ShareChat
click to see wallet page
search
பைபிள் வாசகங்கள்: ஏப்ரல் 9 : முதல் வாசகம் வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 3: 11-26 கால் ஊனமுற்றிருந்தவர் நலமடைந்தபின் பேதுருவையும் யோவானையும் விடாமல் பற்றிக்கொண்டிருக்க, எல்லா மக்களும் திகிலுற்றுச் சாலமோன் மண்டபம் என்னும் இடத்திற்கு ஒருசேர ஓடிவந்தனர். பேதுரு இதைக் கண்டு மக்களைப் பார்த்துக் கூறியது: “எருசலேம் மக்களே, நீங்கள் ஏன் இதைப் பார்த்து வியப்படைகிறீர்கள்? நாங்கள் எங்கள் சொந்த வல்லமையாலோ இறைப்பற்றாலோ இவரை நடக்கச் செய்துவிட்டதுபோல் ஏன் எங்களையே உற்றுப் பார்க்கிறீர்கள்? ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் நம் மூதாதையரின் கடவுள் தம் ஊழியர் இயேசுவைப் பெருமைப்படுத்தினார். ஆனால் நீங்கள் அவரைப் புறக்கணித்துப் பிலாத்திடம் ஒப்புவித்து விட்டீர்கள். அவன் அவருக்கு விடுதலைத் தீர்ப்பு அளிக்க முயன்றபோதும் நீங்கள் அவரை மறுதலித்தீர்கள். நீங்கள் தூய்மையும் நேர்மையுமானவரை மறுதலித்துக் கொலையாளியை விடுதலை செய்யுமாறு வேண்டிக் கொண்டீர்கள். வாழ்வுக்கு ஊற்றானவரை நீங்கள் கொன்றுவிட்டீர்கள். ஆனால் கடவுள் இறந்த அவரை உயிரோடு எழுப்பினார். இதற்கு நாங்கள் சாட்சிகள். இதோ உங்கள் கண்முன் நிற்கிற இவர் உங்களுக்குத் தெரிந்தவர். இயேசுவின் பெயரே இவருக்கு வலுவூட்டியது. அவர் பெயர்மீது கொண்டிருந்த நம்பிக்கையால்தான் இது நடந்தது. இந்த நம்பிக்கையே உங்கள் அனைவர் முன்பாகவும் இவருக்கு முழுமையான உடல் நலனைக் கொடுத்துள்ளது. அன்பர்களே, நீங்களும் உங்கள் தலைவர்களும் அறியாமையினாலேயே இப்படிச் செய்துவிட்டீர்கள் என எனக்குத் தெரியும். ஆனால் கடவுள், தம் மெசியா துன்புற வேண்டும் என்று இறைவாக்கினர் அனைவர் வாயிலாகவும் முன்னறிவித்ததை இவ்வாறு நிறைவேற்றினார். எனவே உங்கள் பாவங்கள் போக்கப்படும்பொருட்டு மனம்மாறி அவரிடம் திரும்புங்கள். அப்பொழுது ஆண்டவர் புத்துயிர் அளிக்கும் காலத்தை அருளி உங்களுக்காக ஏற்படுத்திய மெசியாவாகிய இயேசுவை அனுப்புவார். விண்ணேற்றமடைந்த இயேசு யாவும் சீர்படுத்தப்படும் காலம்வரை விண்ணுலகில் இருக்கவேண்டும். பழங்காலத் தூய இறைவாக்கினர் வாயிலாகக் கடவுள் இந்தக் காலத்தைக் குறித்துக் கூறியிருந்தார். மோசேயும், ‘உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்கள் சகோதரரிடமிருந்து என்னைப்போல் ஓர் இறைவாக்கினரைத் தோன்றச் செய்வார். அவர் உங்களுக்குக் கூறும் எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிசாயுங்கள். அந்த இறைவாக்கினருக்குச் செவிசாய்த்துக் கீழ்ப்படியாத எவரும் மக்களினின்று அடியோடு அழிக்கப்படுவர்’ என்று கூறியுள்ளார். சாமுவேல் தொடங்கி இறைவாக்குரைத்த அனைவரும் இந்தக் காலத்தைப்பற்றி அறிவித்து வந்தனர். அந்த இறைவாக்கினர் உரைத்தவற்றை உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்கள். கடவுள் ஆபிரகாமிடம், ‘உன் மரபினர் வழியாக