#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே
நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள்
எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே
கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று
மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து
எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து
வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில்
.
விளக்கம்
=========
பிறகு திருமால் குருவாகிய ஈசரிடம் பதில் கூறலானார். என்னுடைய ஈசரே, என் முதற்பொருளே, நாம் இங்கே வந்த முக்கியமான காரியங்கள் என்ன என்று எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார்.
இதைக் கேட்ட ஈசரும், நாரணனே, உனது கலியழிக்கும் காரியத்தைச் செயல்படுத்து என்று அனுமதி அளித்தார்.
.
உடனே கட்டுக்கடங்கி இருந்த அக்கடற்கரையில் வந்திருந்த எல்லாரும் திருச்செந்தூரின் இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே உள்ள திறமை மிக்கோர் எல்லாரும் அங்கு வந்து குழுமினர்.
.
.
அகிலம்
========
சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல்
அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில்
சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை
உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு
தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார்
.
விளக்கம்
=========
இவ்வாறாக அங்கே சிலகாலம் அமர்ந்து இருக்கின்ற சமயத்தில், திருமால் தமக்கு மகனாக நியமிக்கப்பட்ட பொன்கூட்டுச் சடலத்தின் பெருமையைப் பற்றி அன்பர்களாகிய நீங்கள் மகிழ்வுறும்படி இனிக் கூறப் போகின்றோம் கேட்பீர்களாக.
.
.
அகிலம்
========
சீரான நல்ல தெட்சணா புமியிலே
பாரான நல்ல பதிதா மரையூரில்
தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில்
சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு
பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு
ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன்
நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும்
கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு
அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து
பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான்
இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு
செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான்
வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும்
தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு
.
விளக்கம்
=========
அழகு பொருநத்திய நல்ல தெச்சணாபூமியில் உயர்வு பொருந்திய நன்மையான தாமரை ஊர் என்னுமிடம் உள்ளது. அப்பூமி தவசு புரிய ஏற்ற இடமாகும். இங்குச் சிவசிவா என்னும் மந்திரச்சொல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஐவர் பஞ்சபாண்டவரில் வில்வீரத்தில் சிறந்தவனான அருச்சுனன், சிவனிடம் சிறந்த பாசுபத ஆயுதம் பெறுவதற்குச் சிவனை மனதில் நினைத்துத் தவம் புரிந்து, தவத்தில் வெற்றி கண்டு சிவனையும் சத்தியையும் கண்டு, அவர்களிடமிருந்து பாசுபதத்தைப் பெற்றுக் கொண்டது பெருமை வாய்ந்த இவ்வூரில் தான். இவ்வூரில் தான் முன்பு அதியரசன் கடடினமான தவம் புரிந்து ஈசனுடைய மனைவியான பார்வதியை மகளாகப் பெற்றெடுத்தான். அந்தத் தெச்சணாபூமிதான் தாமரையூர் என்றும், செவ்வூர் என்றும் மணவைப்பதி என்றும் கூறப்படுகிறது. வானலோகத்தில் வாழுகின்ற சிறந்த தெய்வேந்திரனும் சிவனைக் கண்டு தன் துன்பம் தீரத் தவம் இருந்ததும் இப்பூமிதான்.
.
.
அகிலம்
========
பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய
அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு
சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு
தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு
பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி
விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு
தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம்
பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார்
தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு
பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர்
அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே
செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து
.
விளக்கம்
=========
முன்னர்ப் பஞ்சபாண்டவர்களுக்குக் கண்ணன் உதவி செய்வதற்குச் செய்தியனுப்பி விட்டு அமர்ந்திருந்ததும் இந்தப் பூமியே. சாம்பசிவனை வழிபடும் சான்றோர் குலம் தழைத்து வளர்ச்சியுற்றதும் இப்பூமியிலே ஆகும். தாம்பிரபரணி கிளை ஆறுகள் அதிகமாகத் தழைத்து இருந்தது இப்பூமியில்தான். பராசர முனி மிகப்பெரிய தவம் செய்து சக்தி பொருந்திய வியாகரரைப் பெற்றெடுத்ததும் இப்பூமியில்தான். தவம் புரிய வேண்டுமென்று நினைத்தவர்கள் தாமரை ஊருக்கு வந்து பாவம் நீங்கப் பெற்று வாழ்வதாக உயர்ந்தோர் உரைப்பர். இவ்வாறு தவசு புரிவதற்குச் சிறப்பான அழகு வாய்ங்நத ஊர் இதுவாகும். சகலவிதச் செழிப்புகள் உள்ளதும், ஞானப்பால் அருந்திய மக்கள் வாழுகின்றதும் இவ்வூராகும். இத்தகைய சிறப்பான இந்த ஊரில் ஆதி சிவனின் அருளால் செம்மை பொருந்திய மகாவிஷ்ணு அவதாரம் எடுக்க உருவாக்கிய பொன் கூட்டுச் சடலம் பிறந்தது.
.
.
அகிலம்
========
பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி
மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப்
பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து
மாலேற்கப் பூசை மனையில் மறவாமல்
விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக்
கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில்
.
விளக்கம்
=========
அச்சடலம் வளர்ந்து பெருமைக்குரிய புகழுடன் வாழ்ந்து வந்தது. அப்பிள்ளை தமக்காக முன் அமைந்த பெண்ணை மறந்திடாதவாறு ஏற்று, அவளோடு உறவாடி பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவரது இல்லத்தில் திருமாலை மறவா வண்ணம் பூஜை செய்து, துதித்துத் தமது ஆத்மா விளங்கும்படியாக ஒரு பீடமிட்டு மிகவும் கட்டுப்பாடாக ஒரே மனதுடன் கலியன் தேசத்தில் வளர்ந்து வந்தார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.


