#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.05.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
வைகுண்டர் முருகனுக்கு அருளல் தொடர்ச்சி :
===============================================
அகிலம்
=======
வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள்
எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம்
அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன்
காணிக்கை வேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூசையே ராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ
ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ
.
விளக்கம்
=========
வானம் சூழ்ந்த இவ்வுலகில் வாழுகின்ற மண்டபங்கள் எத்தனை உண்டோ அத்தனையிலும் உள்ள தேவர்கள் எல்லாரும் அறியும்படியாகக் கூறுகிறேன் கேட்பீர்களாக. காணிக்கை வாங்காதீர். கைக்கூலி கேளாதீர். மாணிக்கத்தாலான வைகுண்டத்தில் இருக்கும் நாரயணரை நினைத்தபடி வாழுங்கள். பூஜை, பலி வகைகள், தீபம் போன்றவற்றை ஏற்காதீர். அவற்றுக்காக ஆசைப்படவும் செய்யாதீர். பிறருக்கு வஞ்சனை, துன்பம் போன்றவற்றைச் செய்யாதீர்.
.
.
அகிலம்
========
ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ
பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ
தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ
.
விளக்கம்
=========
இதுவரை நியாயமுறை தவறி நன்றி மறந்து வாழ்ந்தீர். இனி மாயநினைவை மனதில் அனுமதிக்காது வாழ்ந்து வாருங்கள். வைகுண்டா என்னும் மந்திர சொல்லை மனதில் நினைத்தவண்ணம் வாழ்ந்து வாருங்கள். பொய்யான தேரோட்டம் பூஜை புனக்காரம் ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளதீர்கள். ஆடல் அழகிகள் கைகளினால் முத்திரைகளைக் காட்டி ஆடுவது, சப்பிரங்கள் எடுத்துச் சுற்றுதல் போன்றவற்றைச் செய்யாதீர்.
.
.
அகிலம்
========
மோதிப்பே சாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ
ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ
கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும்
விழுந்து நமஸ்காரமுதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
.
விளக்கம்
=========
யாரிடமும் மோதிப் பேசாதீர். ஆசையை மனதிலிருந்து அகற்றி விடுங்கள். ஆலத்தி கைவிளக்கு ஆராட்டு இவற்றைப் பார்க்காதீர். சரவிளக்குத் தீபத்தைப் பார்க்காதீர் எந்த வகையான பூவையும் ஏற்றுக் கொள்ளாதீர். கொழுந்து மஞ்சணை, மாலைகள், திருநீறு, சந்தனம், தரையில் விழுந்து இறைவணக்கம் செய்தல் ஆகியவை இன்று முதல் தேவை இல்லை என்று கூறி விடுங்கள்.
.
.
அகிலம்
=======
கூவென் றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ
ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ
ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ
எல்லாம் வெறுத்திருங்கோ இத்தனைபோ லுள்ளதெல்லாம்
.
விளக்கம்
========
எதையும் கூறும்போது கூக்குரலிட்டுக் கொக்கரித்துச் சத்தமிட்டுப் பேசாதீர். யாகம் போன்ற முறைகளை ஏற்றுக் கொள்ளாதீர். தீபரணை, திருவிழாக்கள் போன்ற எல்லாவற்றையும் வெறுத்து ஒதுக்குங்கள். ஆபரணம் அணியாமல் இருங்கள். அன்னீதம் செய்யாமல் அனைத்தையும் பெறுத்து ஒதுக்குங்கள்.
.
.
அகிலம்
=======
அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால்
வல்லாத்த கோபம் வரும்வை குண்டருக்கே
நல்லோரே யாகவென்றால் நியாயமதி மேநில்லும்
என்று வைகுண்டம் இயம்பக்கந் தனுரைப்பான்
மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே
நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார்
காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான்
.
விளக்கம்
=========
இவற்றை மீறினால் வைகுண்டராகிய எனக்குக் கோபம் உண்டாகும். நீங்கள் நல்லவர்களாக உயர நியாய நெறியில் நில்லுங்கள் என்று வைகுண்டர் கூறினார். உடனே, கந்தன் இப்பூவுலகை அளந்த வைகுண்ட நாரணரே, நீர் அருளிய சட்டத் திட்டங்களிலிருந்து அடியாராகிய நாங்கள் நிலை தவற மாட்டோம் எங்களை நீவிர் காப்பீராக என்று வைகுண்டரின் அடி தொழுதான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.


