தமிழ்சீயான்43
1K views 29 days ago
என்றும் கன்னி என்பது இயேசுவின் தாயான கன்னிமரியம்மாளின் சிறப்பு பெயர்களுள் ஒன்றாகும். தூய ஆவியின் வல்லமையால் இறை மகனை தம் வயிற்றில் சுமந்த மரியா, இயேசு பிறப்பதற்கு முன்பும், அவரை வயிற்றில் கருத்தாங்கிய பொழுதும், அவரைப் பெற்றெடுத்தப் பின்பும் கடவுளின் அருளால் கன்னிமை குன்றாமல் பாதுகாக்கப்பட்டார் என்ற கத்தோலிக்க நம்பிக்கையை இந்தப் பெயர் சுட்டிக்காட்டுகிறது. இதனை ஏற்க மறுக்கும் சில பிரிவினைச் சபையினர் கன்னிமரியம்மாளுக்கு வேறு பிள்ளைகள் இருந்தனர் எனக் கூறி அதற்கு ஆதாரமாக வேதாகம வசனங்களைக் காட்டுவர். அதற்கான பதில்களையே இப்பதிவில் தருகிறோம். 1. "மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்" (லூக்கா 2:7) என்று எழுதப்பட்டிருப்பது, அவருக்கு வேறு பிள்ளைகளும் இருந்தார்கள் என்பதைத்தானே குறிக்கிறது? 'அவர்கள் பெத்லகேமில் இருந்தபொழுது மரியாளுக்குப் பேறுகாலம் வந்தது. அவர் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்.' (லூக்கா 2:6-7) என்று நற்செய்தி கூறுகிறது. கிறிஸ்துமஸ் பெருவிழா திருப்பலியில் இந்த நற்செய்தி வாசகத்தை கேட்ட புனித ஜெர்த்ருத் (1256-1302), "இயேசு மட்டுமே மரியன்னைக்கு மகனாக இருக்கும்போது, 'மரியாள் தம் தலைமகனைப் பெற்றெடுத்தார்' என்று நற்செய்தியாளர் குறிப்பிடுவது ஏன்?" என சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு காட்சி அளித்த தேவமாதா, "நற்செய்தியாளர் எழுதியிருப்பது சரியே. ஏனெனில் நான் இயேசுவைக் கருத்தாங்கிப் பெற்றது மட்டுமின்றி, கல்வாரி மலையிலே கிறிஸ்தவர்கள் அனைவரையும் ஞான விதமாய் பெற்றேன். அதுமுதல் அவர்கள் அனைவரும் எனது பிள்ளைகளாகவும், இயேசுவின் சகோதர சகோதரிகளாகவும் இருக்கிறார்கள்" என்று தெளிவுபடுத்தினார். 'தலைமகன்' அல்லது 'தலைப்பேறான மகன்' என்ற பதம், முதல் குழந்தையைக் குறிக்கிறது என்பது உண்மையே. ஆனால் இரண்டாவது குழந்தை பிறந்தால் தான், முதல் குழந்தையை தலைமகன் என்று அழைக்க வேண்டும் என்பதில்லை. யூத மரபில் தலைமகனுக்கு ஒரு சிறப்பிடம் இருந்தது. "ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்" என்று மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியுள்ளது." (லூக்கா 2:23) இயேசு 'இறைமகன்', 'கடவுளுக்கு அர்ப்பணமானவர்' என்பதை உணர்த்த நற்செய்தியாளர் 'தலைமகன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். "இயேசு கிறிஸ்து கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு." (கொலோசையர் 1:15) என்று திருத்தூதர் பவுல் சான்று பகர்கிறார். "இவ்விறுதி நாள்களில், கடவுள் தம் மகன் இயேசு வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அவர் தம் முதற்பேறான இவரை உலகிற்கு அனுப்பினார்." (எபிரேயர் 1:2,6) இறைமகன் இயேசுவின் பொருட்டு யோசேப்பும், மரியாளும் தூயவர்களாக வாழ்ந்தார்கள். "ஏனெனில், கடவுளே அவர்களில் செயலாற்றி, தம் திருவுளப்படி செயல்படுவதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் அளித்தார்." (பிலிப்பியர் 2:13) "இயேசு மட்டுமே மரியாளின் ஒரே மகன் என்றாலும், அவர் மீட்பளிக்க வந்த அனைத்து மனிதரிடமும் மரியாளின் ஆன்மீகத் தாய்மை விரிவடைகிறது: 'பல சகோதர சகோதரிகளிடையே, அதாவது நம்பிக்கை கொண்டோரிடையே தலைப்பேறாக' (உரோமையர் 8:29) நியமிக்கப்பட்ட மகனையே அவர் பெற்றெடுத்தார்; நம்பிக்கை கொண்டோரை உருவாக்கி வளர்ப்பதில், அவர் தாய்க்குரிய அன்போடு ஒத்துழைக்கிறார்." (கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்வி எண். 