Makkal Mugam
#செய்திகள் #தற்போது செய்தி
🌹✍️ மக்கள் முகம் நாளிதழ் ✍️🌹
த.வெ.க. அமைச்சர் சரத்குமார் பதவி விலகக் கோரி வேலூரில் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம் – 100-க்கும் மேற்பட்டோர் கைது
வேலூர் மாவட்டம், வேலூரில் தமிழக வெற்றி கழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி, வேலூர் திமுக மாணவரணி சார்பில் மாவட்ட மாணவரணி செயலாளர் தேவராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. த.வெ.க.அமைச்சர் சரத்குமார் ஐபிஎல் கிரிக்கெட் மைதானத்தில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வெளியான வீடியோ தொடர்பாக எழுந்த சர்ச்சையையடுத்து, அவர் அளித்த விளக்கம் பொதுமக்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது. இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக மாணவரணி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம், மாநகர திமுக அலுவலகத்தில் இருந்து தொடங்கியது. மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் தி.அ. முகமதுசகி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வீனஸ் ஆர். நரேந்திரன், முன்னா ஷரீப், சுகுமார், வி.எம்.டி.ஏ. பாலாஜி, வி.எஸ். முருகன், குடியாத்தம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணி பொறுப்பாளருமான அமுலு விஜயன் உள்ளிட்ட மாவட்ட, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான திமுகவினர் பங்கேற்று, த.வெ.க. அமைச்சர் சரத்குமார் பதவி விலக வேண்டும் என முழக்கமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட திமுகவினரை போலீசார் கைது செய்து, காவலர் நல்வாழ்வு மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் மாலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.