#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #🚹உளவியல் சிந்தனை #வாழ்வியல்பாடம்
துண்டு புராணம்...
இன்று வேட்டி, சட்டையே கல்யாணம், பொங்கலன்று அணியும் யூனிபாரம் மாதிரி ஆகிவிட்டிருக்கிறது. இதில் துண்டை யார் நினைவு வைத்திருக்க போகிறார்கள்?
அதனால் அடுத்த தலைமுறைக்கு துண்டின் மகிமையை பதிவு செய்து வைப்போம்.
துண்டு என்பது வெறும் ஒரு முழ துணியல்ல. கிராம கலாசாரத்தில் அது மிக முக்கிய கௌரவமான இடத்தை வகிக்கிறது.
துண்டு போடாமல் பெருசுகள் வெளியே கிளம்பவே மாட்டார்கள்.
துண்டு நம் தோளில் அமர்ந்தால் நமக்கு மரியாதை.
அதே துண்டை இடுப்பில் கட்டினால் பிறர்க்கு மரியாதை.
தோளில் துண்டை போட்டுக்கொண்டு கோயிலுக்கு போகிறவர்கள், இறைவன் முன்பு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொள்வது சாமிக்கு மரியாதை.
துண்டை எடுத்து தலையில் கட்டினால் களத்தில் இறங்கி புகுந்து விளையாட தயாராகிவிட்டார்னு அர்த்தம்.
முந்தைய காலத்தில் சட்டை எல்லாம் கிடையாது. துண்டுதான் சட்டை. பழைய சரத்குமார் படங்களில் நாட்டாமை விஜயகுமார் உடம்பு முழுக்க சந்தனத்தை பூசிகிட்டு துண்டை கட்டிகிட்டு தான் உலாவருவார். சட்டை போடமாட்டார். அதில் புலிநக சங்கிலி தெரிந்தால் நாட்டாமை.
தெரியாவிட்டால் அவன் பூட்டான் மை.
உட்காரும் முன் துண்டை எடுத்து திண்னையை சுத்தம் செய்யாமல் பெருசுகள் உட்கார மாட்டார்கள்.
திண்ணையா, அப்படின்னா என்னன்னு GenZ கிட்ஸ் கேப்பாங்க 🙂.. அதற்கு தனியாக எழுத வேண்டும்.
பெரியவர்கள் கோபம் வந்தால் துண்டை முறுக்கி சிறுசுகளை அடிக்கவும் அடிக்கலாம்.
அது அடிச்சது மாதிரியும் இருக்கும், அவர்களுக்கும் வலிக்காது.
கோபம் வந்து வெளியேறினால் அதற்கான சொற்றொடரே "துண்டை உதறி தோள்ல போட்டுட்டு போயிட்டாரு" என்பதுதான்.
யாரும் வேண்டாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியேறுபவன் கூட துண்டை உதறித் தோள்ல போட்டுகிட்டு தான் போவான். காரணம் "துண்டில் எதுவும் இல்லை. ஒளிச்சு வெச்சு எதையும் எடுத்துட்டு போகலை, பாத்துக்க" என்பதற்கான அடையாளம்.
தவிர வீட்டை விட்டு போகும் வழியில் மரத்தடியில் தூங்க வேண்டுமெனில் இன்ஸ்டன்டா துண்டு படுக்கையாகும்.
குளிரடிச்சால் மேலே போத்தி தூங்க உதவும் போர்வையாகும். சளி பிடிச்சால் துண்டு இன்ஸ்டன்ட் கர்ச்சிப் ஆகும். வெய்யிலடிக்குதா துண்டுதான் தொப்பி, தவிர ஊதல்காற்றில் வேட்டியே பறக்கும் ரிஸ்க்கா? துண்டை பெல்ட் ஆக இடுப்பில் கட்டிக்கலாம்.
துயரத்தில் கண்ணீர் சிந்தும் போது, உடனடியாக கண்ணீரைத் துடைத்து விடும் துண்டு தான் உடன்பிறவா சகோதரன், இடுக்கண் களையும் நண்பன்.
அடி உதை வாங்கியவன் துண்டை கீழே போட்டு விட்டு தப்பித்து ஓடினால் அதற்கான சொற்றொடர் "துண்டை காணோம், துணியை காணோம்" என ஓடினான் என்பதே.
சோகமான விஷயம் நடந்தால் துண்டை தலையில் முக்காடாக போட்டுகிட்டு உட்காருவர்.
அப்படி உக்காந்தா பெரிய சோகம் நடந்திருச்சுனு அர்த்தம், வர்றவங்க எல்லாம் "என்னப்பா கப்பல் கவுந்துருச்சா" ன்னு கேப்பாங்க. அதுவும் ஓர் மொழி.
ரொம்ப அவமானகரமான விஷயம் நடந்தால் துண்டால் தலையை மூடிக்கிட்டு ஊருக்குள் உலாவருவார்கள்.
முள்ளுக்காட்டில் நடக்கையில் வேட்டி கிழிந்தால் உடனடியாக மானங்காக்கும் தோழன் துண்டு. அப்போது துண்டு வேட்டியாகும்.
பஞ்சாயத்தில் பிரச்சனை வந்தால் துண்டை போட்டு தாண்டி சத்தியம் செய்யலாம். அந்த அளவு தன்மானம், மரியாதையுடன் தொடர்புள்ள விஷயம் துண்டு. இன்னமும் கிராமங்களில் 'நான் சொல்வது உண்மை,. வேணும்னா துண்டை போட்டு தாண்டுகிறேன்" என்பார்கள்.
சந்தையில் பேரம் பேசும்போது விரல்களை துண்டால் மூடிக்கிட்டு பேரம் பேசலாம்.
அதுக்குன்னு தனி துண்டு மொழியே இருக்கு.
காய்கறி விக்கறவங்க துண்டை எடுத்து சும்மா தலையில் கட்டி அதுக்கு மேல தான் கூடையை வெப்பாங்க. தலையில் நேரடியாக பாரத்தை குறைப்பதற்காக.
அவ்ளோ ஏன் நாட்டின் பட்ஜெட் தாக்கல் சமயம் பற்றாக்குறை வந்தால் "பட்ஜெட்டில் துண்டு விழுந்தது" எனத்தான் பத்திரிக்கைகளில் சொல்லுவார்கள்.
கேஷுவலா அணிவதற்கு பட்டாபட்டி, கலர் துண்டு. அபிஷியலா அணிய வெள்ளைத் துண்டு, விசேஷத்துக்கு அணிய பட்டுத்துண்டு.
இப்பேர்ப்பட்ட துண்டை இப்ப யாரும் சட்டை பண்ணுவதே கிடையாது என்பது தான் வருத்தம்.
இறுதியில் அதே துண்டு கிழியும் போது கோவணமாக மாறி மானத்தை மறைப்பது தான் அதன் உச்சகட்ட பரிணாமம். உயரிய தியாகம்.
அதனால் இப்படி எல்லாம் துண்டு புராணத்தை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டுன்னு துண்டு துண்டாக பதிவு பண்ணி வெச்சா தான் வருங்கால தலைமுறைக்கு துண்டின் மகிமை தெரியும்.
பின்னுரை :
இப் பதிவை படித்து விட்டு யாராவது வாயில் துண்டை பொத்திக் கொண்டு விக்கி விக்கி அழுதால் நான் பொறுப்பல்ல. 😃
வாழ்க வளத்துடன் நலத்துடன்...


