திருஞானசம்பந்த பெருமான் அருளிய தேவாரம் முதலாம் திருமுறை 75வது திருத்தலம்
திருவெங்குரு
அருள்மிகு திருநிலைநாயகி உடனுறை தோணியப்பர்
பவழமல்லி பிரம தீர்த்தம்
பாடல் எண் : 3
ஓரியல் இல்லா உருவமதாகி யொன் திறல் வேடன் அது உருவது கொண்டு காரிகை காண தனஞ்சயன்ற தன்னை கறுத்தவற்கு அளித்து உடன் காதல் செய்பெருமான்
நேரிசையாக அறுபதமுரன்று நிரை மலர்த்தாதுகண் மூச விண்டுதிர்ந்து வேரிகள் எங்கும் விம்மிய சோலை வெங்குருமேவியுள் வீற்றிருந்தாரே.
பொழிப்புரை:
தம் இயல்பிற்குப் பொருத்தமற்ற உருவமாய் மிக்க வலிமையுடைய வேடர் உருத்தாங்கி வந்து உமையம்மைகாண அருச்சுனனோடு ஒரு காரணங்காட்டிச் சண்டையிட்டு அவனுக்கு வேண்டும் பொருள்களை வழங்கி அன்பு செய்த பெருமானாகிய சிவபிரான், வண்டுகள் நேரிசைப் பண்பாடி முரன்று வரிசையாக மலர்ந்த மலர்களின் மகரந்தங்களில் புரள, அதனால் மலர்கள் விரிந்து தேன் உதிருவதால் தேன் எங்கும் விம்மிவழியும் சோலைகள் சூழ்ந்த வெங்குரு என்னும் சீகாழிப்பதியில் வீற்றிருந்தருள்கிறான்.
குறிப்புரை:
உமாதேவிக்காக விசயனைக் கோபித்து அருளுஞ் செய்த பெருமான் இவர் என்கின்றது. ஓர் இயல்பு இல்லா உருவமது ஆகி - ஒருதன்மையும் இல்லாத உருவத்தை மேற்கொண்டு. காரிகை - உமாதேவியார். தனஞ்சயன் - அருச்சுனன். கறுத்து அவற்கு அளித்து எனப்பிரிக்க. நேரிசை: ஒருபண். அறுபதம் - வண்டு. முரன்று - ஒலித்து. தாது கண் மூச - மகரந்தம் கண்ணில் மூட. வேரிகள் - தேன்கள். #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் #🙏🏼ஓம் நமசிவாய


