18 வருஷமா ஒரு கப் கூட ஜெயிக்கல.. ஆனா 3000 கோடி லாபம் அள்ளிய ப்ரீத்தி ஜிந்தா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த 18 ஆண்டுகளாக ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத அணி பஞ்சாப் கிங்ஸ். ரசிகர்களால் தொடர்ந்து விமர்சிக்கப்படும் இந்த அணி, அதன் இணை உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தாவுக்கு எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி பலரையும் வாயடைக்கச் செய்துள்ளது. கோப்பையே ஜெயிக்காத ஒரு அணியால் எப்படி 8471 சதவீத லாபத்தை ஈட்ட முடிந்தது என்ற சுவாரஸ்ய தகவல் கிரிக்கெட் மற்றும் வர்த்தக வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
கடந்த 2008ல் ஐபிஎல் தொடர் அறிமுகமான போது, பஞ்சாப் அணியின் 23 சதவீத பங்குகளை வெறும் 35 கோடி ரூபாய்க்கு ப்ரீத்தி ஜிந்தா வாங்கினார். அந்த அணி இதுவரை 18 சீசன்களில் விளையாடி ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. 2014 மற்றும் 2025 ஆகிய 2 சீசன்களில் மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியது. கேப்டன்களை அடிக்கடி மாற்றுவது, நிலையான அணி இல்லாதது போன்ற காரணங்களால் இந்த அணி ஐபிஎல் வரலாற்றில் மிக மோசமான அணிகளில் ஒன்றாகவே முத்திரை குத்தப்பட்டுள்ளது. அந்த அணியின் வெற்றி சதவீதம் வெறும் 45 மட்டுமே. கடந்த இரு ஆண்டுகளாகவே ஸ்ரேயாஸ் ஐயர் வரவுக்கு பின் அந்த அணி முன்னணி அணியாக மாறி வருகிறது.
கடந்த காலங்களில் களத்தில் அந்த அணி எவ்வளவு மோசமாக செயல்பட்டாலும், வியாபார ரீதியாக ப்ரீத்தி ஜிந்தாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. தற்போது ஐபிஎல் அணிகளின் மதிப்பு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, பஞ்சாப் கிங்ஸ் அணியின் தற்போதைய ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 15000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில் 23 சதவீத பங்குகளை வைத்துள்ள ப்ரீத்தி ஜிந்தாவின் தற்போதைய சொத்து மதிப்பு 3000 கோடி ரூபாய்க்கும் மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 2008ல் அவர் முதலீடு செய்த 35 கோடி ரூபாய், 18 ஆண்டுகளில் சுமார் 8471 சதவீத அபரிமிதமான லாபத்தை கொடுத்துள்ளது.
கோப்பையை வெல்லாவிட்டாலும் ஐபிஎல் அணிகள் எப்படி லாபம் சம்பாதிக்கின்றன என்பது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஐபிஎல் அணிகளுக்கான பிரதான வருமானம் என்பது அவர்கள் பெறும் வெற்றியை மட்டுமே சார்ந்தது அல்ல. பிசிசிஐ மூலம் கிடைக்கும் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்கள், மைதான டிக்கெட் விற்பனை என பல வழிகளில் கோடிக்கணக்கில் பணம் கொட்டுகிறது. குறிப்பாக தற்போதைய ஒளிபரப்பு உரிமம் மட்டுமே 48000 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனையாகி உள்ளது. இதில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் அனைத்து அணிகளுக்கும் பிரித்து வழங்கப்படுகிறது.
அணிகள் வீரர்களின் ஏலத்திற்காக ஒவ்வொரு ஆண்டும் 100 கோடி ரூபாய் வரை மட்டுமே செலவிடுகின்றன. ஐபிஎல் தொடர் உலகளவில் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்துள்ளதால் பிரான்சைஸிகளின் மதிப்பும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு மிகப்பெரிய கார்ப்பரேட் வியாபாரம். கோப்பையை வெல்வதை விட, அணியின் பிராண்ட் மதிப்பும், முதலீடு செய்த பங்குகளுமே உண்மையான சொத்து என்பதை ப்ரீத்தி ஜிந்தாவின் இந்த லாபம் அப்பட்டமாக நிரூபித்துள்ளது. #📺வைரல் தகவல்🤩


