ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 22 : முதல் வாசகம் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 1b-8 அந்த நாள்களில் எருசலேம் திருச்சபை பெரும் இன்னலுக்கு உள்ளாகியது. திருத்தூதர்களைத் தவிர மற்ற அனைவரும் யூதேயா, சமாரியாவின் நாட்டுப் புறமெங்கும் சிதறடிக்கப்பட்டுப் போயினர். இறைப்பற்று உள்ள மக்கள் ஸ்தேவானை அடக்கம் செய்து, அவருக்காக மாரடித்துப் பெரிதும் புலம்பினர். சவுல் வீடுவீடாய் நுழைந்து ஆண்களையும் பெண்களையும் இழுத்துக் கொண்டுபோய், அவர்களைச் சிறையிலடைக்கச் செய்தார். இவ்வாறு அவர் திருச்சபையை அழித்துவந்தார். சிதறிய மக்கள் தாங்கள் சென்ற இடமெல்லாம் நற்செய்தியை அறிவித்து வந்தனர். பிலிப்பு சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 22 : பதிலுரைப் பாடல் திபா 66: 1-3a. 4-5. 6-7a (பல்லவி: 1) பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா. 1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3a கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை’ என்று சொல்லுங்கள். - பல்லவி 4 ‘அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி 6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7a அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி யோவா 6: 35 அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா. ஏப்ரல் 22 : நற்செய்தி வாசகம் மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறவேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 35-40 அக்காலத்தில் இயேசு மக்கள் கூட்டத்தை நோக்கி: “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது. ஆனால், நான் உங்களுக்குச் சொன்னவாறே நீங்கள் என்னைக் கண்டிருந்தும் நம்பவில்லை. தந்தை என்னிடம் ஒப்படைக்கும் அனைவரும் என்னிடம் வந்து சேருவர். என்னிடம் வருபவரை நான் புறம்பே தள்ளிவிடமாட்டேன். ஏனெனில் என் சொந்த விருப்பத்தை நிறைவேற்ற அல்ல, என்னை அனுப்பியவரின் விருப்பத்தை நிறைவேற்றவே நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன். அவர் என்னிடம் ஒப்படைக்கும் எவரையும் நான் அழிய விடாமல் இறுதி நாளில் அனைவரையும் உயிர்த்தெழச்செய்ய வேண்டும். இதுவே என்னை அனுப்பியவரின் திருவுளம். மகனைக் கண்டு அவரிடம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெற வேண்டும் என்பதே என் தந்தையின் திருவுளம். நானும் இறுதி நாளில் அவர்களை உயிர்த்தெழச் செய்வேன்” என்று கூறினார். ஆண்டவரின் அருள்வாக்கு. -------------------------------------------------------------------- “நற்செய்தியை அறிவித்து வந்தனர்” பாஸ்கா காலத்தின் மூன்றாம் வாரம் புதன்கிழமை I திருத்தூதர் பணிகள் 8: 1b-8 திருப்பாடல் 66: 1-3a, 4-5, 6-7a, (1) II யோவான் 6: 35-40 “நற்செய்தியை அறிவித்து வந்தனர்” அறிவிப்பின் முக்கியம்! ‘தீமையிலும் ஒரு நன்மை உண்டு’ என்று சொல்வார்கள் அல்லவா! அப்படித்தான் தொடக்கக் காலகட்டத்தில் கிறிஸ்தவர்கள் துன்புறுத்தப்பட்டபோது, அவர்கள் பல இடங்களுக்கும் சிதறிப் போனார்கள். அவ்வாறு சிதறிப் போனவர்கள் தாங்கள் சென்ற இடங்களிலெல்லாம் இயேசுவைப் பற்றி நற்செய்தியை அறிவித்தார்கள். இதனால் பலரும் அவர்மீது நம்பிக்கை கொண்டார்கள். இங்கே கடவுளின் வார்த்தையை அறிவிப்பதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில், “அறிவிக்கப்பட்டதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10: 17) என்கிறார். பல இடங்களுக்கும் சிதறிப் போன தொடக்கக்கால கிறிஸ்தவர்கள் இயேசுவைப் பற்றி அறிவித்ததாலேயே கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை பெருகியது. நற்செய்தியில் இயேசு, “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்கிறார். இயேசு இவ்வாறு சொன்னதை அவரது சீடர்களே முதலில் ஏற்றுக்கொள்ளத் தயங்கினாலும; பின்னர் அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று, தொடக்கக்கால கிறிஸ்தவர்களைப் போன்று நற்செய்தி அறிவிப்போம்; அதைக் கேட்கும் மக்கள் ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்வார்கள். அதனால் அவர்கள் ஆண்டவர் தரும் நிலைவாழ்வைப் பெறுவர். அப்போது இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 66 இல் இடம்பெறுவது போல், அனைத்துலகோரும் கடவுளைப் போற்றி ஆர்ப்பரிக்கும் நிலை ஏற்படும். அறிவிக்கப்பட்டதால் நம்பினார் ரிச்சர்ட் வேவர் என்றொரு கிறிஸ்தவர் இருந்தார். கிறிஸ்துவின்மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த இவர், நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் தன்னோடு வேலை பார்த்து வந்த சக தொழிலாளர்களிடம் தொடர்ந்து இயேசுவைப் பற்றி அறிவித்து வந்தார். ஒருநாள் இவர் இயேசுவைப் பற்றிச் சக தொழிலாளர்களிடம் அறிவிக்கும்போது, ஒருவர் இவரிடம், “நீ இப்படியே செய்து வந்தால், நான் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியாது” என்றார். “என்னை நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; ஆனால், நான் இயேசுவைப் பற்றி அறிவிப்பதை மட்டும் விடவே மாட்டேன்” என்றார் இவர். உடனே அந்தத் தொழிலாளி, இவரது வலது கன்னத்தில் தாக்க, இவர் மறுகன்னத்தையும் திரும்பிக் காட்டினார். அப்போதும் அவர் இவரது மறுகன்னத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, அங்கிருந்து போய்விட்டார். மறுநாள் காலையில் எல்லாருக்கும் வேலைக்கு வந்தபோது, ரிச்சர்ட் வேவர் தன்னைத் தாக்கியவரிடம் கிறிஸ்துவைப் பற்றி அறிவித்தபோது, அவரது உள்ளம் திறந்தது; கிறிஸ்துவை அவர் நம்பி ஏற்றுக்கொண்டார். இயேசுவைப் பற்றித் தொடர்ந்து அறிவிக்கும்போது, அது மக்கள் நடுவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு சான்று. ஆகையால், நாம் இயேசுவைப் பற்றி மனந்தளராமல் அறிவித்து, பலரும் அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம். ஆண்டவரின் வார்த்தை “இறைவார்த்தையை அறிவி, வாய்ப்புக் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இதைச் செய்வதில் நீ கருத்தாய் இரு” (2 திமொ 4:2) தீர்மானங்கள் 1) இடர் வந்தபோதும் இடையறாது நற்செய்தியை அறிவிப்போம் 2) இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்வோம்; ஏனெனில், அவரால்தான் நமக்கு நிலைவாழ்வு அளிக்க முடியும். 3) துன்பங்களைக் கண்டு கலங்கிட வேண்டும். அதுவே இன்பத்திற்கான நுழைவாயில் - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்