மண்ணின் மக்களினங்கள் அனைத்தும் ஆசி பெறும்’ என்று கூறி உடன்படிக்கை செய்தார். கடவுள் உங்கள் மூதாதையரோடு செய்த அந்த உடன்படிக்கையையும் உரிமையாக்கிக்கொள்பவர்கள் நீங்களே. ஆகையால், நீங்கள் அனைவரும் உங்கள் தீய செயல்களை விட்டு விலகி ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே, கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து முதன்முதல் உங்களிடம் அனுப்பினார்.” ஆண்டவரின் அருள்வாக்கு. ஏப்ரல் 9 : பதிலுரைப் பாடல் திபா 8: 1a,4. 5-6. 7-8 (பல்லவி: 1ab) பல்லவி: ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா! 1a ஆண்டவரே! எங்கள் தலைவரே! உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு மேன்மையாய் விளங்குகின்றது! 4 மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? - பல்லவி 5 ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். 6 உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படிச் செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி 7 ஆடுமாடுகள், எல்லா வகையான காட்டு விலங்குகள், 8 வானத்துப் பறவைகள், கடல் மீன்கள், ஆழ்கடலில் நீந்திச் செல்லும் உயிரினங்கள் அனைத்தையும் அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர். - பல்லவி நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி திபா 118: 24 அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே; இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம். அல்லேலூயா. ஏப்ரல் 9 : நற்செய்தி வாசகம் மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்று எழுதியுள்ளது. ✠ லூக்கா எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 24: 35-48 அக்காலத்தில் சீடர்கள் வழியில் நிகழ்ந்தவற்றையும், இயேசு அப்பத்தை பிட்டுக் கொடுக்கும்போது அவரைக் கண்டுணர்ந்துகொண்டதையும் அங்கு இருந்தவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். சீடர்கள் இவ்வாறு பேசிக்கொண்டிருந்தபோது இயேசு அவர்கள் நடுவில் நின்று, ‘‘உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று அவர்களை வாழ்த்தினார். அவர்கள் திகிலுற்று, அச்சம் நிறைந்தவர்களாய், ஓர் ஆவியைக் காண்பதாய் நினைத்தார்கள். அதற்கு அவர், ‘‘நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்? ஏன் இவ்வாறு உங்கள் உள்ளத்தில் ஐயம் கொள்கிறீர்கள்? என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், நானேதான். என்னைத் தொட்டுப் பாருங்கள்; எனக்கு எலும்பும் சதையும் இருப்பதைக் காண்கிறீர்களே; இவை ஆவிக்குக் கிடையாதே” என்று அவர்களிடம் கூறினார்; இப்படிச் சொல்லித் தம் கைகளையும் கால்களையும் அவர்களுக்குக் காண்பித்தார். அவர்களோ மகிழ்ச்சி மேலிட்டு, நம்பமுடியாதவர்களாய், வியப்புக்கு உள்ளாகி