பைபிள் வாசகங்கள்:
ஏப்ரல் 21 : முதல் வாசகம்
ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 7: 51- 8: 1a
அந்நாள்களில்
ஸ்தேவான் மக்களையும் மூப்பரையும் மறைநூல் அறிஞரையும் நோக்கிக் கூறியது: “திமிர் பிடித்தவர்களே, இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும் ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே, உங்களுடைய மூதாதையரைப் போல நீங்களும் தூய ஆவியாரை எப்போதும் எதிர்க்கிறீர்கள். எந்த இறைவாக்கினரைத்தான் உங்கள் மூதாதையர் துன்புறுத்தாமல் இருந்தார்கள்? நேர்மையாளருடைய வருகையை முன்னறிவித்தோரையும் அவர்கள் கொலை செய்தார்கள். இப்போது நீங்கள் இயேசுவைக் காட்டிக் கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள். கடவுளின் தூதர்கள் வழியாய்த் தரப்பட்ட திருச்சட்டத்தை நீங்கள் பெற்றிருந்தும் அதனைக் கடைப்பிடிக்கவில்லை.”
இவற்றைக் கேட்டவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவரைப் பார்த்துப் பற்களை நறநறவெனக் கடித்தார்கள். அவரோ தூய ஆவியின் வல்லமையை நிறைவாய்ப் பெற்று, வானத்தை உற்றுநோக்கினார். அப்போது கடவுளின் மாட்சியையும் அவர் வலப்பக்கத்தில் இயேசு நிற்பதையும் கண்டு, “இதோ, வானம் திறந்திருப்பதையும், மானிட மகன் கடவுளது வலப்பக்கத்தில் நிற்பதையும் காண்கிறேன்” என்று கூறினார். ஆனால் அவர்கள் தங்கள் செவிகளை அடைத்துக்கொண்டு, பெருங் கூச்சலிட்டு, ஒருமிக்க அவர் மேல் பாய்ந்தார்கள். நகரத்திற்கு வெளியே இழுத்துக் கொண்டுபோய் அவர்மேல் கல்லெறிந்தார்கள். சாட்சிகள் தங்கள் மேலுடைகளைச் சவுல் எனும் இளைஞரிடம் ஒப்படைத்தார்கள். அவர்கள் ஸ்தேவான்மீது கல்லெறிந்தபோது அவர், “ஆண்டவராகிய இயேசுவே, எனது ஆவியை ஏற்றுக்கொள்ளும்” என்று வேண்டிக்கொண்டார். பின்பு முழந்தாள்படியிட்டு, உரத்த குரலில், “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்று சொல்லி உயிர்விட்டார்.
ஸ்தேவானைக் கொலை செய்வதற்குச் சவுலும் உடன்பட்டிருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
ஏப்ரல் 21 : பதிலுரைப் பாடல்
திபா 31: 2cd-3. 5,6-7a. 16,20b (பல்லவி: 5a)
பல்லவி: உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்.
அல்லது: அல்லேலூயா.
2cd
எனக்கு அடைக்கலம் தரும் கற்பாறையாய் இரும்; என்னைப் பாதுகாக்கும் வலிமைமிகு கோட்டையாய் இரும்.
3
ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே; உமது பெயரின் பொருட்டு எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும். - பல்லவி
5
உமது கையில் என் உயிரை ஒப்படைக்கின்றேன்; வாக்குப் பிறழாத இறைவனாகிய ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர்.
6
நானோ, பயனற்ற சிலைகளில் பற்றுடையோரை வெறுத்து, ஆண்டவர் மீது நம்பிக்கை வைக்கின்றேன்.
7a
உமது பேரன்பில் நான் களிகூர்வேன்; அக்களிப்பேன். - பல்லவி
16
உமது முகத்தின் ஒளி அடியேன் மீது வீசும்படி செய்யும்; உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.
20b
மனிதரின் சூழ்ச்சியினின்று அவர்களைக் காப்பாற்றி, உமது முன்னிலையின் மறைப்பினுள் வைத்துள்ளீர்! நாவுகள் கிளப்பும் பூசலினின்று அவர்களைப் பாதுகாத்து உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்! - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 6: 35
அல்லேலூயா, அல்லேலூயா! வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
ஏப்ரல் 21 : நற்செய்தி வாசகம்
வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; என் தந்தையே.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-35
அக்காலத்தில்
மக்கள் இயேசுவிடம், “நாங்கள் கண்டு உம்மை நம்பும் வகையில் நீர் என்ன அரும் அடையாளம் காட்டுகிறீர்? அதற்காக என்ன அரும் செயல் செய்கிறீர்? எங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டனரே! ‘அவர்கள் உண்பதற்கு வானிலிருந்து உணவு அருளினார்’ என்று மறைநூலிலும் எழுதப்பட்டுள்ளது அல்லவா!” என்றனர்.
இயேசு அவர்களிடம், “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: வானிலிருந்து உங்களுக்கு உணவு அருளியவர் மோசே அல்ல; வானிலிருந்து உங்களுக்கு உண்மையான உணவு அருள்பவர் என் தந்தையே. கடவுள் தரும் உணவு வானிலிருந்து இறங்கி வந்து உலகுக்கு வாழ்வு அளிக்கிறது” என்றார்.
