#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விருத்தம்
==========
கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும்
மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும்
குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும்
கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே
.
விளக்கம்
=========
திருமால் ஈசரோடும் மடக்கொடி உமையாளோடும், வேதம் ஓதும் முனிவர்களோடும், தேவர்களோடும், மாயோனின் ஆடல் கலையைச் செய்து வேதங்களைத் தெளிவாக அறிந்த முனிவர்களோடும், இன்னும் பல ரிஷிகளோடும் திருச்செந்தூர்க் கடற்கரையை வந்தடையவும் எல்லாரும் அக்கடலைக் கண்டு மகிழ்ச்சி எய்தினர்.
.
.
அகிலம்
========
விருத்தம்
=========
வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச்
சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு
சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு
எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார்
.
விளக்கம்
=========
கடலோரம் வந்த எல்லாரும் அங்கே கூடி ஒன்றாக நின்றனர். அப்போது, சந்தன மணத்தையுடைய திருச்செந்தூக் கடலின் கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு அழகான முனிவர்கள் திருமாலின் முன்னால் வந்தனர். அவர்கள் திருமாலின் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி, எங்களுடைய இறைவனே, அருள் புரிவீராக என்று கூறித் துதித்துச் சொல்லலானார்கள்.
.
.
அகிலம்
========
கலைமுனி ஞானமுனி வரவு
ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே
சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து
கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர்
பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா
என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே
மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே
.
விளக்கம்
=========
ஆதியே, எங்கள் அய்யா நாராயணரே, சோதியே எங்களுடைய தவமானது சீக்கிரமாக உயர்வு அடைந்து உம் அருளைக் கண்டு கொண்டோம். இதயத் தாமரையில் அமர்ந்திருக்கும் மூலப்பொருளே, நீர் ஏற்கெனவே கூறியபடி எங்களைக் கருணையுடன் பார்த்து வரம் தர வேண்டும் அய்யா, எனக் கூறி இரு முனிவர்களும் தொழுது நின்றனர். அப்பொழுது இவ்வுலகை அளந்த திருமால் பதிலுரைப்பதை அன்பர்களே, நீங்கள் கேட்பீராக.
.
.
அகிலம்
========
ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது
தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார்
அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார்
முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல்
மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால்
பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச்
சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம்
நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக்
கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே
அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான்
மேலோக மேற மேல்வழிகள் காணாமல்
பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து
அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம்
இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில்
வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து
சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர்
இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப்
பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று
நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி
பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும்
உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ
கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார்
.
விளக்கம்
=========
மாமுனிவர்களே, நீங்கள் இங்கு நின்று தவம் செய்கின்ற காரணங்கள் என்ன? சொல்லுவீர்களாக என்று தேன் சிந்தும் பூவைக் கையில் வைத்திருக்கும் சந்நியாசி ஆகிய திருமால் கூறினார்.
.
அப்பொழுது மாமுனிவர்கள், திருமாலை நோக்கி, சுவாமி முன்பு ஒரு சமயம் நாங்கள் மும்மூர்த்திக்கும் முதல் மூர்த்தியாகிய ஈசரின் சொல் மாறாவண்ணம் மேலோகத்தை விட்டு உமது கருணைச் செயலால் இப்பூவுலகில் இறங்கி பொங்கும் துவாரகாபதி கடற்கரையை அணுகி, ஈசர் சொன்ன கட்டளையைக் கடலிடம் கூறி நீதி நெறியாய் நிற்க வேண்டும் என்று அதற்குச் சட்ட விதிகளை இட்டுக் கொடுத்தோம்.
.
ஈசர் கட்டளையை நிறைவேற்றி விட்டு, மீண்டும் கயிலையை நோக்கி நாங்கள் திரும்புவதற்குப் பார்க்கின்ற சமயத்தில் வைகுண்ட லோகத்திலிருந்து வந்து கொண்டிருந்த கலியனைக் கண்டு பயமுற்று, கயிலை உலகம் செல்லுவதற்கு எந்த வழியும் தெரியாமல் பூலோகத்திற்கே சென்று கண் கவிழ்ந்தவண்ணம் தவம் இருந்தோம்.
.
அப்பொழுது, திருமாலே நீர் அங்கு வந்து எங்களை நோக்கி, நீங்கள் போய் எனது திருச்செந்தூர்க் கடற்கரையில் சென்று, சூரியனைப் போன்ற பிரகாசமுள்ள பரிசுத்தமான வைகுண்டராசர் இக்கடலில் பிறப்பெடுத்து எங்களை அழைத்து அவரது பக்கத்தில் வைத்து, உயர்ந்த வைகுண்டபதவி தர வேண்டுமென்று ஒரு நினைவாகக் கடுந்தவம் செய்யுங்கள் என்று சொன்னீர்.
.
எல்லா உயிரினங்களையும் வளர்க்கும் சக்தி படைத்தவரே, அய்யாவே, ஈசரின் மைத்துனரே, கண்ணரே, நீர் ஏற்கெனவே உரைத்த மொழிகளைப் பற்றி உமது உள்ளம் அறியாதோ? என்று கூறித் தொழுதனர்.
.
.
அகிலம்
========
அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து
செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து
நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர்
வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து
அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே
.
விளக்கம்
=========
அப்பொழுது திருமால் மனம் மகிழ்ந்து, செப்புச் சிலையைப் போன்று அழகு பொருந்த சிரித்து, அவர்களிடம் பிள்ளைகளே, மிகவும் நல்லது.. நான் விரும்பிய தவத்தினைச் சிறப்பாகச் செய்தீர்கள். நீங்கள் வல்லமை உள்ளவர்களே. நீங்கள் எமது அருகில் வந்து நில்லுங்கள் என்று கூறி மகிழ்ந்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