இருந்தார்கள். அப்போது அவர் அவர்களிடம், ‘‘உண்பதற்கு இங்கே உங்களிடம் ஏதேனும் உண்டா?” என்று கேட்டார். அவர்கள் வேகவைத்த மீன் துண்டு ஒன்றை அவரிடம் கொடுத்தார்கள். அதை அவர் எடுத்து அவர்கள்முன் அமர்ந்து உண்டார். பின்பு அவர் அவர்களைப் பார்த்து, ‘‘மோசேயின் சட்டத்திலும் இறைவாக்கினர் நூல்களிலும் திருப்பாடல்களிலும் என்னைப்பற்றி எழுதப்பட்டுள்ள அனைத்தும் நிறைவேற வேண்டும் என்று நான் உங்களோடு இருந்தபோதே உங்களுக்குச் சொல்லியிருந்தேனே” என்றார்; அப்போது மறைநூலைப் புரிந்துகொள்ளுமாறு அவர்களுடைய மனக் கண்களைத் திறந்தார். அவர் அவர்களிடம், ‘‘மெசியா துன்புற்று இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்றும், பாவமன்னிப்புப் பெற மனம் மாறுங்கள் என எருசலேம் தொடங்கி அனைத்து நாடுகளிலும் அவருடைய பெயரால் பறைசாற்றப்பட வேண்டும் என்றும் எழுதியுள்ளது. இவற்றுக்கு நீங்கள் சாட்சிகள்” என்றார். ஆண்டவரின் அருள்வாக்கு. ------------------------------------------------------------------------ மனக் கண்களைத் திறந்த இயேசு I திருத்தூதர் பணிகள் 3: 11-26 திருப்பாடல் 8: 1a, 4, 5-6, 7-8 (1ab) II லூக்கா 24: 35-48 மனக் கண்களைத் திறந்த இயேசு அறியாமையை விலக்கி, அறிவொளி பெறுவோம் அறியாமை என்பது மிகக் கொடியது. அது ஒருவரை அழிவுக்கு இட்டுச் செல்லும். இதனால்தான் கடவுள் இறைவாக்கினர் ஓசேயா வழியாக, “அறிவின்மையால், என் மக்கள் அழிகின்றார்கள்” (ஓசே 4:6) என்கிறார். ஆண்டவராகிய இயேசு யூதர்கள் உட்பட அனைவருக்கும் வாழ்வு கொடுக்க வந்தார். அவர்களோ திருச்சட்டம் அறியாதவர்கள் வழியாக அவரைச் சிலுவையில் அறைந்து கொன்று போட்டார்கள். யூதர்கள்தான் அறியாமையில் இப்படியொரு செயலைச் செய்துவிட்டார்கள் என்றால், இயேசுவோடு மூன்று ஆண்டுகள் உடனிருந்த சீடர்கள்கூட அவர் ஏன் சிலுவையில் அறைந்து கொல்லப்படவேண்டும் என்று அறியாதவர்களாக இருந்தார்கள். இத்தனைக்கும் இயேசு தம் பாடுகளை அவர்களுக்குப் பலமுறை முன்னறிவித்திருந்தும்கூட! இந்நிலையில்தான் உயிர்த்த ஆண்டவர் இயேசு தம் சீடர்களுக்குத் தோன்றி, அவர்களது மனக் கண்களைத் திறக்கின்றார்; தான் இறந்து உயிர்த்தெழுவது பற்றி மறைநூலில் கூறப்பட்டிருப்பதைக் குறித்து, அவர்களுக்கு விளக்கிக் கூறுகின்றார். இதனால் அவர்கள் அறிவொளி பெறுகின்றார்கள். இதற்குப் பிறகு அறிவு தெளிந்தவர்களாய் உயிர்த்த ஆண்டவரைப் பற்றி அவர்கள் சான்று பகற்கின்றார்கள். இன்றைய முதல் வாசகத்தில் பேதுரு, பிறவியிலேயே கால் ஊனமுற்ற மனிதரை இயேசுவின் திருப்பெயரைச் சொல்லி, எழுந்து நடக்கச் செய்த பிறகு, திரண்டு வந்த மக்களைப் பார்த்து, “நீங்கள் அனைவரும் தீய செயல்களை விட்டுவிட்டு ஆசி பெற்றுக்கொள்வதற்காகவே கடவுள் தம் ஊழியரைத் தோன்றச் செய்து, முதன்முதலில் உங்களிடம் அனுப்பினார்” என்கிறார். இவ்வாறு சொல்லி, அவர்களின் மனக் கண்களைத் திறக்கின்றார் பேதுரு. கடவுள் அறியாமையில் இருக்கும் நமது