*ஞான உணர்த்துதல்.!*
- அர்ச். ஜோஸப் பெஸ்கி (வீரமாமுனிவர் என அழைக்கப்படும் குருவானவர்)
*_மரண பயங்கரம்.!_*
பிறந்தவன் எவனும் இறக்க வேண்டும் என்று பாவத்துக்குத் தண்டனையாகச் சர்வேசுரன் கட்டளையிட்டிருக்கிறார். அந்தக் கட்டளைக்கு, அவருடைய திருக்குமாரன், தேவமாதா முதல் சகல மனிதரும் உட்பட்டு நடந்து கொண்டு வந்ததைக் கண்டு வருகிறோம். மனுஷன் ஒருவன் பிறக்கிறபோது, சந்தோஷமும், இறக்கிற போது துக்கமுமாயிருந்து, அவனவன் பிறந்த நாளை எழுதி வைத்துக் கொண்டு, அந்த நாளைக் கொண்டாடுவார்கள். இறக்கும் நாளைக் குறித்து ஒரு சிந்தனையும் இல்லை. நமது கண் எதிரில் சாகிறவர்களையும், முன்னே இறந்து போனவர்களையும் கண்டறிந்து, நமக்கும் இப்படி வருமே என்பதைச் சற்றும் நினைக்கிறதில்லை. இன்னான் செத்தான் என்கிற வார்த்தையைக் கேட்டவுடனே, அவனுக்காகக் கொஞ்சம் அங்கலாய்த்துப் பெருமூச்சு விட்டு, அப்புறம் மறந்துபோய் ஒன்றும் நினையாமல் இருக்கிறார்கள்.
அது எத்தன்மையதெனில், ஆற்றங்கரையிலுள்ள மரங்களிலே, ஓடி ஆடிப் பாய்கிற குரங்குகளிலே யாதொன்று தப்பித் தவறி ஆற்றிலே விழுந்து செத்தால், மற்றக் குரங்குகள் பல சேஷ்டைகளால் தங்கள் துக்கத்தைக் காண்பிக்கும். செத்த குரங்கை வெள்ளம் அடித்துக் கொண்டு போய் அது காணாப் பிணமாய்ப் போனால், அந்தக் குரங்குகள் மறுபடி முன் போலே ஓடி ஆடித் திரியும். வெடி சத்தம் கேட்டவுடனே கொக்கு குருவிகள் எல்லாம் பயப்பட்டுப் பறந்து ஓடிப் போகும். சற்று நேரம் பொறுத்து மறுபடியும் அந்த இடத்திலேயே வந்து கூடும். புத்தியில்லாத மிருகங்கள் இப்படிச் செய்கிறது அதிசயமல்ல. அறிவு, நினைவு, புத்தியுள்ள மனுஷன் மிருகங்களிலும் கடை கெட்ட மிருகமாய்ப் போகிறானே. அதற்கு அதிசயப்பட வேண்டும் அல்லோ ? ஆனால் எரேமியாஸ் என்பவர் மனுஷர் மரணத்தை நினைக்கும்படிக்குக் குயவன் செய்தொழில் இடத்திலே போய்ப் பாருங்கள் என்றார். அதிலே மண்கலம் வனைகிறதையும், உடைந்து போகிறதையும் பார்த்தால், சரீரமும் இப்படிப் போகிறதென்று நினைவு உண்டாகும். சாலமோன் என்கிறவரோ இழவு வீட்டுக்குப் போங்கள் என்றார். அவனவன் தேடின பொருள் எல்லாம் செத்தபின்பு அவனவனுக்கு உதவாமல் போகிறதைக் காணலாம்.
யாராவது ஒருவனைக் கொல்லத் தீர்வையிட்டுக் கொலைக்களத்துக்கு கூட்டிக் கொண்டு போகிற போது, அவன் சீவனுடனே போனாலும் சாகப் போகிறானென்று சொல்லுகிறதல்லாமல், சீவிக்கப் போகிறானென்று சொல்லுவாரில்லை. அடிமரத்திலே கோடரி வெட்டு விழுகிற போது மரம் விழுந்து போகுமென்று சொல்லுகிறதல்லாமல், வளருமென்று ஒருவரும் சொல்ல மாட்டார்கள். அப்படியே உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனுஷனும் சாக வேண்டுமென்று சர்வேசுரன் தீர்வையிட்ட போதே, மனுஷன் நடக்க நடக்க, ஆயுள் குறைந்து அவனைப் புதைக்கும் குழி விரைந்து வரும். நேற்று நினைத்த நினைவு இன்றைக்கு இல்லை. நேற்றுப் பேசின பேச்சும் நேற்று தின்ற சாப்பாடும், செலவழித்த செலவும் இன்றைக்கு உண்டோ ? எல்லாம் கடந்து போச்சுது. இனிமேல் அவனவன் நினைக்கிறதும் செய்கிறதும் அழிந்து போகிறதன்றி ஒன்றும் நிலைநிற்கப் போகிறதில்லை.
ஒருவனை உனக்கு எத்தனை வயதென்று கேட்டதற்கு, ஒரு வயதும் இல்லையென்றான். புண்ணியத்திலே செலவழித்த காலமே வயதாயிருக்குமே தவிர, மற்றது வீணாயிருக்கும். உன்னைக் கொல்லுகிறவர்களும், புதைக்கிறவர்களும் உன்னைத் தொடர்ந்து கொண்டு திரிகிறதைக் காணவில்லையோ? உன் உடலுக்குள்ளேயிருக்கிற வாதம், பித்தம், திமிர், என்கிற வியாதிகளே உன்னைக் கொல்லுகிற கொலைகாரராம். உன் மனதிலே இருக்கிற பொன்னாசை, மண்ணாசை, பெண்ணாசை என்கிற மூன்று தீக்குணங்களே உன்னை நரகக் குழியிலே புதைக்கக் கொண்டு போகிற தூதர்களாம். உன் உடலே உனக்குப் பகை. சீவிக்கிற பொருள் எல்லாம், உன்னைக் கொல்லுகிற ஆயுதம். உன்னுடைய ஊணுறக்கமே உனக்குச் சாவு. நீ நடக்கிற நடையும் உன்னுடைய சதையும் கொழுப்புமே உனக்குச் சத்துரு. பஞ்ச பூதங்களே உனக்கு விரோதிகள். அசாத்திய வியாதி முந்நூறு உண்டென்றும், திடீரென சாகிற வகைகள் தொண்ணுாற்றேழு என்றும் சில சாஸ்திரங்களிலே சொல்லியிருக்கின்றது.
வருத்தம், நகைப்பு, சந்தோஷத் தினாலும், மூச்சடைப்பு, முள் விக்கிக் கொள்ளுகிறதினாலேயும் சாவு வருகின்றது. ஒருவன் வீதியிலே, ஒருவன் வாசலிலே, ஒருவன் குதிரைமேலே, ஒருவன் பல்லக்கின் மேலே, இப்படி எண்ணிக்கை இல்லாத விதமாய்ச் திடீரென செத்துப் போகிறார்கள். கொலை செய்யப்படப் போகிறவன் சந்தோஷமாய்ச் சீவிக்கிறதெப்படி? விளையாட்டுக்களைக் கண்டால் சந்தோஷிப்பானோ? பொன், வெள்ளி, ஆபரணங்கள் தன் காலடியிலே விழுந்திருந்தாலும் எடுக்க மனம் வருமோ?
சாகப் போகிற நினைவு பெரிதாயிருக்குமல்லாமல் வேறே என்ன நினைவு வரும்? அப்படி நீ சாகவிருக்கையிலே உனக்குச் சந்தோஷம் என்ன? நகைப்பு என்ன? கைவீச்சு என்ன ? ஒய்யார நடை என்ன? மண்ணோடு மண்ணாய்ப் போகிற உனக்கு வீடு வாசல், தோட்டந் துரவு, காணி பூமி. உடமை உற்பத்தி என்ன? உற்றார், பெற்றோர், சேர்ந்தார், சிநேகிதர் ஏது? சாவையும், அதினாலே வருகிற பொல்லாப்பையும் நினையாதபடி யினாலே மோசம் போகிறாய்.
நமது இனையத்தள முகவரி...
www.catholictamil.com #✝️இயேசுவே ஜீவன்
பரிசுத்த தமத்திருத்துவத்திற்கு மகிமை உண்டாவதாக !!! பரிசுத்த திருக்குடும்பமே துணை