501) எனவே, இயேசுவைத் தவிர வேறு யாரையும் மரியாள் பெற்றெடுக்கவில்லை என்பது உறுதி. 2. "மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை" (மத்தேயு 1:25) என்று நற்செய்தி கூறுவதற்கு, அதன்பிறகு உறவு கொண்டார் என்பது தானே அர்த்தம்? "இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்" (மத்தேயு 28:20) என்று இயேசு கூறினார். அப்படியெனில், முடிவுக்கு பிறகு அவர் நம்மோடு இருக்க மாட்டார் என்று அர்த்தம் கொள்ள முடியுமா? புனித யோசேப்பின் மனநிலையை நாம் சரியாக புரிந்துகொண்டால், மரியாளின் கன்னிமை பற்றிய சந்தேகங்களுக்கு இடமில்லாமல் போய்விடும். 'மரியாளுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியாள் கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாளை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கி விடத்திட்டமிட்டார்' (மத்தேயு 1:18,19) என்று நற்செய்தி எடுத்துரைப்பதைக் காண்கிறோம். இதிலிருந்தே, மற்றொருவருடைய மனைவியைத் தன்னுடையவராக ஏற்றுக்கொள்ள யோசேப்புக்கு மனம் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. யோசேப்பு பிறரை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாதவர் என்பதால், மரியாளை மறைவாக விலக்கத் திட்டமிடுவதைக் காண்கிறோம். 'அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாளை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது பரிசுத்த ஆவியால் தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்' (மத்தேயு 1:20-21,24) என்று நற்செய்தி கூறுகிறது. இதன் மூலம் யோசேப்பு, கடவுளின் திட்டத்துக்கு தம்மை முழுமையாக அர்ப்பணித்தார் என்பதை அறிந்து கொள்கிறோம். மரியாள் மற்றொரு மனிதரால் கருவுற்றிருக்கிறார் என்ற சந்தேகத்தால் அவரை விலக்கிவிடத் திட்டமிட்ட யோசேப்பு, மரியாள் பரிசுத்த ஆவியால் கருவுற்றிருக்கிறார் என்பதை அறிந்ததும் அவரை ஏற்றுக்கொள்கிறார். இவ்வுலகில் பிறக்க இருந்த மீட்பருக்கும், அவரது தாய்க்கும் பாதுகாவலராக விளங்க வேண்டுமென்ற கடவுளின் திட்டத்தை, யோசேப்பு சரியாகப் புரிந்து கொண்டார் என்பது இதன் மூலம் தெளிவாகிறது. ஆகவே, 'மரியாள் தம் மகனைப் பெற்றெடுக்கும் வரை யோசேப்பு அவரோடு கூடி வாழவில்லை' (மத்தேயு 1:25) என்ற வார்த்தைகள், இறைமகனின் மாட்சியைக் காணும் முன்பே தன்னடக்கத்துடன் இருந்த யோசேப்பு, இயேசு பிறந்தபிறகு எத்துணை பரிசுத்தராக விளங்கியிருப்பார் என்பதை புரிந்துகொள்ள உதவுகின்றன. "மரியாளின் கணவர் யோசேப்பு நேர்மையாளர்" (மத்தேயு 1:19) என்ற புகழுரையே யோசேப்பின் பரிசுத்தத்துக்கு சான்று பகர்கின்றது. எனவே, மரியாளின் கன்னிமை மீதான சந்தேகம் தேவையற்றது. 3. யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா?" (மாற்கு 6:3) என்று நாசரேத் ஊர்க்காரர்கள் கூறியது மரியாளின் மற்றப் பிள்ளைகளைப் பற்றிதானே? "தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்" என்ற இயேசுவின் வார்த்தைகளுக்கு ஏற்ப, அவரது போதனைகளையும், வல்ல செயல்களையும் கண்டாலும் நாசரேத்தூர் மக்கள், அவரை இறை மனிதராக ஏற்றுக்கொள்ளத் தயங்கினார்கள். எனவே அவர்கள், "இவர் தச்சர் அல்லவா! மரியாளின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா?" (மாற்கு 6:3) என்று கேள்வி எழுப்பினார்கள். இதனால் இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களும், சகோதரிகளும் இருந்தார்கள் என்ற முடிவுக்கு நாம் வர முடியாது. ஏனெனில் யூத வழக்கத்தின்படி, நெருங்கிய உறவினர்களும், அவர்களது பிள்ளைகளும் சகோதரர், சகோதரி என்றே அழைக்கப்படுகின்றனர். இதற்கு ஆதாரமாக விவிலியத்தில் இருந்து நாம் சில சான்றுகளைக் காட்ட முடியும். ஆபிரகாம் தமது தம்பி மகனான லோத்திடம், "நாம் சகோதரர்" (தொடக்கநூல் 13:8) என்று கூறுவதைக் காண்கிறோம். லாபான் தமது மருமகனான யாக்கோபை நோக்கி, "நீ என் சகோதரன் என்பதற்காக ஒன்றும் வாங்காமல் எனக்கு வேலை செய்யலாமா?" (தொடக்கநூல் 29:15) என்று கேட்பதைக் காண்கிறோம். நற்செய்திகளில் சுட்டிக்காட்டப்படும் யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் போன்றவர்களும் இயேசுவுக்கு இத்தகைய உறவுமுறை சகோதரர்களே. *தமிழ் விவிலியத்தின் பொது மொழிபெயர்ப்பில், பொருள் தெளிவுக்காக 'சகோதரர்' என்பதற்கு பதிலாக 'உறவினர்' என்ற பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும், இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரிகள் யாரும் இல்லை என்பதும் தெளிவு. ஏனெனில் மரியாளும் யோசேப்பும் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றபோது, பன்னிரண்டு வயது சிறுவனான இயேசுவுடன் சகோதர, சகோதரிகள் யாரும் உடன் சென்றதாக கூறப்படவில்லை. (லூக்கா 2:41-52) இயேசுவின் சகோதரர்களாக கருதப்படும் யாக்கோபு, யோசே ஆகியோர் மரியாள் என்ற பெயர் கொண்ட மற்றொரு தாயின் பிள்ளைகள். அவரை 'இயேசுவின் தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாள்' (யோவான் 19:25) என நற்செய்தியாளர் குறிப்பிடுகிறார். 'அவர்களுள் மகதலா மரியாளும் யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாளும், சலோமி என்பவரும் இருந்தனர்.' (மாற்கு 15:40) இறுதியாக, இயேசுவுக்கு உடன்பிறந்த சகோதரர்களோ, சகோதரிகளோ இருந்திருந்தால், அன்னை மரியாளை அவர் யோவானின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டிய (யோவான் 19:27) தேவை இருந்திருக்காது. எனவே, யூதா, சீமோன் உட்பட இயேசுவின் சகோதர, சகோதரிகளாக நற்செய்தியில் காணப்படும் யாரும் மரியாளின் சொந்த பிள்ளைகள் இல்லை என்பது உறுதியாகிறது. ஆகவே, கடவுளின் தாயாக மட்டுமே கன்னி மரியாள் வாழ்ந்தார் என்பதும் தெளிவாகிறது. சர்வேசுரனுடைய அர்ச்சியசிஷ்ட மாதாவே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். கன்னியர்களுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஷ்ட கன்னிகையே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும். #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝️இயேசுவே ஜீவன் #✝️இயேசு #வேளாங்கண்ணி மாதா
11 likes
13 shares

More like this