மனக் கண்ணைத் திறக்கின்றார் எனில், நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டும். இன்று நாம் பதிலுரைப்பாடலாகப் பாடக்கேட்ட திருப்பாடல் 8 ஒரு புகழ்ப்பாடலாகும். இப்பாடல், சாதாரண நிலையில் இருந்த மனிதரைப் படைப்பின் சிகரமாக உயர்த்தியதைக் குறித்துக் கடவுளுக்கு நன்றி செலுத்துவதாக இருக்கின்றது. கடவுள் நம்மை மிகவும் உயர்த்தி இருக்கும்போது, நமது மனக் கண்ணைத் திறந்திருக்கும்போது அவரைப் போற்றிப் புகழ்வதுதான் நீதியானது. எனவே, நமது வாழ்வில் எத்தனையோ நன்மைகளைச் செய்த கடவுளை நாம் போற்றிப் புகழ்வோம், அவரது திருப்பெயரை உலகறிச் செய்வோம். மலையேறும் குழுவும் வழிகாட்டியும் ஒருசில இளைஞர்கள் சேர்ந்து மலையேறுவதற்குத் திட்டமிட்டார்கள். மலையேறும்போது தங்களை வழிகாட்டுவதற்கு ஒரு நல்ல வழிகாட்டி இருந்தால், நன்றாக இருக்குமே என்று அவர்களுக்குத் தோன்றியதால், அவர்கள் ஒரு கைதேர்ந்த வழிகாட்டியைத் தங்களோடு கூட்டிக்கொண்டு மலையேறத் தொடங்கினார்கள். வழிகாட்டி முன் செல்ல, இளைஞர்கள் அவர் பின்னால் சென்றுகொண்டிருந்தார்கள். மேலே ஏற ஏற காற்று மிகுதியாக இருந்தது. அதனால் அவர்கள் சற்று கவனமாகவே மலையேறினார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் போன பாதை முடிவுற்று, அதற்கு மேல் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவுக்கு இருந்தது. அதைப் பார்த்துவிட்டு இளைஞர்கள் வழிகாட்டியைப் பார்த்து, “எங்களை இப்படித் தவறாக வழிநடத்தி வந்துவிட்டீர்களே!” என்று புலம்பத் தொடங்கினார்கள். அப்போது வழிகாட்டி அவர்களைப் பார்த்து, “எதையும் தெரியாமல் பேசாதீர்கள். நான் போகிற பாதையில் என்னைப் பின்தொடர்ந்து வாருங்கள். உங்களைப் பத்திரமாக மலை உச்சிக்குக் கூட்டிக்கொண்டு சென்று, பத்திரமாக கீழே கொண்டு போய்ச் சேர்க்கின்றேன்” என்றார். பின்னர் அவர் அவர்களிடம் சொன்னபோன்றே தனக்குத் தெரிந்த ஒரு பாதை வழியாக மலை உச்சிக்கு அவர்களைக் கூட்டிக்கொண்டு சென்று, பத்திரமாகக் கீழே இறக்கினார். இந்த நிகழ்வில் வரும் இளைஞர்களைப் போன்றுதான் பல நேரங்களில் நாம் எதுவும் தெரியாமல், அறியாமையில் இருக்கின்றோம். ஆனால், ஆண்டவர் இயேசு இதே நிகழ்வில் வரும் வழிகாட்டியைப் போன்று நமது மனக் கண்ணைத் திறந்து, நமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றார். அவரிடம் நம்மை ஒப்படைத்து, அவர் காட்டும் பாதையில் நாம் நடப்போம். ஆண்டவரின் வார்த்தை “என் காலடிக்கு உன் வாக்கே விளக்கு! என் பாதைக்கு ஒளியும் அதுவே!” (திபா 119: 105). தீர்மானங்கள் 1) ஆண்டவரைப் பற்றிய அறிவில் வளருவோம் 2) பார்வையற்ற ஒருவரால் மற்றவருக்கு வழிகாட்ட முடியாது என்பதால், நாம் ‘பார்வை பெற்ற’ மனிதர்களாவோம். 3) உயிர்த்த ஆண்டவரைப் பற்றி உரக்க அறிவிப்போம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். #பைபிள் வசனங்கள்