ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 17 : முதல் வாசகம் இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால், மகிழ்ச்சியோடு வெளியே சென்றார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 5: 34-42 அந்நாள்களில் கமாலியேல் என்னும் பெயருடைய பரிசேயர் ஒருவர் தலைமைச் சங்கத்தில் எழுந்து நின்றார். இவர் மக்கள் அனைவராலும் மதிக்கப்பட்ட திருச்சட்ட ஆசிரியர். திருத்தூதரைச் சிறிது நேரம் வெளியே போகும்படி ஆணையிட்டு, அவர் சங்கத்தாரை நோக்கிக் கூறியது: “இஸ்ரயேல் மக்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்ய எண்ணியுள்ளதைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள். சிறிது காலத்திற்கு முன்பு தெயுதா என்பவன் தோன்றி, தான் பெரியவன் என்று கூறிக்கொண்டு, ஏறத்தாழ நானூறு பேரைத் தன்னுடன் சேர்த்துக்கொண்டான். ஆனால், அவன் கொல்லப்பட்டான். அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப் போகவே, அந்த இயக்கம் ஒன்றுமில்லாமல் போயிற்று. இவற்றுக்குப் பின்பு மக்கள் தொகை கணக்கிடப்பட்ட நாள்களில் கலிலேயனான யூதா என்பவன் தோன்றித் தன்னோடு சேர்ந்து கிளர்ச்சி செய்யும்படி மக்களைத் தூண்டினான். அவனும் அழிந்தான்; அவனைப் பின்பற்றிய மக்கள் அனைவரும் சிதறிப்போயினர். ஆகவே இப்போது நீங்கள் இம்மனிதர்களை விட்டுவிடுங்கள் என நான் உங்களுக்குக் கூறுகிறேன். இவர்கள் காரியத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். இவர்கள் திட்டமும் செயலும் மனிதரிடத்திலிருந்து வந்தவை என்றால் அவை ஒழிந்து போகும். அவை கடவுளைச் சார்ந்தவை என்றால் நீங்கள் அவற்றை ஒழிக்க முடியாது; நீங்கள் கடவுளோடு போரிடுபவர்களாகவும் ஆவீர்கள்.” அவர் கூறியதைச் சங்கத்தார் ஏற்றுக்கொண்டனர். பின்பு அவர்கள் திருத்தூதர்களை அழைத்து அவர்களை நையப் புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு விடுதலை செய்தனர். இயேசுவின் பெயரை முன்னிட்டு அவமதிப்புக்கு உரியவர்களாகக் கருதப்பட்டதால் திருத்தூதர்கள் மகிழ்ச்சியோடு தலைமைச் சங்கத்தை விட்டு வெளியே சென்றார்கள். அவர்கள் நாள்தோறும் கோவிலிலும் வீடுகளிலும் தொடர்ந்து கற்பித்து, இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து வந்தார்கள். ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 17 : பதிலுரைப் பாடல் திபா 27: 1. 4. 13-14 (பல்லவி: 4b) பல்லவி: ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும். அல்லது: அல்லேலூயா. 1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? - பல்லவி 4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்; ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; அவரது கோவிலில் அவரது திருவுளத்தைக் கண்டறிய வேண்டும். - பல்லவி 13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு. - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி மத் 4: 4b அல்லேலூயா, அல்லேலூயா! மனிதர் அப்பத்தினால் மட்டுமல்ல, மாறாக, கடவுளின் வாய்ச்சொல் ஒவ்வொன்றாலும் வாழ்வர். அல்லேலூயா. ஏப்ரல் 17 : நற்செய்தி வாசகம் அப்பங்களைப் பகிர்ந்தளித்தார். மக்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. ✠ யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 1-15 அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறுகரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்துவந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திரளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, “இவர்கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?” என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, “இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே” என்றார். அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, “இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?” என்றார். இயேசு, “மக்களை அமரச் செய்யுங்கள்” என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந்திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக் குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டிய மட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், “ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்” என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், “உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே” என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார். ஆண்டவரின் அருள்வாக்கு. ------------------------------------------------------------------------- உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் பாஸ்கா