#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 27
இல்லறத்திலேயே ராஜயோகம்
இயற்கையானது மெய்ப்பொருள், ஆற்றல், உணர்வு என்று மூன்று நிலைகளாக இருக்கிறது, இயங்குகிறது, அறிகின்றது. ஆற்றல் என்ற பிரிவில் பரமாணு முதலாக எல்லாத் தோற்றங்களும் அடங்கும். ஏனெனில், தோற்றங்கள் அனைத்தும் நுண் துகள்களாகிய ஆற்றலின் திணிவுநிலைகளேயன்றி வேறில்லை. இந்த மூன்று நிலைகள் ஆங்கிலத்தில் Being, Becoming, Knowing என்று வழங்கப்படுகின்றன. “உணர்வு” என்பதை “அறிவு” என்றும் “மனம்” என்றும் இடத்திற்கு ஒப்பக் கூறுகிறோம். உணர்வு எனும் இயக்கம் உணர்ச்சி, கணிப்பு, நினைப்பு, தெளிவு எனும் நான்கு செயல்களாக இயங்கி வருகின்றது. மெய்ப்பொருள் தானே ஆற்றலாகித் தன் நிலையை அறிந்து கொள்கின்றது என்பது தான் பொருள். இச்சுருக்கமே வேதங்களின் ரகசியமாகும்.
மெய்ப்பொருளே உணர்வாக இயங்கினாலும் உணர்ச்சி எனும் இயக்கம் புலன்களைக் கொண்டு தொடங்குகின்றதால் அது ஆற்றல் களமாகிய பேரியக்க மண்டலத்தில் ஒரு எல்லைக்குட்பட்டு இயங்குகிறது. அப்போது தன் முழு மதிப்பும், உணர்வாக எழுச்சி பெற்ற நோக்கமும் மறந்துபட்டு ஒரு மயக்க நிலையில் வாழ்ந்து இன்ப துன்ப அனுபவங்களைப் பெறுகிறது.
மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவு நிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வளர்ச்சி பெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான். தனது நோக்கம் குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது, தனது மூலம் நோக்கி ஆராயும் போது, சிறிது சிறிதாக மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை உண்டாகின்றது. முழு விழிப்பு நிலை பெற்று விட்டால், அந்த அறிவு நிலையை ஞானம் என்றும் மெய் விளக்கம் என்றும் கூறுகின்றோம். தனது மூலமும் பிறவி நோக்கமும் மறந்து புலன்கள் கவர்ச்சியில் சிக்குண்டு இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலையை மாயை என்று கூறுகிறோம். மயக்க நிலை மாயை; விளக்க நிலை ஞானம். மயக்க நிலையிலிருந்து விளக்க நிலைக்கு மாற்றமடையும் முயற்சி நிலையே யோகம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹


