பாடிவிட்டு இறந்து போவதாக நடிப்பவர், ‘ஒன்ஸ் மோர்’ கேட்டால், எழுந்து பாடலை பாடிவிட்டு மீண்டும் செத்துப்போவார் என்று சொல்வார்கள்! திரையரங்குகளில் கூட இந்த ‘ஒன்ஸ்மோர்’ கூக்குரல் இருந்திருக்கிறது.
சுதந்திரப்போராட்டக் காலத்தில், தேச பக்திப் பாடல்கள் வரும் ரீல்களை மீண்டும் மீண்டும் சுழற்றி திரும்ப திரும்ப போடுவார்களாம். ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று கேட்டார் திருவள்ளுவர். அதே போல், ஆர்வத்திற்குத்தான் கட்டுப்பாடுகள் உண்டா?
தன்னை வெற்றிப்படியில் ஏற்றிய ‘பாவ மன்னிப்பு’ பாடல்களைப் பற்றி, கண்ணதாசன் இன்னொரு விஷயமும் கூறியிருக்கிறார். ‘‘இந்த இடத்திற்கு இப்படித்தான் கருத்திருக்க வேண்டும் என்று நான் எந்த வரம்பையும் வைத்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் உற்சாகமாக எனக்குத்தோன்றுகிற பொதுப் பாடல்களைப் படங்களில் நுழைத்திருக்கிறேன். இதில் எனக்குத் துணையாக இருந்தவர் பீம்சிங் ஆவார்.
‘பாவமன்னிப்பு’, ‘பாலும் பழமும்’ படங்களில் பெரும்பாலான பாடல்கள் பொதுப்பாடல்களாக பிறந்த பாடல்கள்தான்.’’ தமிழ் படப்பாடல்கள் பொதுவாக இந்த வகையைச் சேர்ந்தவைதானோ?
இயக்குநரிடமிருந்து இவ்வளவு சுதந்திரம் பெற்று, ‘பாவமன்னிப்பு’ பாடல்களுக்கான வரிகளை எழுத அமர்ந்த கண்ணதாசன் மனதில் எத்தனை கற்பனைகள் சிறகடித்திருக்கவேண்டும்!
திராவிட இயக்கத்தின் சொல்லடுக்குகள் திகட்டிப்போய், கண்ணனின் குழலிசைக்கு கண்ணதாசன் செவிசாய்க்கத் தொடங்கியிருந்த நேரம் அது. பகவத் கீதையின் ‘விபூதி யோகம்’ என்ற பகுதியில், கிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனுக்கு விஸ்வரூபம் காட்டுகிறார். ‘வானத்தில் நான் சூரியன், மேகங்களில் நான் மழை மேகம், வேதங்களில் நான் சாமவேதம், மாதங்களில் நான் மார்கழி’ என்பதுபோல் சிறப்பானவற்றை வரிசைப்படுத்தி, அவையெல்லாம் பகவானான என்னுடைய சிறப்பைத்தான் பிரதிபலிக்கின்றன” என்று பார்த்தனுக்கு எடுத்துரைக்கின்றார்.
பகவான் இந்த வகையில் வெளிப்படுத்திய உத்தியை, காதலியைக் குறித்து காதலன் பாடும் பாட்டில் கண்ணதாசன் பயன்படுத்திக்கொண்டார்! ‘காலங்களில் அவள் வசந்தம், கலைகளில் அவள் ஓவியம், மாதங்களில் அவள் மார்கழி, மலர்களிலே அவள் மல்லிகை’ என்று எளிமையான அழகுடன் வரிகளைத் தொடுத்துச் சென்றார் கண்ணதாசன். இப்படியே பட்டியல்போட்டுக்கொண்டுபோனால் சலிப்புத்தரும் அல்லவா? அதனால், தான் இப்படியெல்லாம் அடுக்குவதற்கான காரணத்தைக் கூறுவதுபோல், ‘அவள் கவிஞன் ஆக்கினாள் என்னை’ என்று அற்புதமாக முடித்தார்.
மத நல்லிணக்கத்தைச் சொல்வதாக நினைத்துக்கொண்டு, பீம்சிங் ‘பாவமன்னிப்பு’ படத்தை எடுத்திருந்தார். அவருடைய புத்தா பிலிம்ஸ் ஸ்தாபனத்தின், ‘புத்தம் சரணம் கச்சாமி’ என்ற பவுத்த பிரகடனத்துடன் படம் தொடங்கியது. ‘பாவமன்னிப்பு’ என்ற படப்பெயர் கிறிஸ்தவ சமய பழக்கங்களில் ஒன்றைக் குறிப்பிட்டது. படத்தின் மகா வில்லன் (எம்.ஆர். ராதா), காமாட்சி, மீனாட்சி என்று பேசி பித்தலாட்டம் செய்யும் ஒரு கொலைகாரன்.
படத்தில் அவன் இந்து மதப் பிரதிநிதி! ஜேம்ஸ் என்ற கிறிஸ்தவர் மிகவும் நல்லவர். ஊருக்கு உபகாரி. தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மாணிக்கம் பிள்ளையின் குழந்தையை மேரி என்ற பெயரில் வளர்க்கிறார். ரஹீம் என்ற கதாநாயகனின் வளர்ப்புத் தந்தையான இஸ்லாமியர், சேரியில் இருப்பவர்களுக்கு வைத்தியம் பார்க்கும் உத்தமர். ‘பாவ மன்னி’ப்பில், இந்த வகையில் சமயங்கள் அடையாளம் காட்டப்பட்டிருந்தன.
‘பாரதி வைத்தியசாலை’ என்ற பெயர் பொறிக்கப்பட்ட கூடையுடன் கூடிய சைக்கிளை, பறந்த வெளிகளுக்கு இடையே ரஹீம் ஓட்டி வருகிறான். அப்போது அவன் சிந்தனைச் சிதறலாக ஒலிக்கிற பல்லவியின் முக்கிய வரி, ‘மனிதன் மாறிவிட்டான், அவன் மதத்தில் ஏறிவிட்டான்’. படம் வெளிவந்த 1961ல், யாருக்கு மதாபிமானம் பெரிதாகப்போய்விட்டது என்று பீம்சிங்கும் அவருடைய பார்ட்னர்களில் ஒருவரான வசனகர்த்தா சோலைமலையும் கவலைப்பட்டார்கள்?
இந்த விஷயங்கள்தான், ‘வந்த நாள் முதல் இந்த நாள் வரை, வானம் மாறவில்லை, வான் மதியும் மீனும் கடல் காற்றும், மலரும் மண்ணும் கொடியும் சோலையும்’ என்று இசையமைப்பாளர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி தந்த சந்தத்திற்கு ஏற்றவாறு, கண்ணதாசன் வார்த்தைகளை அடுக்கினார்.
அதன் பொருள் -- மிக மோசமான காலம் வந்தது, மனிதரின் தீய கோலம் வந்தது. இதைத்தான், ‘நிலை மாறினால் குணம் மாறுவான்’ என்று எழுதினார் கண்ணதாசன். ஒன்றிலிருந்து ஒன்று வந்தது என்று இசைக்கும் மெட்டுக்கும் எம்.எஸ். விஸ்வநாதன் கூறுவார். இந்தப் பாடலைப் பொறுத்தவரை, பாடல் வரிக்கும் அது பொருந்திப்போனது!
‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா’ என்று ராமச்சந்திர கவிராயர் என்ற கவிஞர், தான் படும் வயிற்றுப்பசியின் பாட்டை ‘தான்’ போட்டு தாளித்தார். ‘தானை’ தொடர்ந்து பயன்படுத்தும் உத்தியை இந்தப் பாட்டிலிருந்து எடுத்துக்கொண்ட கண்ணதாசன், ‘அத்தான், என்னத்தான், அவர் என்னைத்தான், எப்படிச் சொல்வேனடி’ என்று வெளியே கூறமுடியாததை அழகாகக் கூறாமல்தான் விட்டார்!
எத்தனையோ புல்லாங்குழல் மேதைகள் வாசித்தாலும் மாலியின் குழலிசையில் ஒரு தனி ஜீவன் இருக்கும். எல்லா ஓசைகளும் அடங்கிய பின்னர் வரும் இன்னிசையாக அது மட்டும் ஒலிக்கும். ‘அத்தான்’ பாடலும் அப்படித்தான். என்னடா இது பொத்தான் பாடல் என்று நினைத்தவர்களே இதை சத்தான பாடல் ஆக்கிவிட்டார்கள்! நிசப்தமான நீள்வானில் கண்சிமிட்டும் நித்திலங்கள் போல், அது அமைதியாக இசை அலைகளையெழுப்பிக்கொண்டிருக்கிறது!
அக்கார்டியனின் அழகான நாதத்திற்கும் ‘தானின்’ எழில்கோலத்திற்கும் மெல்லிசையின் ரம்மியமான புது தொனிக்கும் இந்தப் பாட்டு ஒரு எடுத்துக்காட்டு.
அ.ராமனாதன். #🎬 சினிமா #📷நினைவுகள் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #😍Old மூவிஸ் #💪கெத்து ஸ்டேட்டஸ்