காலத்தின் இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை I திருத்தூதர் பணிகள் 5: 34-42 திருப்பாடல் 27: 1, 4, 13-14 (4b) II யோவான் 6: 1-15 உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் இயேசுவின் வழியில் இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளித்த அருமடையாளத்திற்கு ஒரு சிறப்பிருக்கின்றது. அது என்னவெனில், நான்கு நற்செய்தி நூல்களிலும் இடம்பெறும் ஓர் அருமடையாளம் இதுதான் (மத் 14: 13-23; மாற் 6: 30-46; லூக் 9: 10-17). மக்கள் தன்னைத் தேடிவருவது தன்னுடைய போதனையைக் கேட்க அல்ல, தங்களுடைய நோய் நீங்கவும், வயிறார உண்ணவுமே என்பது இயேசுவுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. எனினும் இயேசு அவர்கள்மீது பரிவுகொண்டு அவர்களுக்கு உணவளிக்கின்றார். இயேசு செய்த இந்த அருமடையாளம், ‘படைகளின் ஆண்டவர் இந்த மலையில் மக்களினங்கள் அனைவருக்கும் சிறந்ததொரு விருந்தை ஏற்பாடு செய்வார்” (எசா 25:6) என்ற வார்த்தைகளை நினைவுபடுகின்றன. அத்தோடு அவர் வாழ்வுதரும் உணவைப் பற்றிப் பேசுவதற்கு முன்னடையாளமாக இருக்கின்றது. இயேசு அப்பங்களைப் பலுகச் செய்ததன் மூலம் தன்னை மெசியா என்பதை உலகிற்கு வெளிப்படுத்துகின்றார். மக்களோ அவரைவெறும் அரசியல் மெசியாவாக மட்டும் புரிந்துகொண்டு, அவரை அரசராக்க முயற்சி செய்தார்கள். அதனால் அவர் தனிமையாக ஓர் இடத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். இஸ்ரயேலில் அவ்வப்போது ஒருசிலர் தோன்றி தங்களை மெசியா என்று அறிவித்துக் கொண்டார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் தெயுதாவும் யூதாயும். இவர்கள் காலப்போக்கில் ஒன்றுமில்லாமல் போனார்கள்; ஆனால், இயேசு உண்மையாகவே மெசியா; அவர் மனிதரிடமிருந்து அல்ல, கடவுளிடமிருந்து வந்தவர். இந்த உண்மையை தெரியாமல், யூதர்களின் தலைமைச் சங்கத்தினர் அவரின் சீடர்களை நையப்புடைத்து, இயேசுவைப் பற்றிப் பேசக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி விடுகின்றனர். அவர்களோ இன்னும் துணிச்சலாக இயேசுவைப் பற்றி அறிவிக்கின்றார்கள். இதைப் பற்றி இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம். இயேசுவே மெசியா. அவரை நம்பி ஏற்றுக்கொள்பவர் வாழ்வடைக்கின்றார். இன்று நாம் பாடக்கேட்ட பதிலுரைப்பாடலில் தாவீது, “ஆண்டவரின் இல்லத்தில் நான் குடியிருக்க வேண்டும்” என்கிறார். தாவீதுக்கு பல இடங்களிலிருந்தும் ஆபத்துகள் வந்தன. அத்தகைய சூழ்நிலையில் ஆண்டவரே தனக்குத் தஞ்சம் என்று அவர்மீது உண்மையான நம்பிக்கை வைத்து வாழ்ந்து, அவரது இல்லத்தில் எப்போதும் குடியிருக்க விரும்பினார். நாம் இயேசுவை, ஆண்டவரை நம்முடைய அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு சாதாரண மனிதராகப் பார்க்காமல் அவரை மெசியா என நம்பி ஏற்றுக்கொண்டு, அவர் வழியில் நடப்போம்; வறியோருக்கு இரக்கம் காட்டுவோம். முகமூடி அணிந்து உணவளிப்பவர் கொரோனா நோய்த்தொற்றுக் காலத்தில் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிப் போனதால், அவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் வறியவர்கள் உணவுக்கு வழியின்றி நிறையவே துன்பப்பட்டார்கள். இதையெல்லாம் பார்த்த சிலி நாட்டைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டில் உணவு தயாரித்து, அதைப் பைகளில் எடுத்துக்கொண்டு, ஏழை எளியவரின் வீட்டிற்குச் சென்று கொடுத்தார். இத்தகையதொரு செயலை அவர் பேட்மேன் உடையணிந்து கொண்டு செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது. ஒருசிலர் இவரது செயலைப் பார்த்துவிட்டு, “நீங்கள் ஏன் பேட்மேன் உடை அணிந்து கொண்டு மக்களுக்கு உணவளிக்கின்றீர்கள்?” என்று கேட்டபோது, இவர், “உணவின்றித் தவிக்கும் மக்களுக்கு உணவளிக்க வேண்டும் என்பது என்னுடைய முதன்மையான நோக்கம். அதே நேரத்தில் நான் செய்யும் இந்தச் சேவை என்னை விளம்பரப்படுத்திக் கொள்வதாக இருக்கக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு செய்கின்றேன்” என்றார். வறியவர்களுக்கு உணவளிக்க வேண்டும். அதுவும் விளம்பரத்திற்காக அல்லாமல், உள்ளார்ந்த விதமாய் அளிக்க வேண்டும். அதுவே உயர்ந்த நெறியாக இருக்கும். ஆண்டவரின் வார்த்தை “வறுமையுற்ற இறைமக்களோடு உங்களிடமுள்ளதைப் பகிர்ந்து கொள்ளுங்கள்” (உரோ 12: 13). தீர்மானங்கள் 1) கடவுளைத் தேவைக்காக மட்டும் நாடுவதைத் தவிர்த்து, அவரது கட்டளையைக் கடைப்பிடித்து நடக்க முயற்சி செய்வோம். 2) நாம் இயேசுவின் சீடர்கள் என்பதை நமது செயல்களில் காட்டுவோம். 3) இறைப்பணியில் இடர்வரினும் இடையறாது அவர் பணி செய்வோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்