அவர்கள், “ஐயா, இவ்வுணவை எங்களுக்கு எப்போதும் தாரும்” என்று கேட்டுக்கொண்டார்கள். இயேசு அவர்களிடம், “வாழ்வு தரும் உணவு நானே. என்னிடம் வருபவருக்குப் பசியே இராது; என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவருக்கு என்றுமே தாகம் இராது” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
----------------------------------------------------
I திருத்தூதர் பணிகள் 7: 51-8: 1a
II யோவான் 6: 30-35
“இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்”
தன் தம்பியைக் கொன்றவனுக்காக இறைவனிடம் மன்றாடிய அண்ணன்:
ஒரு கிறிஸ்தவக் கிராமத்தில் அண்ணன், தம்பி இருவர் இருந்தனர். இவர்கள் இருவரும் சொந்தமாகவும், அதே நேரத்தில் தனித்தனியாகவும் தொழில் செய்துவந்தனர். இருவருடைய தொழிலும் நன்றாக நடைபெற்றன. இதில் தம்பிக்குத் தொழில்ரீதியாக நிறைய எதிரிகள் உருவானார்கள். அதில் ஓர் எதிரி அவரைத் திட்டமிட்டுக் கொலைசெய்தான்.
செய்தியறிந்த அண்ணன் மிகவும் வருந்தினார். அவருக்கு அறிமுகமானவர்கள் எல்லாரும் அவரிடம் வந்து, கொலையாளிக்குத் தக்க தண்டனையை நீதிமன்றத்திலிருந்து வாங்கித் தருமாறு கேட்டுக்கொண்டார்கள்; ஆனால், அவர் அவர்களிடம், “நான் என்னுடைய தம்பியைக் கொலை செய்தவரை நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனையை வாங்கிதரப் போவதில்லை; மாறாக நான் அவருக்காக இறைவனிடம் மன்றாடப் போகிறேன்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அவரை வியப்போடு பார்த்தவர்களிடம் அவர், “வழக்கமாக எனக்கு நெருக்கமாக இருப்பவர்களின் பெயர்களை ஒரு குறிப்பேட்டில் எழுதி வைத்து, அவர்களுக்காக நான் இறைவனிடம் வேண்டுவேன். இப்பொழுது என்னுடைய தம்பி இறந்துவிட்டான் அல்லவா! அதனால் நான் அவனுடைய பெயரை நீக்கிவிட்டு, அவனுடைய பெயர் இருந்த இடத்தில், அவனைக் கொலை செய்தவனுடைய பெயரை எழுதி, அவனுக்காக இறைவனிடம் மன்றாடப் போகிறேன்” என்றார்.
தன் தம்பியைக் கொலை செய்தவனுக்காக இறைவனிடம் மன்றாடிய அந்த அண்ணன்தான் உள்ளத்தால் எத்துணை உயர்ந்தவராக இருக்கின்றார்! இன்றைய முதல் வாசகத்தில் ஸ்தேவான் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவதைக் குறித்து வாசிக்கின்றோம். அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஸ்தேவன் மக்களையும் மூப்பர்களையும் மறைநூல் அறிஞர்களையும் பார்த்து, “இறைவார்த்தையைக் கேட்க மறுக்கும் செவியும், ஏற்க மறுக்கும் உள்ளமும் கொண்டவர்களே...” என்று சொன்னதும், அவர்கள் உள்ளம் கொதித்தெழுந்து, அவர்மீது கல்லெறிகின்றார்கள். அப்பொழுது ஸ்தேவான் சொல்லக்கூடிய வார்த்தைகள்தான்: “ஆண்டவரே, இந்தப் பாவத்தை இவர்கள்மேல் சுமத்தாதேயும்” என்பதாகும்.
“தந்தையே இவர்களை மன்னியும்” (லூக் 23: 34) என்ற இயேசுவின் வார்த்தைகளை ஒத்திருக்கும் ஸ்தேவானின் வார்த்தைகள், அவர் தன்னைக் கல்லால் எறிந்து கொன்றவர்களை மன்னிப்பதை வெளிப்படுத்துவையாக இருக்கின்றன. ஸ்தேவான் தன்னைக் கொன்றவர்களை மன்னித்தன் மூலம் இயேசுவின் உண்மையான சீடராகின்றார். நாமும் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களை மன்னித்து, அவரது உண்மையான சீடர்களாவோம்.
சிந்தனைக்கு:
மன்னிப்பே மகிழ்ச்சிக்கான வழி – பழமொழி
எப்பொழுதும் உங்களுடைய பகைவர்களை மன்னியுங்கள். ஏனெனில், மன்னிப்பை போன்று வேறு எதுவும் உங்களுடைய பகைவர்களுக்கு எரிச்சல் முட்டாது – ஆஸ்கர் வைல்ட்
ஒருவர் செய்த குற்றங்களை மன்னித்து, இந்த மண்ணில் அன்பும் அமைதியும் தழைக்கச் செய்வோம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் மன்னித்தது போல, நீங்களும் மன்னிக்க வேண்டும்’ (கொலோ 3: 13) என்பார் புனித பவுல். எனவே, ஆண்டவர் நம்மை மன்னித்தது போல், ஒருவர் மற்றவரை மன்னித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்

