ShareChat
click to see wallet page
search
#📺வைரல் தகவல்🤩 #🎬 சினிமா #🧐நாட்டு நடப்பு #📽சினிமா தகவல்கள் #🗞அரசியல் தகவல்கள் ஜூன் 24 மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் 98வது பிறந்தநாள். பாவலர் மகனுக்கு எம்.எஸ்.வி பாராட்டு (2014 Facebook Memory) 'இசைஞானி' இளையராஜாவின் அண்ணன், மறைந்த பாவலர் வரதராஜனின் மகன்களில் ஒருவர், ஹோமோ ஜோ என்கிற பாவலர் மைந்தன் என்கிற ஜோவி. ஆர்.வி.உதயகுமார் இயக்கிய பல படங்களில் பணியாற்றிய இவர், விஜயகாந்த் நடித்த 'சின்னக் கவுண்டர்', கமல்ஹாசன் நடித்த 'சிங்கார வேலன்' உள்பட பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிக்கான வசனங்கள் எழுதியுள்ளார். 'சின்னக்கவுண்டர்' படத்தில் தமுக்கு அடிப்பவராகவும், 'சிங்கார வேலன்' உள்பட சில படங்களிலும் நடித்துள்ளார். ஜோவி என்கிற பெயரில், 'நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க' என்ற படத்தை இயக்கி வந்தார். 2002ல் அவரது இயக்கத்தில் உருவாக்க திட்டமிட்டிருந்த 'சோளம் வெதக்கையிலே...' என்ற படத்தில், 'சின்னக்கவுண்டர்' படத்தில் நடித்த சுதாகர் ஹீரோவாகவும், கவுசல்யா ஹீரோயினாகவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இளையராஜா இசையில் ஜோவி எழுதிய 'நெறபுடிச்சு நெறபுடிச்சு கருதறுக்கும்போது... குறுகுறுத்த கண்ணு ரெண்டும் எட்டி எட்டி பாக்கும்' என்ற பாடலின் ஒலிப்பதிவு ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடந்தது. அப்போது திடீரென்று அங்கு வந்தார், 'மெல்லிசை மன்னர்' எம்.எஸ்.விஸ்வநாதன். அடிக்கடி அவர் இளையராஜாவை நேரில் சந்தித்துப் பேசுவது வழக்கம். தான் ஒரு சீனியர். தனக்கு ஜூனியராக இருப்பவர்களைப் பார்ப்பதா என்று ஈகோ பார்க்க மாட்டார். அவ்வளவு இனிமையானவர், கலகலப்பானவர் எம்‌.எஸ்‌.விஸ்வநாதன். இசையால் தமிழ்த் திரையுலகை இளையராஜா குத்தகை எடுத்துக் கொண்டிருந்த காலக்கட்டம் அது. எம்.எஸ்.வியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஏ.வி.எம் பட நிறுவனம் கேட்டுக் கொண்டபோது, அவர்கள் இருவரும் மனமிசைந்து பணியாற்றிய படம், 'மெல்லத் திறந்தது கதவு'. பிறகு 'செந்தமிழ்ப் பாட்டு', 'செந்தமிழ் செல்வன்', 'இரும்பு பூக்கள்', 'விஷ்வ துளசி' ஆகிய படங்களில் எம்.எஸ்.வி.யும், இளையராஜாவும் இணைந்து பணியாற்றினார்கள். இரண்டு இசை மேதைகளும் ஈகோ பார்க்காமல் பணியாற்றியதை ஒட்டுமொத்த திரையுலகமே வியந்து பார்த்து ரசித்தது. விஷயத்துக்கு வருவோம். 'சோளம் வெதக்கையிலே...' படத்துக்கான பாடலின் ஒலிப்பதிவு முடிந்ததும், அங்கு தன்னைக் காண வந்த எம்.எஸ்.வியை வரவேற்று மகிழ்ந்த இளையராஜா, 'அண்ணே... கருதறுக்கும்போது பாடற ஒரு பாட்டை போட்டிருக்கேன். கேட்டுட்டு போங்க' என்றார். அதற்கு முன்பு மட்டுமின்றி, இப்போதும் கூட, 'மக்களைப் பெற்ற மகராசி' படத்துக்காக எம்.எஸ்.வி இசையில் உருவான 'மணப்பாறை மாடுகட்டி' பாடல்தான் பிரபலம் என்பது ரசிகர்களுக்கு தெரிந்திருக்கும். அதாவது, நிலத்தில் கருதறுக்கும் போது பாடப்படுவது போலமைந்த அந்தப் பாட்டு பெரிய ஹிட்டானது. இப்போது அந்த கருதறுக்கும் பாடலைக் கேட்டு மிகவும் ரசித்த எம்.எஸ்.வி., 'ரொம்ப நல்ல பாட்டா இருக்கே. யாருக்காக போட்டது?' என்று கேட்டார். உடனே ஜோவியை சுட்டிக்காட்டிய இளையராஜா, 'என்னோட அண்ணன் பாவலரோட மகன் இயக்கும் படத்துக்காக போட்ட பாட்டுண்ணே. எப்படி இருக்கு?' என்று கேட்டார். மீண்டும் எம்.எஸ்.வி சொன்னார், 'ராஜா கைய வெச்சா... அது ஹிட்டுதான்' என்று மனதாரப் பாராட்டினார். அதுதான் எம்.எஸ்.வி. மனதுக்குப் பிடித்திருந்தால், வயது வித்தியாசம் பார்க்காமல் பாராட்டுவார். இயக்குனராக ஜெயித்துக் காட்ட வேண்டும் என்ற வெறியில் இருந்த ஜோவிக்கு எம்.எஸ்.வி பாராட்டு, நன்மை பயக்கும் உரமானது. ஜூன் 24ம் தேதி எம்.எஸ்.வி பிறந்த நாள். 1928ல் பிறந்தார். 98வது வயதைக் கொண்டாட வேண்டிய அவர் நம்மிடம் இல்லை. மேலும், ஜோவியும் இல்லை. அவர் கடந்த 2020 ஜூலை 15ல் இறந்துவிட்டார். அதுசரி, யார் இந்த ஜோவி? பாவலர் வரதராஜன் மகன்களில் ஒருவரான இவர், இளையராஜாவின் இன்னொரு சகோதரர், மறைந்த தயாரிப்பாளர் ஆர்.டி.பாஸ்கருக்கு ஒரு சிறுநீரகத்தை தானமாகக் கொடுத்த பாச மகன். தன் சித்தப்பா இளையராஜாவுடன் இணைந்து போட்டோ கூட எடுத்துக்கொள்ளும் சந்தர்ப்பம் அமையாத இவர், தனது தம்பி யுவன் சங்கர் ராஜாவின் இசையில் 'நாலு பேரும் ரொம்ம்ம்ப நல்லவங்க' என்ற படத்தை இயக்கி வந்தார். அவர் ஒரு கமர்ஷியல் இயக்குனராக வெற்றிபெற்றாக வேண்டும் என்ற என் எண்ணம் கடைசிவரை நிறைவேறவில்லை. போட்டோ :எம்.எஸ்.வி மற்றும் நான்
📺வைரல் தகவல்🤩 - ShareChat