இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் ரயில்வே துறையில் 30 ஆயிரம் பணியிடங்கள் ஒழிப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநிலக்குழு கடும் கண்டனம்.
மே 2 தமிழ்நாடு முழுவதும் வாலிபர் சங்கம் போராட்டம்
இந்திய ரயில்வே வாரியத்தின் இயக்குனர் அமித் சிங் மெஹ்ரா, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் 2 % இந்த சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 14.80 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 2 சதவீத இலக்கின் கீழ் 29,608 பணியிடங்கள் குறைக்க உள்ளனர். இதன் வாயிலாக தென்னக ரயில்வேயில் மட்டுமே 2,000 பணியிடங்கள் வரை பறிபோகும் என தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய பணியிட ஒழிப்பு ஒவ்வோராண்டும் தொடர்ந்து ரயில்வே நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. 2024-25 இல் 28,815 பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. இளைஞர் மத்தியில் பெரும் அதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகமய பொருளாதாரப் பாதையின் "வேலை பறிப்பு வளர்ச்சி" (Jobless Growth) என்பதற்கு ஒரு அரசுத் துறையே பெரும் சாட்சியமாக விளங்குகிறது. இந்த காலத்தில் ரயில்வே வளர்ச்சி அபரிமிதமானது. சரக்கு போக்குவரத்து 74 சதவிகிதம், என்ஜின்கள் 51 சதவிகிதம், தண்டவாளம் 25 சதவிகிதம் அதிகரிப்பை கண்டுள்ளன. ஆனால், 1991 க்கு பின்னர் 25 ஆண்டுகளில் இவ்வாறு ஒழிக்கப்பட்ட பணியிடங்கள் 1.7 லட்சம் ஆகும். ஆனால், பணியிட ஒழிப்பு பிரச்சனை இன்னும் ஆழமானது. அனுமதிக்கப்பட்ட பணி இடங்கள் குறைக்கப்பட்டாலும், குறைக்கப்பட்ட இடங்களாவது நிரப்பப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. அப்படி நிரப்பப்படாத இடங்களான 2.5 லட்சத்தையும் சேர்த்தால் மொத்தம் 4.2 லட்சம் இடங்கள் 25 ஆண்டுகளில் பறி போயிருக்கின்றன. ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்பு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்த மோடி அரசு, ஒரு துறையில் மட்டுமே ஒவ்வோராண்டும் பல்லாயிரக் கணக்கான வேலை வாய்ப்புகளை பறித்து வருகிறது. இதற்கு காரணம் தனியார்மயம், ஒப்பந்த பணி என்கிற அரசின் கொள்கையே ஆகும்.
மோடி அரசு குறிப்பாக அரசுத் துறையின் வேலை வாய்ப்புகள் கடுமையாக குறைத்து வேலையின்மை விகிதத்தை அதிகப்படுத்த மோடி அரசு திட்டமிடுகிறது, இந்தியாவில் இளைஞர்கள் மீது எந்த ஒரு அக்கறை கொள்ளாமலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தாமல் நிலுவையில் உள்ள பணியிடங்களை குறைத்து இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கிறது ரயில்வே துறையில் பணியாற்றலாம் என லட்சக்கண இளைஞர்கள் படித்து வரும் இந்நிலையில் அவர்களுக்கு அநீதியை இழைத்து இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
மோடி அரசின் தவறான நிர்வாகத் திறனை கண்டித்து ரயில்வே துறையில் ஒழிக்கப்பட்ட பணியிடங்களை மீண்டும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை உறுதிப்படுத்திட வலியுறுத்தி தமிழ்நாட்டில் சென்னை , விழுப்புரம் , சேலம் , கோவை , திருச்சி , மதுரை , திருவாரூர் , கன்னியாகுமரி ஆகிய மையங்களில் மோடி அரசை கண்டித்து மே 2ம் தேதி போராட்டம் நடத்திட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாடு மாநில குழு அறைகூவல் விடுக்கிறது....
செல்வராஜ்
மாநிலத் தலைவர்
எஸ்.கார்த்திக்
மாநிலச் செயலாளர்
#DYFI #dyfitamilnadu #railways #southrailway #📺அரசியல் 360🔴


